மன்மோகன் சிங் அவர்களுக்கு அஞ்சலி - இந்தியப் பொருளாதாரத்தை இவ்வுலகம் அறியச்செய்தவரே!

Leaders Condolence!
Manmohan Singh!Image credit - hindustantimes.com
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

  -அஞ்சலி

இருமுறை இந்தியாவை 

இனிதாக ஆண்டவரே!

பலமுறை மிகமுயன்று 

பணமதிப்பை உயர்த்தியவரே!

இந்தியப் பொருளாதாரத்தை

இவ்வுலகம் அறியச்செய்தவரே!

எமலோக எகானமியை

எழில்பெறச் செய்திடவே

சித்ரகுப்தன் அழைத்ததினால் 

சிவலோகம் சென்றீரோ!


தாராள மயமாக்கலைத்

தரணியிலே கொண்டுவந்து

ஊரார் அனைவருமே

உவகையுடன் மேன்மைபெற

நித்தம் உழைத்திட்டீர்!

எம்நெஞ்சங்களில் நிறைந்திட்டீர்!

ஏழை எளியவரும்

இனிதாய்த் தொழில்புரிய

உங்கள் திட்டங்கள்

ஊன்றுகோலாய் அமைந்தனவே!


இந்திய மண்மீது

ஏகமாய்க் காதல்கொண்டதனால்

மண்மோகன் என்றுணர்த்த

மன்மோகன் என்றநாமத்தை

உங்கள் பெற்றோர்கள்

உரியபடி உமக்குச்சூட்டி

எதிர்காலம் அறிந்தவராய்

இருந்தனரோ அக்காலத்திலேயே

அதனால்தான் நீங்களும் 

அகிலத்தில் புகழ்பெற்றீரோ


பூத உடலைத்தான் 

புவியில் கழற்றி விட்டீர்

புகழுடம்பு என்றைக்கும் 

பூமிதனில் சுற்றிவரும்!

மனிதர்கள் வாழும்வரை 

மகேசனும் பொருளாதாரமும் 

நின்று நிலைத்திருக்கும்!

நிச்சயமாய் அது உங்கள்

நினைவுகளைத் தக்கவைக்கும்!

நீளுலகம் அதில் லயிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com