பூஜை, ஆராதனை செய்வது எதற்காக?

பூஜை, ஆராதனை செய்வது எதற்காக?
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

- பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரசுவதி சுவாமிகள்

பூஜையில் இரண்டுவித காரியங்கள் புதைந்திருக்கின்றன. ஒன்று அதற்குரிய சடங்கு. அதன் மூலம் நான் இறைவனின் அருளை வேண்டுகிறேன். இன்னொன்று நான் இறைவனின் புகழைப் பாடுவது. எவ்வளவுக்கெவ்வளவு இறைவனை உயர்வாகப் புகழ்ந்து நான் பாடுகிறேனோ அந்த அளவுக்கு நான் மிகச் சிறியவனாகக் குறுகி விடுகிறேன். அதாவது, என்னுடைய அகங்காரம் மிகவும் ஒடுங்கி விடுகிறது. சொல்லப்போனால் உலகில் உள்ள படைப்புகள் அனைத்தும் இறைவனே! அப்படி உள்ளபோது யாரை, எதை நான் புகழ்ந்தாலும் அதற்கு நான் இறைவனின் புகழைப் பாடுவதாகத்தானே அர்த்தம்? புகழைப் பாடப் பாட நான் பணிவு பெற்று ஒடுங்கி விடுகிறேன்.

மனக்கலக்கம், பாதிப்புகள், குற்ற உணர்வுகள் எல்லாமே அகங்காரம்தான். அவை எல்லாமே சுருங்கி மனத்தெளிவு கிடைத்துவிடுகிறது. இறைவனைச் சரணடைந்து “எல்லாமே நீயே! நான் ஒன்றும் இல்லை” என்று சொல்லச் சொல்ல என்னுடைய அகங்காரம் அடங்கி விடுகிறது. சில சமயம் பூஜை, பிரார்த்தனை உருவிலும் இருக்கும். சில சமயம் பஜனை போலவும் அமையும். எல்லாவற்றுக்கும் குறிக்கோள் ஒன்றுதான். குழந்தை அம்மாவைக் கூப்பிடுவதைப் போல, நாம் இறைவனை அழைக்கிறோம். அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறைவனின் புகழை நாம் பாடுவதாகச் சொல்லமுடியாது. இறைவனை வருணிக்க முயலுவதாக வேண்டுமானால் சொல்லலாம். அந்த வருணனைகூட முழுமையாக இருக்க முடியாது. ஒன்றை  முழுமையாக அறிந்திருந்தால் அல்லவா முழுமையான வருணனை சாத்தியம்? நாம் அந்த அளவு இறைவனைப் பற்றி அறியவில்லையே? இறைவன் எல்லாவற்றையும் கடந்தவன் என்றும், நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்றும்தானே சொல்ல முடியும்? புகழை ஏற்பவர் யார்? புகழ் மூலம் தனக்கு ஓர் உயர்வும், அதன் மூலம் தன்னம்பிக்கையும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாமே புகழ்ச்சியை விரும்புவார்கள். இறைவன் அப்படிப்பட்டவன் அல்லவே!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com