
ஒரு மனிதன் தன்னிறைவான வாழ்க்கை பெற கல்வி மிகவும் முக்கியமானது ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என அறிஞர் விக்டர் கியூகோ கூறினார். ஆம் உலகளாவிய அதிசயங்களைத் தேடி சென்றாலும் தெரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற விஷயங்களை நம் கைகளில் தவழச்செய்து சிந்தனைகளை வளர்க்கும் சிறந்த இடம்தான் நூலகம் .
அந்த வகையில் தென் மாவட்டங்களின் தலைநகரம் மதுரைக்கு மணிமகுடமாக திகழ உள்ளது. ஏழு தளங்கள் எண்ணற்ற நவீன வசதிகளுடன் உலகத்தரத்தில் உருவாகியுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்.
இது, முதல்வர் மு க ஸ்டாலின் கரங்களால் வரும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த 2019, அறிஞர் அண்ணா 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோட்டூர் பரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் . தமிழர்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிய கலைஞரின் நினைவை போற்றும் வகையில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை புது நத்தம் சாலையில் பொது பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வானது. 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டிட பரப்பளவில் ஏழு தளங்களுடன் அதிநவீன வசதிகளுடன் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு உள்ளது.
நூலகத்தில் நான்கு வழிகள் உள்ளன. கட்டிடக்கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் உள்அரங்குகள் வடிவமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டிட வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகள் முடிந்து ஜெர்மன் கண்ணாடி சுவர் பூசப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன முகப்பு தோற்றம் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் கலைஞரின் உருவம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நூலகத்திற்கு சென்று நமக்குத் தேவையான ஒரு புத்தகத்தை எடுக்க விரும்பினால் அதற்கான கணிணியில் தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளது அதில் நமக்குத் தேவையான நூல் தலைப்பை குறிப்பிட்டால் எந்த மாடியில் எந்த இடத்தில் புத்தகம் உள்ளது என்பதை காண்பித்து விடும். வைஃ பை வசதியும் உள்ளது.
நூலகத்தில் படித்ததை பிரதி எடுக்க ஜெராக்ஸ் மெஷின் வசதி உண்டு. அதிக திறன் கொண்ட ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன வாசகர்கள் பயன்பாட்டுக்காக ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
நூலக தரைத்தளத்தில் 32,656 சதுர அடி கலைக் களஞ்சியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, 700 பேர் அமரவையில் மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, மின் கட்டுப்பாடு பட்டறை, தபால் பிரிவு, ஆகியவை அமைய உள்ளன.
நூலக தமிழ் பிரிவில், பழந்தமிழ் இலக்கியங்கள், உரைகள் மற்றும் திறனாய்வு நூல்கள், நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு பண்பாட்டு இலக்கியங்கள், இலங்கை சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற உலக தமிழ் இலக்கியங்கள், மொழியியல் இலக்கணங்கள் மற்றும் உரைகள், கவிதை, நாடகம், புனைவு மற்றும் கடிதங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆவியவை இடம் பெற்றுள்ளன மேலும் நாட்டுடைமை நூல்கள், பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆகியோரது நூல்களும் மற்றும் திராவிட இயக்க அறிஞர்கள் தலைவர்களின் எழுத்துக்களும், பொதுவுடமை நூல்கள் தலித்தியம் பெண்ணியம் தேசிய இயக்க தலைவர் மற்றும் அறிஞர்களின் அரிய நூல்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
கலைஞர் அரங்கில் 5400, நூல்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 6000 நூல்கள், குழந்தைகள் பிரிவில் 60 ஆயிரம் நூல்கள், தமிழ் நூல் வழங்கும் பிரிவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நூல்கள், தமிழ் நூல்கள் குறிப்பு பகுதியில் 50,000 நூல்கள், ஆங்கில பிரிவில் 50 ஆயிரம் நூல்கள், ஆங்கில நூல் குறிப்பு பிரிவு 50 ஆயிரம் நூல்கள், போட்டி தேர்வு பிரிவு 45 ஆயிரம் நூல்கள், அறிய நூல்கள் பிரிவில் 14 ஆயிரம் நூல்கள், என மொத்தம் நான்கு லட்சத்து முப்பது ஆயிரத்து நானூறு நூல்கள் இடம் பெற்றுள்ளன.
நூலகத்தின் முகப்பு பகுதி ஆரோ வளைவு வடிவ கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது அதிலும் நூலகத்தின் முன் தோரணவாயில் இணைத்து கட்டப்பட்ட சுவரில் சிவப்பு நிற செங்கல் பறிக்கப்பட்டுள்ளது இந்த செங்கல் பெங்களூரு அருகே தொட்டலூரில் இருந்து பிரத்தியேகமாக தயாரித்துக் கொண்டு வரப்பட்டது முன்பகுதி ஒட்டப்பட்ட ஓடுகள் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கிராமத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது சுவரை அரைசுற்று வட்ட வடிவில் கட்டவும் இந்த கல் பதிக்கும் பணியிலும் புதுச்சேரி ஆரோவில் கட்டிடக்கலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நூலகக் கட்டிடத்தின் நடுப்பகுதியுடன் முன்பகுதியை இணைத்து 98 அடி அகலம் 68 அடி உயரத்தில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் கண்ணாடி பேழையிலான கூடாரம் மேற்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பேழையானது சூரிய வெப்பம் மழை ஈரத்தை தாங்குமா என்பதற்காக 28 டிகிரி வெப்பம் குளிர் நீர் என 48 மணி நேரத்தில் ஈஷோக் டெஸ்ட் என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சோதனையால் கண்ணாடியில் கீறல் வெடிப்பு போன்றவை ஏற்படாது. முற்றத்தின் நடுவில் இருபது அடியில் அலங்கார வண்ணச் சர விளக்கு தொங்க விடப்பட்டுள்ளது.
நூலகத்தின் தரைத்தளத்தில் 250 பேர் அமரும் வகையில் 54 அடிக்கு 40 அடியில் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டது இப்பொழுது அதை மேலும் விரிவுபடுத்தி 108 அடி நீளம் 45 அடி அகலத்தில் சுமார் 700 பேர் அமரும் வகையில் மாநாட்டு உள் அரங்கமாக மாற்றி அமைக்கப்படவுள்ளது.
முதல் தடத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில் நான்கு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக ஒலி ஒளி காட்சிகள் இருக்கின்றன. சோட்டா பீம், டோரா புஜ்ஜி, டாம் அண்ட் ஜெர்ரி, உள்ளிட்ட வண்ண பொம்மைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அரங்கில் குழந்தைகள் நடக்கும் போது பறவைகள் பூச்சிகள் பறப்பது போன்ற செயற்கை கார்ட்டூன்கள் தெரியும்படியும் அமைக்கப்பட்டு இந்த அரங்கும் முற்றிலும் குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும் அதே நேரம் அவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்தும் விதத்திலும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
முதல் தளத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் எழுதிய இலக்கியம், அரசியல், கவிதை, கதை, கட்டுரை, சினிமா வசனம், போன்ற பல தரப்பட்ட நூல்களுடன் அவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்களும் சேர்த்து 5000க்கும் மேற்பட்டவை இடம்பெறுகின்றன. மேலும் அந்த அரங்கில் உள்ள மெகா டிவியில் கலைஞரின் பேச்சு மெல்லியதாக ஒளிபரப்பு செய்யப்படும். நூலகத்தின் முன் பகுதியில் கலைஞர் அமர்ந்த நிலையில் நூலை படிக்கும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.