குழந்தைகள் நன்றாக படிக்கவில்லை என்று ஆதங்கப்படும் பெற்றோரா நீங்கள்?

Children playing
Children playing
ராதா ரமேஷ்

வணக்கம். நான் ராதா ரமேஷ். தமிழ் இலக்கியம் பயின்றுள்ளேன். நான் ஒரு தமிழ் ஆசிரியை. பள்ளி காலங்கள் முதலே எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல்வேறு கவிதைகள், கதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறேன். மேலும் சிறு சிறு பத்திரிகைகளிலும் எழுதியுள்ளேன்.தற்போது கல்கி இதழிலும் எழுதத் தொடங்கியுள்ளேன். மனித மனங்களை ஒன்று சேர்க்கும் மிகப்பெரிய ஆக்க சக்தியாக எழுத்துக்கள் இருக்கும் என உறுதியாக நம்புவதால் வாழ்வியலோடு சேர்ந்த உணர்வுகளை எழுத்துக்களாக பதிவு செய்து வருகிறேன். நன்றி!

Updated on

இன்றைய காலகட்டங்களில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது என்றால் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன; தற்போது வளர்ந்து வரும் நாகரிக சூழலில் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனி குடும்பங்களாய் மாறிவிட்ட சூழலில் பெரும்பாலும் குழந்தைகளை பெற்றோரே கையாள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சொற்ப அளவிலான வீடுகளிலே தாத்தா, பாட்டி போன்ற முதியவர்கள் இருக்கும் நிலை உள்ளது. 

இதுபோன்ற சூழலில் குழந்தைகளின் கல்வி பள்ளிகளை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை, அவர்களின் கல்வியில் பெரும்பங்கு வகிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு  உள்ளது. இதிலும் பணிக்கு செல்லும் பெற்றோரால் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் சவாலாகவே உள்ளது. இக்காலக்கட்டங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த டியூசன் என்ற நிலையையே  நாட வேண்டியுள்ளது.

உங்கள் குழந்தைக்கு கற்றலில் குறைபாடு இருக்குமானால் அதை புரிந்து கொள்வதற்கு முதலில் உங்களுக்கு சுய பரிசோதனை அவசியம். உங்கள் குழந்தையை புரிந்து கொள்வதற்கு பெற்றோராகிய   நீங்கள் முதலில் இந்த பரிசோதனையை செய்து பாருங்கள்.

முதலில் ஒரு ஆங்கில புத்தகம் ஒன்றையும் ஒரு கண்ணாடி ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இருவரும் எதிரெதிரே அமர்ந்து கொண்டு ஒருவர் கண்ணாடியை பிடித்துக் கொண்டு மற்றவர் புத்தகத்தை விரித்து கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் வழியாக அப்புத்தகத்தில் உள்ள வாசகத்தை வாசிக்க வேண்டும். இதே பரிசோதனையை பெற்றோர் இருவரும் மாறி மாறி செய்து கொள்ள வேண்டும். பரிசோதனையை செய்துவிட்டு அதன் முடிவுகளை ஆலோசனை செய்து பாருங்கள், அது எவ்வளவு கடினமாக உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அதிலும் பெரும்பாலும் ஆங்கில எழுத்துக்களை படிக்கும் போது அந்த எழுத்தின் வடிவத்தை கண்டறிவதிலே நமக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும். 

நன்கு படித்து, பல பட்டங்களை பெற்று பட்டதாரி வாழும் நமக்கே படிப்பதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளது, அப்படியானால் நம் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள், அவர்களுக்கு பார்க்கும் ஒவ்வொன்றும் புதிது, முதலில் அந்த எழுத்தின் வடிவம் அவர்களுக்கு பதிய வேண்டும், பின் அந்த எழுத்தை சரியாக இனம் கண்டறிய வேண்டும், அதற்குப் பின்பு தான் வாசிப்பு என்ற நிலைக்கே அவர்களால் செல்ல முடியும்.

இதையும் படியுங்கள்:
சிவராமனும் ஸ்கூட்டரும் - சிறுகதை!
Children playing

எனவே உங்கள் குழந்தையை சரியாக படிக்க வைக்க பெற்றோராகிய உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம், எல்லாவற்றையும் உடனே கற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகளை பந்தய குதிரைகளாக நினைத்து விரட்ட நினைக்காமல் புது உலகினை மென்மையாக அறிமுகப்படுத்துங்கள்.

புத்தகங்களை வாசிப்பதை தாண்டி வெளியிடங்களுக்குச் செல்லும் போது கண்களில் தென்படும் வாசகங்களை எல்லாம் வாசிக்க கற்றுக்கொடுங்கள். இது அவர்களுக்கு கற்றலில் ஒரு புதுவித மகிழ்ச்சியை கொடுக்கும்; அதோடு அவர்கள் புறச் சூழலையும் நன்கு ஆராய கற்றுக்கொள்வார்கள். எனவே கல்வி என்பது வெறுமனே மனனம் செய்வது மட்டுமல்லாமல், அது வாழ்வியலோடு கலந்ததாக இருக்க வேண்டும். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் முன்னேற்றம் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com