தன்னம்பிக்கையான பெண் தான்…
-பிரவீணா தங்கராஜ்
என்னோட அத்தை அவர்களால் மங்கையர் மலர் எனக்கு அறிமுகம். அவங்க கவிதை, கட்டுரை, அனுபவங்களை மங்கையர் மலரில் அடிக்கடி பகிர்ந்து கொள்வார்கள்.
அவர்களின் தங்கை மகளான நானும் கவிதை எழுத ஆரம்பித்த நேரம், மாணவ மாணவிகளின் திறமைக்கு கைகொடுக்கும் விதமாக 'பூஞ்சாரல் பக்கங்கள்' என்ற பகுதி வரவும் 'பிரவீணா மங்கையர் மலருக்கு கவிதை எழுதி அனுப்பு' என்றார். மங்கையர் மலர் எல்லாம் மிகவும் பிரபலமான பத்திரிக்கை என் கவிதை வருமாயென்ற கலக்கத்தோடு தன்னம்பிக்கை கவிதை ஒன்றை அனுப்பி விட்டேன்.
பல மாதமாகியும் மங்கையர் மலரில் வரவில்லை. அதன் பிறகு, என்னை பெண் பார்த்து விட்டு, மாப்பிள்ளை வீட்டினர் சென்ற ஒரு வாரத்தில் எனது கவிதை மங்கையர் மலரில் வெளிவந்தது. எனது வருங்கால அத்தையும் மங்கையர் மலரில் வாசகி என்பதால் கவிதையை படித்துவிட்டு 'வெற்றியை பத்தி எழுதியிருக்கா. தன்னம்பிக்கையான பெண்தான். நீ எதற்கெடுத்தாலும் சோர்ந்துப்போற. இந்த பெண்தான் உனக்கு சரியானவள்' என்று என் கணவரிடம் உரைத்தார்களாம்.
திருமணம் முடித்த சில நாட்களில் என் அத்தை (மாமியார்) என்னிடம் இந்நிகழ்வை பகிர்ந்தார்கள். மங்கையர் மலரும் நானும் முதல் முறை நெகிழ்வான தருணமாக மாற்றியது.
இதற்கு பின் ஏழு, எட்டு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், பிரசுரமாகி என் எழுத்துக்கு மொட்டுவிட்டது மங்கையர் மலர். தற்போது அச்சுப் புத்தகமாக ஆறு நாவலை வெளியிட்டுயுள்ளேன்.