
த்ரீ (3) நட்ஸ் மல்டி டேஸ்ட் பர்ஃபி
தேவையானவை: முந்திரி 1 கப், பாதாம் 1 கப், பிஸ்தா அரை கப், சீனி 6 கப், நெய் 6 கப், மைதாமாவு 3 கப், ஏதேனும் ஒரு எசன்ஸ் தேவைக்கேற்ப தண்ணீா் 1 கப்.
செய்முறை: மூன்று வகையான பருப்புகளையும் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து. பொடி பண்ணவும். தண்ணீாரில் மூன்று நட்ஸ் பொடிகளைப் போட்டு சீனியையும் போடவும். நன்கு கொதிவந்ததும் மைதாமாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவுவதோடு, கட்டி தட்டாமல் கிளறவும்.
தேவையான நெய்யினை உறுக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கிளறவும். கூடவே எசன்ஸ் சோ்க்கவும். பா்பி ஒட்டாத பதம் வரும்போது சில்வா் தட்டில் கொஞ்சம் நெய்விட்டு, கொட்டி பதமாகச் சமப்படுத்தவும். அழகூட்ட நினைப்பவா்கள் கொஞ்சம் வறுத்த தேங்காய்பூவை தூவலாம் பின்னா் வில்லைகளாக போடவும் இப்போது த்ரீ(3)நட்ஸ் மல்டி டேஸ்ட் பா்ஃபி ரெடி உடலுக்கு சத்தானதோடு நாவிற்கும் சுவையானது.
- ச.சிவசங்கரி சரவனண், செம்பனார்கோவில்
சோளம் தினை சோமாஸ்
தேவையானவை: சோளமாவு - 1கப், கோதுமை மாவு ஒரு கப், தினை மாவு -1 கப், எண்ணெய் -மூன்று டீஸ்பூன் பிசைய, பாசிப் பருப்பு - அரை கப், நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்த்துருவல் - அரை கப், அத்திப் பொடி - 2டீஸ்பூன், சர்க்கரை - 1 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, ஏலக்காய்த்தூள் – கொஞ்சம்.
செய்முறை: பாசிப்பருப்பை வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும். நாட்டுச்சர்க்கரையை தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினை மாவு, பாசிப்பருப்பு, நாட்டுச் சர்க்கரை, தே துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, நன்கு கலந்துகொள்ளவும் . இதுவே பூரணம். இதை சிறிய உருண்டைகளாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் நீர்சேர்த்து கரைத்து, அதில் சோளமாவு, கோதுமை மாவு, அத்திப் பொடி, எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். சிறிது நேரம் கழித்து மாவை பூரிகளாக இட்டு, நடுவில் பூரண உருண்டையை வைத்து, மூடி ஓரங்களை நன்கு ஒட்டி வைக்கவும். மாவிலிருந்து சோமாசிகளாக செய்துகொண்டு பின் சூடான எண்ணெயில் பொரிக்கவும். சிவந்து பொரிந்ததும் எடுக்கவும். ஆறியதும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
குதிரை வாலி இனிப்பு சீடை
தேவையானவை: குதிரை வாலி அரிசி – 1 கப், பொடித்த வெல்லம் - ¾ கப், பொட்டுக்கடலை - 1/4 கப், ஏலக்காய்த்தூள் - கொஞ்சம், தேங்காய் - 1/2 மூடி, எண்ணெய் - பொரிக்க.
செய்முறை: குதிரை வாலி அரிசியை ஊற வைத்து, காயவிட்டு மாவாக்கவும். பொட்டுக்கடலையை மாவாக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும், இறக்கி வடிகட்டவும். இதனுடன் அரிசி மாவை சேர்த்துக் கிளறவும். பிறகு பொட்டுக்கடலை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவுக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். ஆறியதும் உபயோகிக்க கரகரப்பான இனிப்பு சீடைத் தயார்.
வரகு முள்ளு முறுக்கு
தேவையானவை: வரகு மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – 2 கப், வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவைக்கு.
செய்முறை: பாத்திரத்தில் வரகு மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், நெய், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். இதனுடன் தண்ணீர் ஊற்றி, பதமாக பிசைந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மாவிலிருந்து முறுக்கு அச்சுகொண்டு முறுக்கு பிழிந்து சிவந்ததும் எடுக்கவும். சுவையான வரகு முறுக்கு சாப்பிடச் சுவையாக இருக்கும்.
- மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
போஹா பீநட் உருண்டை
தேவையானவை: போஹா(அவல்) - 1 கப், பாதாம் - 1 கப், முந்திரி - 1 கப், நிலக்கடலை - 1 கப், (பீ நட்) பேரீச்சம்பழம் - 1 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலம் - 1 டேபிள் ஸ்பூன்,
செய்முறை: வாணலியில் முதலில் அவல், பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றை லேசாக தனித் தனியாக சுடப் பண்ணவும். ஆறியதும் மிக்ஸியில் முதலில் அவலை பொடி செய்து எடுத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் போடவும். பாதாம், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றை பொடி செய்து, அதே கிண்ணத்தில் போடவும். பிறகு பேரிச்சம்பழம் போட்டு அரைத்து, ஏலப்பொடி தூவி ஒரு ஸ்பூன் நெய் விட்டு உருண்டை பிடிக்கவும். இப்போது அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய சத்தான ஆரோக்கியமான போஹா பீநட் உருண்டை தயார்.
- நளினி ராமச்சந்திரன், கோயம்புத்தூர்
இஞ்சி பர்ஃபி செய்முறை
தேவையானவை: இஞ்சி 50 கிராம், ஜாதிபத்திரி 50 கிராம், நாட்டு சர்க்கரை 100 கிராம், நெய் நான்கு ஸ்பூன்.
செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து, தோல் நீக்கி, சிறிது நீர் விட்டு அரைத்து வடிகட்டவும். ஜாதி பத்திரியையும் அரைத்து வடிகட்டி சக்கையை எறிந்துவிடவும். வாணலியில் நாட்டு சர்க்கரை போட்டு, முதலில் இஞ்சி நீரை விட்டு கொதிக்கவிடவும். நீர் சுண்டியதும் ஜாதிபத்திரி நீரை கொட்டி கிளறவும். அந்த நீரும் சுண்டியதும், சிறிது நெய் ஊற்றி கிளறி, பதம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி வில்லைகள் போடவும்.
- ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்.
உடைத்த கடலை லட்டு!
தேவையான பொருட்கள்: உடைத்த கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம் பொடித்தது, நெய் - 1 கப், * முந்திரி, உலர் திராட்சை - தலா 20, ஏலப் பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில், நெய் விட்டு, உடைத்த கடலை மாவு, பொடித்த சர்க்கரை, ஏலப் பொடி சேர்த்து கிளறி, சிறிது கெட்டியானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து, கிளறி, இறக்கவும்; இளம் சூட்டில், உருண்டைகளாக, லட்டுகளை பிடிக்கவும்.
தீபாவளிக்கு செய்ய மிகமிகச் சுலபமானது. சாப்பிட சுவையானது; சத்தானதும் கூட!
-கீதா கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
முந்திரி கொத்து
தேவையானவை: சிறுபயறு – அரை கிலோ, வெல்லம் – கால் கிலோ, தேங்காய் துருவல் – ஒரு மூடி ஏலக்காய் பொடி – சிறிது, சுக்கு பொடி – சிறிது எள் – 25 கிராம், பச்சரிசி மாவு – கால் கிலோ, மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறுபயறு நன்றாக வறுத்து, மிக்ஸியில் புட்டு மாவு பதத்துக்கு பொடியாக்கவும். எள், தேங்காய் துருவல் இரண்டையும் பயறுடன் பொடியுடன் சேர்க்கவும். இந்தக் கலவையில் ஏலக்காய்பொடி , சுக்கு பொடி சேர்க்கவும்.
தண்ணீரில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி, இந்தக் கலவையில் ஊற்றி, உருண்டைகளாக உருட்டி எடுத்து வைக்கவும். பச்சரிசி மாவு, மஞ்சள்தூள் கலந்து கெட்டியாக தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிடித்து வைத்திருக்கும் பயறு உருண்டையை, பச்சரிசி மாவுக் கலவையில் முக்கி எடுத்து, எண்ணெயில் போடவும்.
கரண்டியால் உருண்டைகளை திருப்பிவிட்டு, எல்லா பகுதிகளும் வேகும்படி செய்யவும். எண்ணெய் சத்தம் நின்றவுடன் எடுத்துப் பரிமாறலாம்.
எண்ணெயில் மாவை போட்டதும், உருண்டைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு, முந்திரிக் கொத்து போல இருப்பதால் இதற்கு 'முந்திரிக் கொத்து' என்று பெயர் வந்தது.
குமரி மாவட்டத்து கல்யாணம், காது குத்து , கிரகபிரவேசம் போன்ற விசேஷங்களில் இது நிச்சயம் உண்டு.
-சுந்தரி காந்தி, சென்னை.
ட்ரை ஃப்ரூட் மிக்ஸ்ட் கடலை மாவு அல்வா
தேவை: சலித்த கடலைமாவு – 1 கப், நல்ல பால் – 1 கப், நெய் – ½ கப், பாதாம், முந்திரிப் பருப்பு, பிஸ்தா (வறுத்து பொடி செய்தது) – 1 கப், பொடி செய்த சர்க்கரை – ½ கப், ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை: முதலில் வாணலியில் நெய்யை விட்டு சூடு செய்து, கடலைமாவைப் போட்டு பொன்னிறம் வரும்வரை வறுக்கவும். நன்றாக வாசனை வரும் மாவுடன், பொடித்தச் சர்க்கரை; ஏலப்பொடி, பால் ஆகியவைகளைச் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியாகி திரண்டு வரும் நேரங்களில் வறுத்துப் பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸை மிக்ஸ் செய்து, நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறிய பிறகு, துண்டு போட்டு சாப்பிட, சுவையாக மாறுபட்ட ருசியுடன் இருக்கும். செய்வது எளிது.
- ஆர். மீனலதா, மும்பை
டிப்ஸ், டிப்ஸ்... பட்சண டிப்ஸ்
* தேன்குழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேக வைத்து , மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.
* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை முறுக்கு செய்யலாம்.
* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
- சுந்தரி காந்தி, பூந்தமல்லி
* தேங்காய் பர்ஃபி செய்ய, சர்க்கரையை பொடித்து சேர்த்தால் மென்மையாக இருக்கும். சீக்கிரமும் செய்துவிடலாம்.
* ஜீரா மீந்துவிட்டால், அதில் தேங்காய்த் துருவல், ராகி மாவு சேர்த்து கொதிக்க வைத்து, கிளறி, வடைகளாகத் தட்டி, பொரித்து எடுத்தால், சுவையான, சத்து நிறைந்த ராகி அதிரசம் தயார்.
* வெல்லத்தைப் பிடித்து, பாலில் கரைத்து, பொட்டுக்கடலை மாவு, ஏலக்காய் பொடி, முந்திரி ஆகியவற்றை அதில் சேர்த்து, பாலைத் தெளித்து, லட்டு பிடிக்கலாம். தட்டி வைத்தால் பேடா ஆகிவிடும்.
* கடலைப்பருப்பை வேகவைத்து, தேங்காய் துருவல் சேர்த்து, அரைத்து வெல்லம், ஏலக்காய் பொடி, பால் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான பாயாசம் தயார்.
* பஜ்ஜி செய்வதற்கு மிளகாய் பொடிக்கு பதிலாக, ஓமத்தை வறுத்து, பொடித்து சேர்த்தால் வயிற்றுக் கோளாறு வராது, மனமும் கூடும்.
* கடலைப் பருப்புக்குப் பதிலாக, பாசிப்பருப்பை வேகவைத்து பூரணம் செய்தும் போளி செய்யலாம்.
* இனிப்பு பலகாரங்கள் மீது ஈக்கள் மொய்க்காமல் இருக்க, சுற்றிலும் வேப்பிலை கொழுந்து கசக்கிப் போட்டு வைத்தால் போதும்.
* பட்சனங்களுக்கு எறும்பு வராமல் இருக்க, உப்பு மற்றும் மஞ்சள் பொடியை டப்பாவைச் சுற்றிலும் தூவி வைக்க வேண்டும்.
- எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்.