உடலில் நீர் வற்றிய நிலை! உயிருக்கே ஆபத்தா?

Dehydration in the body! Life threatening?
Dehydration in the body! Life threatening?

டலுக்குள் செல்லும் நீரை விட, அதிகமான அளவில் வியர்வை, சிறுநீர், வாந்தி, பேதி போன்றவைகளால் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறிவிடும் நிலையே டீஹைட்ரேஷன், உடலிலுள்ள நீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே சென்று விட்டால் டீஹைட்ரேஷன் ஏற்படுகிறது. இந்நிலை மிகச் சிறிய அளவில் ஏற்பட்டாலும், உடனே கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடுமையாக மாறி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். எனவே டீஹைட்ரேஷன் சிறிய அளவில் ஏற்பட்டாலும் உடனே கவனித்து ஆவன செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிக விரைவில் டீஹைட்ரேஷன் ஏற்படக் கூடிய சாத்தியம் உள்ளது.

டாக்டர் வந்து பரிசோதித்து டீஹைட்ரேஷன் ஆகியுள்ளது என்று கூறுவதற்குள், இலேசாக ஏற்பட்டுள்ள டீஹைட்ரேஷன் மிகக் கடுமையாக ஆகிவிடலாம். எனவே டாக்டர் வருவதற்கு முன்பாகவே, குடும்ப அங்கத்தினர்கள், கீழ்க்கண்ட அறிகுறிகளை அடையாளம் கண்டுகொண்டு ஆவன செய்ய முடியும்.

நீர் வற்றிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்:

 1. உலர்ந்த வாய், நாக்கு

 2. வெடிப்பு ஏற்பட்டுள்ள உதடுகள்,

 3. குறைந்த அளவு சிறுநீர் கழிதல்,

 4. தோல் ஈரப்பசையுடன் கெட்டியாகத் தோற்ற மளிக்காமல், வறண்டு, தொள தொளப்பாகக் காட்சி அளித்தல்,

 5.கண்களில் நீர் வராமலேயே, குழந்தை அழும்போது., அல்லது உதடுகளை நாக்கால் நக்கிக்கொண்டே இருப்பது.

இதையும் படியுங்கள்:
பாப்பா பல்லு - பராமரிப்பும் பாதுகாப்பும்!
Dehydration in the body! Life threatening?

நீர் வற்றிய நிலையைக் கட்டுப்படுத்துவது எப்படி?

மூன்று முறைக்கு அதிகமாக வாந்தியோ, பேதியோ ஏற்பட்ட உடனேயே, நீர் மற்றும் மற்ற பானங்களை (தாகம் எடுக்காவிட்டாலும் கூட) உடனடியாகக் குடிக்க வேண்டும். ஒரேயடியாகத் தொடர்ந்து நீர் குடிப்பதை விட, கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி, நீரை உறிஞ்சிக் குடிப்பது நல்லது. மிகக் கடுமையாக நோயுற்றவருக்கு, தனக்குத் தாகம் எடுப்பது பற்றி சரியாக அறிந்து கொள்ள முடியாது, அல்லது தனக்கு நீர் வற்றிய நிலை ஏற்பட்டுள்ளது, தாம் நீர் குடிக்க வேண்டும் என்ற கவனம் ஏற்படாது.

Chapped lips
Chapped lips

எனவே இம்மாதிரியான நபருக்கு 5 அல்லது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை, நன்றாகக் கொதிக்க வைத்துக் குளிர வைக்கப்பட்ட நீரை ஸ்பூன் மூலமாகக் கொடுக்க வேண்டும். இலேசாக இருக்கும் எந்த பானமும் நல்லது. ஆனால் பால் கொடுக்கப்படக் கூடாது. ஒரு லிட்டர் நீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆறவைத்து அதில் 6 டீஸ்பூன் சர்க்கரையும், அரை டீஸ்பூன் உப்பும் கலந்து அவ்வப்போது பருகச் செய்வது மிகச் சிறந்தது. இளநீர் மிக உத்தமமானது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். கடுமையான டீஹைட்ரேஷன் ஏற்பட்டிருந்தால் இம்முறை பலனளிக்காது. இந்நிலையில் மிக விரைவில் டாக்டரை அழைப்பது மிக அவசியமாகும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பிரிட்டனைச் சேர்ந்த மலையேறும் குழு, உலகத்தின் கூரை எனப்படும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். மலையேறுவதில் மிகத் திறமையானவர்கள் என்று பெயர் பெற்ற ஸ்விட்சர்லாந்து மலையேறும் குழுவினர், பல தடவை எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் தோல்வியடைந்தனர். பிரிட்டன் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஹண்ட், ஸ்விஸ் குழுவுக்கு என்ன காரணத்தினால் தோல்வி ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது, அக்குழு, சக்திமிகுந்த ஆகாரங்களை உண்டு, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று டம்ளர் மட்டும் நீர் குடித்து வந்தனர் என்று தெரிந்தது. பிரிட்டிஷ் குழுவினர் தினமும் 12 தம்ளர் நீர் குடிக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டது. பிரிட்டிஷ் குழு வெற்றி பெற்றது. தெரிகிறதா நீரின் மகிமை?

 பின்குறிப்பு:-

மங்கையர் மலர் ஜூன்  1991 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com