சங்ககாலத்தில் முறத்தால் புலியை விரட்டிய பெண்கள் இருந்தனர் என்பது பற்றி படித்திருக்கிறோம்; கேள்விப் பட்டிருக்கிறோம். இது என்ன புதுகதை? அதுவும் ஒரு பெண் பாம்பை பிடித்தாள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை. முற்றிலும் உண்மை.
அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகருக்கு மகள் வீட்டிற்கு நானும் என் மனைவியும் வந்தோம். இது எங்களுடைய இரண்டாவது விசிட். முதல் விசிட், என்மகளின் பிரசவ சமயத்தில் நவம்பர் மாதம், 2022 முதல் மே 2023 வரை.
தற்போது ஏப்ரல் 2024 முதல் அடுத்த ஆறு மாதம். சென்ற முறை சரியான குளிர். தற்போதைய நிலைமை, தாங்கும் குளிர், பேத்தியும் தற்போது 16 மாத குழந்தை; அதற்கே உரிய சூட்டிகை.
இங்கே வீடு அமைப்பு தரைத்தளம், முதல் மாடி, இரண்டாம் மாடி. தரைதளத்தில், கணிணி, வாஷிங் மெஷின், வேறு சிலபொருட்கள், முதல் மாடியில், டிராயிங் ரூம் கிச்சன், இரண்டாம் மாடியில் பெட்ரூம், பாத்ரூம்.
இரவு குழந்தை தூங்கிய பிறகு சுமாராக 10.00 மணி அளவில் தரைதளத்திலிருந்து என் மகள் பாம்பு பாம்பு என்று குரல் கொடுக்க, மாப்பிள்ளை அங்கே தடியுடன் ஒடி ஒருவழியாக அடிக்க முற்பட, மகள் தெரிந்த நபருக்கு போன் செய்ய, அவர் வந்து ஒருவழியாக பாம்பை அடித்து விட்டார். இரவு சிவராத்திரியானது எங்கள் எல்லோருக்கும் என்று சொல்லவேண்டுமா?
மறுநாள் காலை தரைத்தளம் போய் பார்க்க, இன்னொரு பாம்பு! உடனே என் மனைவி களத்தில் இறங்கி கையில் இருந்த பழைய பனியனால் அந்த பாம்பை பிடித்து, அருகிலிருந்த பழைய காலி அட்டைப்பெட்டியில் போட்டு எதிரே இருந்த பள்ளத்தில் வீசினாள்.
அதேசமயத்தில் முதல் நாள் இரவு வந்த பையன் மீண்டும் வர, அவனிடம் விவரம் சொன்னதும் ‘ஒ கிரேட் மாமியார்’ என்று பாராட்டினார். பாம்பு விஷமில்லாததுதான். இருந்தாலும் டைம்மிங் சென்ஸ் சூப்பர்தானே.
இதன் பிறகு நாகராஜனுக்கு சென்னையிலும், சொந்த ஊரிலும் பால் ஊற்றச் சொன்னது வேறு கதை.
-பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து…