
நம் சொத்தாம் பெருநாவலரின் அற இலக்கியத்தின் மூன்றாம் அதிகாரம் "நீத்தார் பெருமை"
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"
"பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டி விடும்."
இக்குறள் வாசிக்கும் போது எனக்கு சுந்தர சோழரின் நினைவு மனதுக்குள் வந்து மதி மயக்கியது உண்மை.
நம் புதினத்தில் அரசர்களின் வீரம் விழுப்புண்கள் கொடைத்தன்மை அரசாளும் மேன்மை வெண்கொற்றக் குடையின் மாசற்ற நிழல் போன்றவைகளை பிரதிபலிக்கும் அன்றைய புலவர் பெருமக்களைப்பற்றி சில வரிகள் பார்த்துவிட்டு நம் சுந்தர சோழரிடம் செல்வோம்.
"பராக் !பராக் ! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள் கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள் ! அகத்தியனாரின் வழிவந்தவர்கள் ! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களை கரைத்துக் குடித்தவர்கள் ! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காப்பியங்களை தலைகீழாக படித்தவர்கள் ! தெய்வத்தமிழ் மறையான திருக்குறளையும் ஒருகை பார்த்தவர்கள்! இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள்! இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள் !தங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள் .அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானுகோடி கரையான்களுக்குப் பல்லாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!"
புலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்தார்கள்".
இப்படி தமிழன்பரான சக்கரவர்த்தியும் அறிவுச்சுடர்களான புலவர்களும் தமிழ்கடலில் ஒருங்கே சங்கமித்து விட்ட அந்த அரசவையின் அழகே அழகு… அங்கே பொழிந்த தமிழ் சுவைக்கு அமிர்தம் கூட இரண்டாமிடந்தான்… சுந்தர சோழரின் கொடைத்திறனை காட்டும் ஒரு பாடலை அவையில் ஒரு புலவர் பாடுகிறார். நீங்களே ருசியுங்கள் அவரின் கவித்திறனை…
"புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்து படிக்கலுற்றார்:
"இந்திரன் ஏறக் கரி அளித்தார்
பரிஏ ழளித்தார்
செந்திரு மேனித் தினகரற்கு,
சிவனார் மணத்துப்
பைந்துகி லேறப் பல்லக்களித்தார்,
பழையாறை நகர்ச்
சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத்
தொன்னிலத்தே!"
பாடலைப் புலவர் பாடி முடித்ததும் சபையிலிருந்த மற்றப் புலவர்கள் எல்லோரும் சிரகம்ப கரகம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும்," நன்று ! நன்று ! "என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.
நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்:
"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய்விட்டது .அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தர சோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான்.'ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை .அதைவிடச் சிறந்த யானைகள்தான் இருக்கின்றன! என்று கூறி, இந்திரனை தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது?' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர் தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப் போகிறோம் ? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்….
"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும்போர் மூண்டது. ராகு தினகரனை விழுங்கப் பார்த்தான். முடியவில்லை! தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்துவிட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தர சோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி,' ரதத்தில் இந்தக் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் . தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.
"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கல்யாணச் சீர் வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி உடனே பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டு வரச்சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?…"
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி 'கலீர்' என்று சிரித்தார். நோயின் வேதனையினால் நெடுநாள் சிரித்தறியாத சக்கரவர்த்தியின் சிரிப்பு அவருடைய இணைபிரியா பத்தினியான மலையமான் மகள் வானவன்மாதேவிக்கும் தாதியர்களுக்கும் அரண்மனை வைத்தியருக்கும் கூட சிறிது உற்சாகத்தை அளித்தது."
பெயருக்கு ஏற்றாற்போல சுந்தர சோழரின் அழகு எப்படி படிப்பவர்கள் மனதிலெல்லாம் பதிந்து கிடக்கிறதோ அதுபோலவே அவரின் கொடைத் தன்மையும் புலவர்களின் இப்பாக்கள் மூலம் இதயமெல்லாம் விரவிக் கொள்(ல்)கிறதே! இன்றைய உலகிலும் சோழ சாம்ராஜ்ய கதைகளை நினைக்கும் சமயம், பேசும் சமயமெல்லாம் சுந்தர சோழரின் நினைவும் அவர் வம்சத்து முன்னோர் பின்னோர் புகழும் வீரமும் நம் மனம் உடல் குருதியிலும் பிரதிபலித்து பெருமை கொள்ளத்தான் செய்கிறது. நிறைமொழி மாந்தரின் பெருமைகளை அவர்களின் மறை மொழிகளூடே கவி வடிவில் காட்டியுள்ள விதம் அருமை. இன்றும் எமை போன்று தமிழ்மொழியின் ஆழத்தில் சுந்தர சோழரின் அழகில் மயங்கி கிடக்கும் கோடிக்கணக்கான இதயங்களுக்கு நல்லதோர் தமிழ் விருந்து…
(இன்னும் உணர்வோம்…)