
பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம்...!
பெண்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளவர்களில் முதன்மையானவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. முதல் பெண் மருத்துவர் மட்டுமல்ல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் தனது பங்களிப்பினை திறம்பட செய்தவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் முத்து லட்சுமி. அவர்களது பெற்றோரே கடும் சமூக எதிர்ப்புகளுக்கு இடையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
பெண்கள் கல்விக்கு எதிர்ப்பு இருந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்தபடியே படித்து தனித்தேர்வராக எழுதி மெட்ரிக் தேர்வில் தேறிய முத்துலட்சுமி இன்டர்மீடியட் படிக்க புதுக்கோட்டை மகாராஜா கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பமே சலசலப்பை உருவாக்கியது. ஏனெனில் அதுவரை மகாராஜா கல்லூரியில் ஒரு பெண் கூட படித்ததில்லை.
மகாராஜா பைரவத் தொண்டைமான் இந்த விஷயத்தில் தலையிட்டு அவர் படிக்க அனுமதித்ததோடு, கல்வி உதவித் தொகையும் வழங்கினார். பின்னர் 1912ல் அவர் மருத்துவர் ஆனார்.
தன்னை போலவே மருத்துவம் படித்த பகுத்தறிவாளரான சுந்தரரெட்டியை தனது 28-வது வயதில் சாதி மறுத்துத் திருமணம் செய்து கொண்டார் முத்துலட்சுமி. தம்மை சமமாக நடத்தவேண்டும், தனது விருப்பங்களில் தலையிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் பேரிலேயே திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1927 முதல் 1930 வரை அவர் சென்னை மாகாணத்தின் சட்டமேலவை உறுப்பினராகவும், அதன் துணைத் தலைவராகவும் இருந்தார். கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டு கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்ட மசோதாவை முன்மொழிந்தவர் இவர் தான். இந்த மசோதாவே 1947 சென்னை தேவதாசிச் சட்டம் என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ள சட்டப்படி உரிமை கிடைத்தது.
தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்கு தமது வீட்டிலேயே " அவ்வை விடுதி" என்ற பெயரில் 1930ல் ஒரு விடுதி தொடங்கினார் முத்துலட்சுமி. ஒருமுறை அவ்வை இல்லத்திற்கு நிதி வசூலித்தபோது , நிதி இல்லாத ஒருவர் பூசணிக்காய் தரட்டுமா? என கேட்டதற்கு அவ்வை இல்லத்திற்கு ஒரு நாள் பொரியலுக்கு உதவுமே என வாங்கிக் கொண்டார். முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று மாற்றப்பட்டது.
புற்றுநோயால் இறந்த தமது சகோதரி மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை பார்த்திருந்த டாக்டர் முத்துலட்சுமி, புற்றுநோய்க்கு என்று ஒரு மருத்துவமனை கட்ட உறுதி எடுத்தார். நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையை நிறுவினார். இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இது தான்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிக்காக, 1956-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்காகவும், நாட்டிற்காகவும் பல சேவைகளை ஆற்றிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1968ம் ஆண்டு 22, ஜூலை அன்று உயிரிழந்தார்.