மல்டிபிள் ஸ்லெரோஸிஸ்

மல்டிபிள் ஸ்லெரோஸிஸ்

ரம்பியல் நிபுணராக (Consultant Neurology, Neurophysiology) இருக்கும் மருத்துவர், டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் அவர்கள், மங்கையர் மலர் வாசகிகளுக்காக, உடல் உறுப்புக்களில் ஏற்படும் நரம்பு மண்டலம் சம்பந்தமான பல பிரச்சினைகள் குறித்து நமக்கு விளக்கம் தருகிறார்.

டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்
டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்

“மல்டிபிள் ஸ்லெரோஸிஸ்“ (Multiple sclerosis) என்று குறிப்பிட்டீர்களே, அது எந்த வகையான பாதிப்பு டாக்டர்?

“மல்டிபிள் ஸ்லெரோஸிஸ்“ என்பது, ஒரு வித அழற்சியினால் உருவாவது. (inflammatory auto immune disease)  சுருக்கமாக எம்.எஸ் என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

 நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, தவறுதலாக ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடும் போது இந்த பாதிப்பு வரலாம், இதனால்,  நம் நரம்பு  மண்டலத்தில் இருக்கும் , குறிப்பாக மூளை, தண்டுவடம் இவற்றில் காணப்படும் நரம்பு பைபர்களைச் சுற்றியிருக்கும் மெல்லிய படலம்   பாதிக்கப் பட்டு, நியூரான்களில் உள்ள ஆக்சன்கள் குறைகின்றன. (demyelination and axonal loss) இதனால் மூளை பலவீனமடைந்து, தொடர்ச்சியாக உடலில் பல உறுப்புக்கள் பாதிக்கப் பட  வாய்ப்பு உண்டு.

உடலின் இயல்பான  நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பினால் இது வரலாமா என்பது  தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சுற்றுப்புற சூழல், பரம்பரை பாதிப்பு போன்ற வேறு பல காரணங்களும் உண்டு. விட்டமின் டி குறைபாடு இதில் முக்கிய பங்கு வகிப்பதால் அதை நிவர்த்தி செய்ய உடலில் விட்டமின் டி  சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

 எந்த வயதினரை இந்த நோய் பாதிக்கும் ?

 ஆண்களை விட  அதிகமாக இளம் பெண்களை பாதிக்கக் கூடியது. பொதுவாக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெணகளுக்கு வருகிறது. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் அதிகம்  இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை, அனேகமாக இல்லாமல் இருந்தது. தற்சமயம், பாதிக்கப் பட்ட சிலரைப் பார்க்க முடிகிறது.

இதில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

Relapsing-Remitting (RRMS)  என்பது பொதுவாக காணப்படும் ஒரு வகை. அனேகமாக 75 முதல் 85 சதவீதத்தினர் இந்த வகையினால் பாதிப்படைகிறார்கள். இவர்களுக்கு நோயின் அறிகுறிகள் திடீரென்று தோன்றி மறையலாம் அல்லது மீண்டும் 24 மணி நேரத்திலோ, சில நாட்கள் கழித்தோ வரக் கூடும். சிலருக்கு முற்றிலுமாக மறைந்த போகக் கூடும்.

இவற்றில் Secondary progressive MS (SPMS) மற்றும்  Primary progressive MS (PPMS) என்று குறிப்பிடப்படும் வகைகளும் உண்டு. இவை சற்றே அதிகம் பாதிப்பைத் தரக் கூடியவை. நவீன மருந்துகள் மூலம் இவற்றை கட்டுப்படுத்துவதோடு மீண்டும் வராமல் தடுக்க, ஊசி, மாத்திரைகள் தரப்படுகின்றன.

எம்.எஸ் இருப்பதை எவ்விதம் கண்டறிவது? இதற்கான பொது அறிகுறிகள் என்ன?

தன் அறிகுறிகள் ஒவ்வொரு நோயாளிக்கும் வேறுபட்டு இருக்கக் கூடும். ஆனால் பொதுவாக, கண்பார்வை குறைபாடு, அல்லது காட்சிகள் இரட்டையாகத் தெரிதல்

நடக்கும் போது நிலையாக இல்லாத தள்ளாட்டம், அசைவுகளில் பலமின்மை,  அதீத உணர்வு அல்லது உணர்ச்சியே அற்ற நிலை தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அசைவுகளில் சிக்கல், சிறுநீர் கட்டுப்பாடின்றி வெளிப்படல், மலச் சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு, இவை அறிகுறிகள். நோயாளிகளுக்கு எந்த விதமான நரம்பியல் பிரச்னைகள் , எவ்வளவு இடைவெளியில் ஏற்படுகின்றன, 24 மணி நேரம் முதல் 48 ம்ணி நேரம் வரை காணப்படுதல்,அவற்றின் வெளிப்பாடு எவ்விதம் என்பதை எல்லாம் கண்காணித்து, சிகிச்சைகள் தரப்படுகின்றன.

வேறு என்ன சோதனைகள் செய்யப்படுகின்றன?

மூளையிலும் தண்டுவடத்திலும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்படும். கண்களின் நரம்புகளில் பாதிப்பு உள்ளதா என்ற சோதனைகள், ரத்த சோதனைகள் (வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள (Cerebrospinal Fluid (CSF) சோதனைகள்- அதாவது தண்டு வடத்தில் இருக்கும் திரவத்தை எடுத்து சோதித்தல் போன்றவை செய்யப்படும்.  

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஊசி மூலம் மருந்துகள் செலுத்தப்படும். பிறகு உட்கொள்ளும் மருந்துகளாக தரப்பட்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும். பாதிப்பு  மீண்டும் வராமல் தடுக்கவும் மருந்துகள் உதவுகின்றன.

நீண்ட நாள் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தால், நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம். மருத்துவர், நோயாளிகளுக்கு, இந்த நோயைப் பற்றிய விளக்கம் தருவதோடு,  சரியான வழிகாட்டுதலும் தருவார்.

சரியான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, விட்டமின் டி அதிகரித்தல், சரிவிகித உணவு இவற்றை மருத்துவர் சொன்னபடி தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com