அன்று ஊரெல்லாம்
அன்பு உறவுகள்
அடுத்தடுத்த தெருக்களில்
அடுத்தடுத்த
வீடுகளில்.
துன்பத்திலும் இணைவர்
இன்னலகற்றிட
இயல்பாய்.
வீட்டில் விளைந்த
தோட்டத்து காய்கறிகள்
சத்து மாறாமல்
நித்தம் பகிர்ந்திட
கூடியே உண்டிட
நாடியே செல்வோம்.
ஏற்றத்தாழ்வு இல்லை
உற்றார் உறவிடையே!
திருவிழா நாட்களில்
இருந்திடுவோம் ஒன்றாய்.
கன்றாய்த் துள்ளியே
நன்றாய் விளையாடுவோம்.
தலைகீழானது எல்லாம்
நிலையை உயர்த்திட
படித்தோர் எல்லாம்
கடிதேகினர் வெளிநாடு.
நல்லது கெட்டதற்குக் கூட
இல்லை யாருமிங்கே!
தோட்டம் துரவுமில்லை
கூட்டம் கூடுவதுமில்லை.
வயதில் மூத்தோர்
அயர்வாய் நடந்திட
அணிலாடு முன்றிலில்
பிணியோடு தள்ளாடுவர்.
செல்பேசி அழைப்பில்
செல்லமாய்ப் பேசுவோர்
குரல்கேட்டு மகிழ்வர்
விரலெண்ணி வாழ்வர்.
அன்பிற்காய் ஏங்குவர்
துன்புற்றே வருந்துவர்.
பணத்தின் பின்னே
குணமிழந்து ஓடியோர்
முதியவராகி பின்னாளில்
கதி கலங்கிடுவர்.
அந்நாளை போலவே
இந்நாளில் நாமும்
அன்பை விதைப்போம்
இன்பமாய் வாழ்வோம்.
-செ.கலைவாணி. மெல்போர்ன்