கர்ப்பிணிகள் பாரமான சாமான்களைத் தூக்கினால் கருச்சிதைவு ஏற்படுமா?
அலோபதி நிபுணர்: உண்மையே. ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டவர்கள், மறுமுறை, கர்ப்பம் தரிக்கும்போது, எடை தூக்காமல் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பிணி மிக பலஹீனமாக இருந்தால், அதிகமாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதிக ஓய்வும் தேவை என்றும் கூறப்படுகிறது.
ஆயுர்வேத நிபுணர்: உண்மை. கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிக அதிகமான எடை தூக்குவது, அதிகமாகக் களைப்படைந்து விடக்கூடிய வகையில் வேலை செய்வது போன்றவையால் கர்ப்பச் சிதைவு ஏற்படும்.
ஹோமியோபதி நிபுணர்: பளு தூக்கும்போது கர்ப்பப் பைக்குச் சிரமம் ஏற்படுகிறது. அதனால் கர்ப்பச் சிதைவு ஏற்படலாம் என்பது உண்மையே. எனவே, கர்ப்பிணி, பளுவான வேலைகளைச் செய்வதோ, அதிகப் பளுவுள்ள சாமான்களைத் தூக்குவதோ கூடாது.
பின்குறிப்பு: கொடுக்கப்பட்ட கருத்துகளால் குழப்பம் ஏற்படலாம். அம்மா சொல்வதைக் கேட்பதா, மாமியார் சொல்வதைக் கேட்பதா, அல்லது, அல்லோபதி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்பதா? இம்மாதிரியான சூழ்நிலையில், இக்கருத்துக்களை அப்படியே பின்பற்றுவதற்கு முன், நீங்கள் செக் அப்புக்காகச் செல்லும் மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டு, அவர் சொல்படி நடப்பது சிறந்தது.
-ராஜி