

துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில் மில்லியன் டாலர் விருதைப் பெற்ற இந்திய ஆசிரியர் ரூபிள் நாகி (Rubel Nagi), 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆசிரியர் பரிசை (Global Teacher Prize) வென்றுள்ளார். GEMS கல்வி நிறுவனம், அதன் பத்தாவது பதிப்பில் இந்த விருதை கடந்த வியாழக் கிழமை அன்று ரூபிள் நாகி அவர்களுக்கு வழங்கியது. துபாய் பட்டத்து இளவரசர் இதை வழங்கினார்.
நூற்றுக்கணக்கான கற்றல் மையங்களை உருவாக்கியவரும், குடிசைப் பகுதிகளின் சுவர்களை கல்வி சுவரோவியங்களாக மாற்றுவதில் பெயர் பெற்ற இந்திய ஆசிரியரும் ஆர்வலருமான ரூபிள் நாகி $1 மில்லியன் உலகளாவிய ஆசிரியர் பரிசை வென்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடைபெற்ற உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் ரூபிள் நாகி இந்த விருதைப் பெற்றார். இது உலகெங்கிலும் உள்ள தலைவர்களை ஈர்க்கும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
மும்பையைச் சேர்ந்த இவர், சுவரோவியக் கலைஞர் மற்றும் சமூக ஆர்வலருமாவார். ஜம்மு & காஷ்மீரில் பிறந்து லண்டனில் உள்ள ஸ்லேட் நுண்கலை பள்ளியில் பயிற்சி பெற்ற நாகி, ஆரம்பத்தில் தனது சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களுக்காக புகழ் பெற்றார். 'வகுப்பறை' என்ற கருத்தை மறுவரையறை செய்து சுவர்களையே கல்வி கற்பிக்கும் வகையில் மாற்றினார். கிராமத்து மக்கள் அனைவருக்கும் எளிய முறையில் கல்வியை கற்பிக்க வேண்டும் என்பதே இவருடைய முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும் ரூபிள் நாகி கலை அறக்கட்டளையையும் (RNAF) நிறுவினார்.
புறக்கணிக்கப்பட்ட சுவர்களை வாசிக்கும் வகையில் எழுதும் பலகையாக, எண் கணிதம், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை கற்பிக்கும் வகையில் கல்வி சுவரோவியங்களாக மாற்றிய பெருமைக்காக நாகி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். கடந்த இரண்டு தசாப்தங்களாக, கலையை கற்றல் கருவியாகப் பயன்படுத்தி ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளை முறையான கல்வியில் ஒருங்கிணைக்கும் வகையில் இவருடைய பணி உதவியுள்ளது.
139 நாடுகளில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னுடைய கலை அறக்கட்டளை மூலமாக, இந்தியா முழுவதும் கிட்ட தட்ட 800 க்கும் மேற்பட்ட கல்வி மையங்களை அமைத்து, 100 க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள் மற்றும் கிராமங்களில் பாதுகாப்பான மற்றும் ஊக்கமளிக்கும் இடங்களையும் வழங்கியுள்ளார்.
இந்த மையங்கள், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு கட்டமைக்கப்பட்ட கற்றலைத் தொடங்கவும், முறையான கல்விக்குத் திரும்பவும் உதவுகின்றன, அதே நேரத்தில் ஏற்கனவே படிக்கும் மாணவர்களுக்கு மாற்று ஆதரவு, உளவியல் சமூக உதவி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் வழங்குகின்றன.
இவருடைய அணுகு முறையின் மையமாக திகழ்வது, 'கற்பிப்பதற்காக வாழும் சுவர்கள்' (living walls for learning) ஆகும். இந்த முறையால், கைவிடப்பட்ட சுவர்கள் திறந்த வகுப்பறைகளாக மாற்றப் படுகின்றன. நாகி இந்தியா முழுவதும் விரிவாகப் பயணம் செய்து, ஆசிரியர்களுக்கு வழிகாட்டுவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவும் வகையிலும் பணியாற்றுகிறார்.
இவர் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து, குழந்தைகளின் கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு அளவிடக்கூடிய மாதிரியையும் உருவாக்கி இருக்கிறார். மில்லியன் கணக்கான, பின்தங்கிய இளைஞர்களின் வாழ்க்கை வாய்ப்புகளை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, தொழில்முறை திறன்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவில் இலவச பயிற்சி அளிக்கும் ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தை நிறுவ இந்த பரிசுத் தொகையைப் பயன்படுத்த போவதாக அவர் திட்டமிட்டுள்ளார்.
விருதை ஏற்றுக்கொண்ட ரூபிள், இந்த பரிசு தனக்கும், இந்தியாவிற்கும் கிடைத்த மரியாதை என்று கூறினார். மேலும், 24 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சிறிய பட்டறையில் 30 குழந்தைகளுடன் இந்த பணியை தொடங்கியதாகவும், இப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைச் சென்றடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.