

இன்னொரு நாள், சாயங்காலம் மணி ஆறு இருக்கும். சுப்பிரமணி வெளியூர் போய்விட்டான். அலுப்பின் காரணமாக கட்டிலில் படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் இவள். ஏதோ சத்தம் கேட்டு முழிப்புத் தட்டியது.
‘இந்த எலிங்க தொல்லை தாங்க முடியறதில்லை... என்று முனகிக்கொண்டே திரும்பிப் படுத்தாள். மறுபடியும் சத்தம் கேட்டது. யாரோ கதவைத்தான் தட்டுகிறார்கள் என்று புரிந்துகொண்டு எழுந்துபோய் கதவைத் திறந்தாள். முதலாளி நின்றிருந்தார். சாராய வாடை குப்பென்று அடித்தது. வழக்கத்தைவிட, அதிகமாய் சிரித்தும் கொண்டார். கணவன் குடிக்கும்போது வரும் வாசனை அவளுக்குப் பிடித்தாலும் இது மாற்றானிடமிருந்து வருவதல்லவா. முகத்தைச் சுழித்துக்கொண்டாள்.
“கடைத்தெருப்பக்கம் போனேன்... நம்ம பய ஒருத்தன் ஓட்டல் வச்சிருக்கான். என்னைப் பார்த்ததும் நாட்டுக்கோழி வறுவல் பொட்டலம் போட்டுக்கொடுத்தான். நான் ஒண்டிக்கட்டைதானே... உன் ஞாபகம் வந்துச்சு... அதான் வாங்கிட்டு வந்தேன்...” என்றபடி மடமடவென உள்ளே வந்துவிட்டார்.