
-அகிலா கார்த்திகேயன்
தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகளோடு கூட்டணிக்காக ஈஷிக்கொள்வதுபோல வனஜா மாமி கிளறி இறக்கியிருந்த வடாம் மாவு, பாத்திரத்தையும் கரண்டியையும் பற்றிக்கொண்டு விடுவேனா என்று அடம் மாவாய் மறுத்தது. இப்படிப் பாத்திரத்தோடு பாத்திரமாக தேர்ந்த நடிகனாய் ஒன்றிப் போன வடாம் மாவை எப்படி எடுத்து அச்சில் அடைத்து பிழியப் போகிறோமோ என்று வனஜாவின் விழி பிதுங்கியது.
மொட்டை மாடியில் வேட்டியை விரித்து, பலம்கொண்ட மட்டும் அச்சை அமுக்கியும் அடங்காத மாவு அங்கிருந்து பிதுங்கி வருவேனா என்றது.
இப்படி ஈஷிக்கொள்ளும் மாவின் தன்மைக்குக் காரணம் புரியாமல் வனஜா ஒருபுறம் தவித்தாலும், இதற்கு மூலகாரணமான அகிலாண்டத்தை சபிக்காமலில்லை. வாயாடுவதோடு, வடாம் போடுவதிலும் அகிலாண்டம் மாமி எக்ஸ்பெர்ட். அந்தக் காலத்து மனுஷியாகையால், ஈஷிக்கொள்ளாமல் அதே சமயம் ஈஸியாக வாய்க்குள் கரையும் வடாம் வகையறாக்கள் போடும் கலை மாமிக்கு அத்துபடி. வருடா வருடம் மாமியிடமிருந்து வடாம் டெக்னாலஜியை பாடம் பண்ணிக்கொண்டு, அந்த அபார்ட்மெண்டின் அம்மணிகள் தாங்களும் பிழிய ஓரளவு தெரிந்துகொண்டிருந்தாலும், மாமிக்கு அத்து படியாக இருந்த சூட்சமம் அடுத்தபடியாக யாருக்கும் தெரியாமலிருந்தது.