சிறுகதை; மாடுலர் மாமி!

Short Story in tamil
ஓவியம்; நடனம்
Published on

-அகிலா கார்த்திகேயன்

த்து, பசை, எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குப் பிடிதுணி என்ற, சமைலறைக்கு உண்டான அம்சங்கள் எதுவும் தென்படாத, இருபதடிக்கு பதினைந்தடி அளவிலான, பிரம்மாண்டமான பளபளக்கும் அறையை விசாலம் மாமி காண்பித்து, "இதுதான் மாடுலர் கிச்சன்" என்றதும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் பூஃபெயில் நுழைந்த ராப்பிச்சைக்காரியாய் மிரண்டு போனேன்.

''வுட் வொர்க்குக்கு மட்டும் மூணு லட்சம் ஆயிருக்கு " என்று விசாலம் மாமி விளக்கியபோது, ஒரு வருட காலமாய் அறுபதாயிரம் ரூபாயைப் பீறாய முடியாமல் பைபாஸ் சர்ஜரியை தள்ளிப்போட்டிருந்த என் இதயம் 'பக்பக்' என அடித்துக் கொண்டது.

விசாலம் மாமி ஸ்லோக கிளாஸ்மேட் பையன் வெளிநாடு சென்று சம்பாதித்து மேடவாக்கம் பக்கத்தில் இந்த ஃப்ளாட் வாங்கியதில் இங்கே குடிபெயர்ந்துவிட்டாள். பழைய சிநேகிதத்தை மறக்காமல் எல்லோருக்கும் ஃபோன் செய்வாள். அப்படித்தான் என்னையும் வீட்டுக்கு வா வா என்று கூப்பிட்டுக்கொண்டேயிருந்தாள். மாடம்பாக்கம் கோயில் போகலாமென்று கிளம்பி நடுவில் மாமி வீட்டுக்கு வந்திருந்தேன். வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக மாமி எனக்கு அறிமுகப்படுத்தும் முதல் இடம் மாடுலர் கிச்சன்தான்.

"பாத்து வா வழுக்கிடப் போறது... தரையெல்லாம் மார்பிள். சதுர அடி நூத்திப்பத்து ரூபான்னா பாத்துக்கோயேன்." மாமி எச்சரிக்கிறாளோ எனத் தோன்றியது. ஒருவேளை என் பித்த வெடிப்பு பாதங்களுக்கு, நூற்றிப்பத்து ரூபா மார்பிள் 'மேட்ச்' ஆகாது என சுட்டிக்காட்டுகிறாளோ எனப் பயந்து பூனையாய் கால்களைப் பதித்தேன்.

"மேடையைப் பாரு, உன் முகம் அப்படியே தெரியும்... நல்ல கொரியன் கிரானைட் விலை என்னங்கறே... சதுர அடி முந்நூறோ நானூறோ...'' என்ற தும் மேடையை அருகில் சென்று நோக்கினேன். மெய்யாலுமே என் அசடு வழியும் முகத்தை, அந்தப் பளபள கிரானைட் கல் கொஞ்சம் தூக்கலாகக் காண்பித்தது.

இதையும் படியுங்கள்:
"திருநங்கைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்"- திருநங்கை உதவிப் பேராசிரியர் ஜென்சி!
Short Story in tamil

மாமியே பேசிக்கொண்டு போகிறாளே, நாமும் நம் பங்குக்கு எதையாவது கேட்டு வைப்போமென்று, "இது என்ன மாமி சுவத்திலே மாட்டியிருக்கு? எவர்சில்வர் ஏ.ஸி. மிஷினா?" என்றேன் .

மாமியின் அல்வா முகத்தில் முந்திரியாய்ச் சிரிப்பு சிதறியது. "போடி பைத்தியமே... இது எலக்ட்ரானிக் சிம்னி... எத்தனை அழகாய் இருக்கு பாரு... சத்தமே போடாது. வறுத்துப் பொரிக்கிறபோது எக்ஸாஸ்ட் ஃபேனுன்னா அதிலே பிசுக்கேறும்... இதிலே அந்த தொல்லையெல்லாம் ரொம்ப சுத்தம்... இல்லே ஐயாயிரம் போட்டுன்னா வாங்கியிருக்கு.''

"அதானே பார்த்தேன். சமையல் ரூம் இத்தனை மொரமொரப்பா இருக்கேன்னு " என்றேன். சந்தடி சாக்கில் சுத்தமான கிச்சனின் காரணம் சாதனங்களைச் சார்ந்தது, மாமியின் பங்கொன்றுமில்லை என்று இலேசாக இடித்துரைத்ததில் அல்ப சந்தோஷம்.

''அடி போடி! சிம்னி இருந்துட்டா மட்டும் சமையலறை சுத்தமாயிடுமா என்ன... பாத்திரம், பண்டம், அரிசி, மளிகை சாமான், டப்பான்னு அங்கொண்ணும் இங்கொண்ணுமாக சிதறிக் கிடக்கா பாரு." காய்ந்துபோன பூந்தியாய் விசாலம் மாமியின் பெருமை பிடிபடாமல் உதிர்ந்து கொண்டிருந்தது.

"ஆமாம்... சாமானெல்லாம் வேற ரூமிலே வைச்சுட்டு தேவையானதை அப்பப்போ எடுத்துப்பீங்களோ?" என்றேன்.

''அட, அப்படி பண்ணுவாங்களா என்ன? இதுக்கு பாக்ஸ் டைப் கிச்சன்னு பேரு... பாத்திரம், தட்டு, டம்ளர், பருப்பு, எண்ணெய் எல்லாத்தையும் வெளியிலே தெரியாம, பெட்டி பெட்டியா அடைச்சுடலாம். எல்லாம் வாட்டர் ப்ரூஃப் பிளைவுட்லே செஞ்சது. பூச்சி பொட்டுன்னு அரிக்காது'' என்று சுற்றிலுமுள்ள மரவேலைப்பாடுகளைக் காண்பித்தாள் மாமி.

மேடைக்கு அடியில் மர அலமாரிகளின் ஷட்டர் கதவைத் திறந்து இழுத்ததும் கரண்டி, தட்டுக்கள் என டிரேக்களில் அடுக்கப்பட்டிருந்தன. வேண்டியதை எடுத்துக்கொண்டு மறுபடியும் உள்ளே தள்ளிவிடலாம்.

''நான் சொன்னேனே மூணுலட்சம்னு அது இந்த மரவேலைப்பாட்டுக்கு மட்டும்தான்."

மாமியின் பெருமை பீத்தல் எரிச்சலூட்டினாலும், கிச்சனைப் பார்த்த பிரமிப்பு அகலவில்லை. ஒன்றரை ஆள் உயரத்தில் ஃப்ரிட்ஜ், நவீன மிக்ஸி, கிரைண்டர், ஓவன் என்ற அல்ட்ரா மார்டன் சமையலறை சாதனங்களும் அந்த மாடுலர் கிச்சனைப் பற்றி மாமி அலட்டிக்கொள்வதை நியாயப்படுத்தின.

''வாஷ்பேஸின், குழாய்க்குன்னே ஐயாயிரம் ஆச்சு." மாமி ஒரு வழியாய் பெருமை பீற்றுவதற்கு கைகழுவினாற்போல் முடித்துவிட்டு கிச்சனைவிட்டு வெளியேறினாள். நானும் தொடர்ந்தேன்.

ஹாலில் வந்து சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். மணி மாலை நான்குக்கு மேலிருக்கும். இலேசாகப் பசித்தது. மாமி சாப்பிட காஃபியாவது கொடுக்காமலா விட்டுவிடுவாளென்று தோன்றியது. டிஃபன் ஏதாவதும் தரலாம்தான். ஆனால் சமையலறையை நோட்டமிட்டபோது, மிளகாய், வெங்காயம் என்று எதுவும் நறுக்கி வைக்கப்பட்ட தடயம் தென்படவில்லை. பக்கோடா, பஜ்ஜி, உப்புமா என்று எதைச் செய்வதற்கும் கிச்சனில் முன்னேற்பாடுகள் காணப்படவில்லை. மைக்ரோ ஓவனில் மாயாஜாலமாக நொடியில் செய்வாளோ என்னவோ... என்று நினைத்தபடி உட்கார்ந்திருந்தேன். ஆனால், எந்த உபசாரமும் செய்யாமல் மாமி எதைஎதையோ பேசிக்கொண்டிருக்க நான் பொறுமை இழந்தேன்.

இதையும் படியுங்கள்:
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? என்ன விளக்கம் தெரியுமா?
Short Story in tamil

''அப்போ மாமி நான் கிளம்பறேன். இப்போ கிளம்பினாத்தான் மாடம்பாக்கம் கோயிலுக்குப் போயிட்டு சைதாப்பேட்டைக்கு ராத்திரி ஏழுமணிக்குத் திரும்ப முடியும்" என்று எழுந்துகொண்டேன்.

"நல்லா இருக்கே .. இத்தனை தூரம் வந்துட்டு ஒண்ணும் சாப்பிடாமலா போவ?" மாமி அவசரமாக சமைலறைக்குள் விடு விடுவென்று நுழைந்தாள்.

போன வேகத்தில் மாமி வெளியே வந்தாள். "செல்லை கிச்சனிலேயே விட்டுட்டு வந்துட்டேன்" என்று தான் கிச்சனுக்குள் போன காரணத்தை விளக்கியபடி செல்லில் பேசினாள்.

''ஹலோ! கிச்சாமி மெஸ்ஸா? இன்னிக்கு என்ன போட்டிருக்கேள்? ஓஹோ கீரை வடையா... சூடா நாலு வடையும் ரெண்டு காஃபியும் சட்டுனு எடுத்துண்டு வாங்கோ... கெஸ்ட் வந்திருக்கா. ராத்திரி எப்பவும்போல சப்பாத்தியும் பாலும் போறும். கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தனுப்புங்கோ..."

'செல்'லை நிறுத்திய மாமி சொல்ல ஆரம்பித்தாள் "நானும் இவரும் மட்டும்தானே பார்வதி! ரெண்டு பேருக்குன்னு சமைச்சு, வேலைக்காரியை வைச்சு, பத்து தேய்ச்சு கஷ்டப்படுவானேன்? பையனும் அங்கேர்ந்து திட்டறான். பக்கத்திலேயே நல்ல மெஸ். கார்த்தாலே காஃபி டிபன் லேர்ந்து ஆரம்பிச்சு ராத்திரி சப்பாத்தி வரைக்கும் வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்துடறான். சமையல் ரூம் பக்கமே போறதில்லைன்னா பாத்துக் கோயேன்." மாமி இதற்கும் பெருமைப்பட்டாள்.

டையைச் சாப்பிடுவதற்கு முன் கையை அலம்ப, அந்த மாடுலர் கிச்சனுக்குள் மறுபடியும் நுழைந்தேன். இந்த முறை, கன்னிகழியாத அந்த மாடுலர் கிச்சன்தான் ஏக்கத்தோடு என்னை பார்த்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

இச்சிறுகதை கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக்கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com