

-சாருமதி பாஸ்கரன்
கர்த்தரின் கருணை வழியும் கண்களையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் ஃபாதர் அருள்பிரகாசம். வெகு நாட்களுக்குப்பின் இன்றுதான் திரும்பவும் இதே தேவாலயத்திற்குள் நுழைந்திருக்கிறார்.
தேவாலயத்தில் மணியடிக்கும் ஆன்ட்டனி, ஃபாதரைப் பார்த்ததும் ஓடி வந்தான்.
''ஃபாதர்! நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?" என்று தழுதழுத்தான்.
ஃபாதர் அவனை மெல்ல தட்டிக் கொடுத்தார்.
மனமெனும் தோணியை இழுத்துக்கட்ட முயன்றும், அவிழ்த்துக்கொண்டு தறிகெட்டு ஓட நினைத்தது. மனதை ஒருநிலைப்படுத்த ஸ்தோத்திரங்களை மெல்ல முணுமுணுத்தவாறே, மெழுகுவர்த்திகளை கர்த்தரின் முன் ஏற்றிவைத்தார் ஃபாதர்.
அப்போதுதான் தேவாலயத்தின் முன்பக்க வாசல் வழியே அவள் நுழைந்தாள். அந்த இளம்பெண்ணின் தோற்றம் அளவிட முடியாத சோகங்களைச் சொல்லாமல் சொல்லியது. மெல்ல சுற்றும்முற்றும் பார்த்தவாறே உள்ளே வந்தவள், கர்த்தரின் பாதங்களின் அருகே மண்டியிட்டு அமர்ந்து தலை கவிழ்ந்தாள்.
சற்று நேர மௌனத்திற்குப் பின், அவளிடமிருந்து மெல்லிய விசும்பல் புறப்பட்டது.
கண்ணீர், துக்கத்தை கரைப்பதற்கு மட்டுமல்ல, மனதைக் கழுவுவதற்கும்தான் என்று நினைத்த ஃபாதர், அவள் சற்று நேரம் அழட்டும் என்று பொறுத்திருந்தார்.