
-லதா சேகர்
எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வறுமை என்றால் அப்படி ஒரு வறுமை. சாப்பிட ஒன்றுமே இருக்காது. அப்படியே ஏதேனும் உணவு சமைத்தால்கூட தன் பங்கு சாப்பாட்டையும் எனக்கு ஒதுக்கி 'நீ சாப்பிடு... எனக்கு இன்னைக்கு என்னமோ பசியே இல்ல' என்பாள். இது என் அம்மாவின் முதல் பொய்.
வீட்டின் அருகில் குளம். அதில் மீன் பிடிப்பது அம்மாவின் வழக்கம் .போஷாக்கான ஆகாரம் கொடுத்து, ஆரோக்கியமாக என்னை வளர்ப்பதில் அவளுக்கு ஆசை. மீன் அகப்பட்ட அன்று ருசியாகக் குழம்பு வைப்பாள். ஒரு பிடி பிடிப்பேன். 'நீயும் சாப்பிடும்மா' என்றால், 'எனக்கு சைவம்தாம்ப்பா பிடிக்கும். மிச்சம் வைக்காம நீயே முழுக்கச் சாப்பிடு' என்பாள். என்னிடம் அம்மா சொன்ன இரண்டாவது பொய்!
தீப்பெட்டித் தொழிற்சாலையில் அம்மா வேலை பார்த்தாள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் என்னைப் படிக்க வைத்தாள். நாள் முழுக்க அங்கு வேலை செய்தது போக இரவு பூரா மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு வீட்டிலும் தீப்பெட்டி செய்வாள். 'அம்மா தூங்கும்மா' என்றால், 'எனக்கு தூக்கமே வரலப்பா; நீ படுத்துக்கோ ராஜா' என்பாள். இது என் அம்மாவின் மூன்றாவது பொய்.