மாமியார் மருமகள் சண்டை சூடுபிடித்தது. உச்சக்கட்டத்தை எட்டியது. ஒருவருக்கொருவர் கைநீட்டிக் கத்தியபடி இருந்தார்கள்.
மைதிலி நிதானமிழந்து மாமியாரை அடிக்கக் கையோங்கியபடி போனாள். அதைப் பார்த்த மாமனார் கோபத்துடன், “நில்லுடி. என்ன கை நீளுது. மனதில் என்ன நினைப்பு? என்னெதிர்லேயே என் மனைவியை அடிப்பியா? கையை ஒடித்து விடுவேன். ஜாக்கிரதை” பாய்ந்து சென்று மைதிலியின் கையைப் பிடித்தார்.
“ஏ கிழவா நில். என் மனைவியின் கையைப் பிடிக்க நீ யார்? மரியாதையா கிழடுகள் ரெண்டு பேரும் வீட்டை விட்டுக் கிளம்புங்க” மனைவிக்குப் பரிந்து பேசியபடி அப்பாவை நோக்கிப் போனான் மகன்.
அழைப்பு மணி அழைத்தது.
கதவைத் திறந்தார் ராமநாதன். வீட்டுச் சொந்தக்காரர் பசுபதி நின்று கொண்டிருந்தார்.
“என்ன ராமநாதன் சார், நீங்க படிச்சவர்தானே? நாலு குடித்தனம் இருக்கிற இடத்தில் இப்படித்தான் அநாகரிகமா நடந்து கொள்வீங்களா? எல்லோரும் கீழே கூடி நிற்கிறாங்க தெரியுமா...”
“சார் , என்ன சொல்றீங்க? நாங்கள் எந்தவிதமான தவறும் செய்யவில்லையே.”
“இப்படித்தான் டி.வி.யைப் பலத்த சத்தத்துடன் கேட்பீர்களா? நீங்கள் பார்க்கும் கண்றாவி சீரியலைக் கேட்டு, மற்ற குடித்தனக்காரர்கள் நீங்க சண்டை போடுறீங்கனு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிறாங்க... டி.வி.யை நிறுத்துங்க சார். இல்லனா டி.வி. அலறல் சத்தத்தையாவது குறைங்க” எனக் கூறிப் போனார் பசுபதி.
ராமநாதன் திரும்பிப் பார்த்தார். உள்ளே டி.வி.யில் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
- சுஜாதா சுந்தர்,