சிறுகதை - எதிர்வீட்டு ஜன்னல்!

short story...
short story...

-ஜெ.ஜெயகுமார்

விஜய்யின் வீட்டுக்கு எதிரே உள்ள அடுக்குமாடி வீட்டு கட்டிடத்தில் அன்று அதிகாலை என்றுமில்லாத பரபரப்பு.

சென்னை வாழ்க்கையில் கண் எதிரே கொலையே  விழுந்தாலும் அவரவர் அவரவர் கடமைகளை ஆற்ற அவரவர் ஸ்கூட்டரிலோ  காரிலோ பறந்து விரைந்து கொண்டிருப்பர். சற்று சோம்பலாக, நிதானித்தால் வாழ்க்கை  கை நழுவி போய்விடும்!

எதிர்வீட்டு  அசாதாரணமான மௌனம், விசும்பல்கள், மெல்லிய அழுகுரல்கள்,  அதுவரை அரசல் புரசலாக அறிந்த மரணச்செய்தியை மெல்ல வெட்ட வெளிச்சமாக்கியது  விடிந்த காலைப்பொழுது.

அங்கே ஒரு மரணம். நாற்பது வயது மனிதர், தன் கருப்புக்காரை தினமும் புனிதக்கடமையாக துடைக்கும் "ஒர்க் பிரம் ஹோம்" ("வீட்டிலிருந்தே அலுவலக வேலை") ஐ.டி. மனிதர்.  ஏதோ உடல் பிரச்னை என்று ஆஸ்பத்திரி சென்ற மனிதர்   அங்கேயே ஐஸ்பாக்சில் அடைக்கலமானார்.

பொதுவாக சென்னை அடுக்கு மாடி கட்டிட வாழ்க்கை ,  அடுத்த வீட்டு மனிதர்களை பற்றி அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து , பேரன் பேத்தி எடுத்து, இறுதியில் மின்சார மயானத்திற்கு இறுதிப்பயணம் மேற்கொள்ளும்  காகித நட்புச்சங்கிலிகள் நிறைந்த வாழ்க்கை.

பிறகுதான் தெரிந்தது மனிதர் இறந்து இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரி மார்ச்சுவரியில் வைக்கப்பட்டு , இன்று அவர் அமெரிக்க வாரிசுகள் வருகிறார்கள் என்பதால் ஐஸ்பாக்சில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் என்று.

அவர் பாலக்காட்டு பக்கமாம். சற்று நேரத்தில் தெரு முழுவதும் விதவிதமான கார்களில் வளைகுடா மற்றும் அமெரிக்க நாடுகளில் வெற்றிகரமாக பணி புரிந்து உயர்நிலை வாழ்க்கையை அடைந்த மலையாளித் தமிழர்கள் அடையாறிலிருந்தும், ஈ. சி. ஆர் ரிலிருந்தும் வந்திறங்கினர்.

ஒவ்வொரு நாள் காலையும் விஜய் வாக்கிங் செல்லும்போது  இறந்த அந்த ஐ.டி மனிதர்   தன் காரை அழகு மிளிர துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே " குட் மார்னிங்" சொல்லிவிட்டு செல்வான். இருவருக்கும் ஒருவர் பெயர் மற்றவருக்கு தெரியாது, அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

விஜய்க்கும் அது போலவே ஒரு ஹோண்டா கார் வாங்கவேண்டும் என்று  வெகுநாள் ஆசை. அவன் பட்ஜெட்டிற்கு ஒரு செகண்ட் ஹாண்ட் காராவது வாங்க ஆசை!

விஜய்யின் மனைவி அப்போது வெளியூரில் இருந்ததால், எதிர் வீட்டு மரணச்செய்தி அறிந்தவுடன் ஓடோடிச்சென்று மலையாள மனிதர்களிடையே புகுந்து, மீளா தூக்கத்திலிருந்த  கணவரையே   பார்த்துக்கொண்டு மீளா துக்கத்தில் இருந்த, கண்ணீர் சுரப்பிகள் வறண்ட ,அவர்தம் மனைவிக்கு  மௌனமாக  அனுதாபங்களை தெரிவித்து விட்டு ஐஸ்பாக்ஸ் மனிதருக்கும் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்த மலையாளி மனிதர்களுக்கு சடங்குச் சங்கு ஊதுவதற்கு ஏற்பாடு போன்ற  அவசர உதவிகளை அளித்து விட்டு இறுதிச்சடங்குகள் முடிந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட  இறுதி ஊர்வலத்தேருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு குளித்து விட்டு அவனுடைய சொந்த வாழ்க்கைக்குள் மீண்டும் நுழைந்தான் விஜய்.

வாரங்கள் மாதங்களாயின. அந்த ஹோண்டா கார் அதே இடத்தில் தினசரி தெருப்புழுதி ஏறி ஏறி ஓனருக்காக ஏங்கி ஏங்கி நின்று கொண்டிருந்தது.

ஒருநாள் அலுவலகம் விட்டு வீடு திரு ம்பிய விஜய், அலுவலகம் விட்டு வீடு திரும்பிய விதவை மனுஷியை அவர் வீட்டு  வாசலில் இடை மறித்து, சில சம்பிரதாய சிக்கன உரையாடல்களுக்குபிறகு,  அந்த ஹோண்டா காரை விலைக்குத்தரமுடியுமா என்று வினவினான் விஜய்.

கணவரின் இறுதி ஊர்வலத்தன்று விஜய் செய்த உதவிகட்கு நன்றி தெரிவித்துவிட்டு அந்த விதவைப்பெண் காரை விஜய்க்கு விற்க இயலாது என்று வருத்தம் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!
short story...

சற்று ஏமாற்றத்துடன் விஜய் ஏன் என்று வினவ அவர் " உங்களுக்கு நான் காரை விற்றேன் என்றால், என் வீட்டு ஜன்னல் வழியே தினமும் உங்கள் வீட்டு  வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என் காரை நான் பார்க்க நேரிடும்.நானும் என் கணவரும் அந்தக்காரில் பயணம் செய்த அனுபவங்கள், தேன் நிலவு நாட்கள், போக்குவரத்து நெரிசலில் அவரின் பொறுமையிழந்த முன்கோபத்தை நான் அவர் கன்னத்தில் இட்ட முத்தத்தால் ஆசுவாசப் படுத்தியது   எல்லாம் என் கண் முன் நிற்கும் காலாகாலத்திற்கும்”!

கண் காணாத இடத்திற்கு என் கணவர் சென்றதைப்போல் கண் காணாத இடத்திற்கு என் காரையும் விற்கப்போகிறேன்" என்று சொல்லி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

விஜய்யும் அந்த வித்தியாசமான விளக்கத்தை புரிந்து கொண்டு அவளைப்பாராட்டிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.

நாட்கள் வாரங்களாயின. அந்த விதவை மனுஷியை ஓரிருமுறை தெருவிலும் பஸ் ஸ்டாப்பிலும் பார்த்தாலும் விஜய் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தான். சமீபத்தில் விதவையான பெண்ணுடன் பேசினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பு!

ஒரு நாள் வீட்டுவாசலில் அந்த பெண்ணை யதேச்சையாக   பார்த்தபோது அவர் விஜய்யிடம் பேச  ஆரம்பித்தார்.

"உங்களுக்கு என் கார் வாங்க இன்னும் ஆசையிருக்கா"? என்று வினவினார்.

விஜய் சிறு அதிர்ச்சி அடைந்து "எஸ்" என்றான். அவர் தொடர்ந்தார். "எனக்கு பெங்களூருக்கு டிரான்ஸ்பெர் ஆயிருக்கு" நீங்கள் வேண்டுமானால் என் காரை வாங்கிக்கொள்ளுங்கள்"

“ நான்  பெங்களுர் சென்று விட்டால் என்னை பொருத்தவரை என் கார்  கண் காணாத இடத்தில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!. " எனவே ஒரு நல்ல விலைக்கு நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று முடித்தார்.

சில நாட்களுக்கு முன் “யூடியூபில் பார்த்த " வா ராஜா வா" திரைப்படத்தில் வந்த வரிகள் விஜய்க்கு ஞாபகத்திற்கு வந்தது

"விரும்பிப்போனால் விலகிப்போகும்: விலகிப்போனால் விரும்பி வரும்"

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com