

மரணமும் டைரிக் குறிப்புகளும்
வீட்டின் ஹாலில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த மூர்த்தியின் உடலை அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர் ஸ்வப்னாவும் லக்னாவும். சுற்றிலும் உறவினர்கள் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் ஸ்வப்னாவுக்கு அந்தச் சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அப்பா இறந்த செய்தி வந்தபோது அவள் மதுரையிலிருந்து அவசரமாக வந்திருந்தாள். காலை வரை தன்னிடம் போனில் பேசிக்கொண்டிருந்த மனிதர், மதியம் வரை கதவைத் திறக்காததால் பக்கத்து வீட்டு புஷ்பாக்கா வந்து பார்த்தபோது, சுஜாவின் புகைப்படம் முன் சாய்ந்தபடி மூர்த்தி அமைதியாக இருந்தாராம்.
அவரது கைகளில் ஒரு ஜாதி மல்லி பூ.
அதை கேட்டவுடனே ஸ்வப்னாவின் இதயம் உடைந்துபோனது.
அனைவரும் வெளியே இருந்தபோது, அவள் மெதுவாக அப்பாவின் அறைக்குள் வந்தாள். அந்த அறை இன்னும் சுஜா உயிரோடு இருந்த நாட்களைப் போலவே இருந்தது. சுவற்றில் சுஜாவின் புகைப்படம். அருகில் அன்று காலை போட்ட ஜாதிப்பூ மாலை. சிறிய பித்தளை விளக்கு. கட்டிலின் அருகில் நீட்டாக மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை வேட்டி.