

மதியம் உச்சி வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு இருந்தது. அனைவருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிடும் நேரம் வந்துவிட்டது. எல்லோரும் அந்த வாய்க்கால் மேட்டு ஆலமரத்தின் அருகில் நிழலில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினார்கள்.
அவளும் வாய்க்காலில் முகம், கை, கால்களை கழுவி விட்டுச் சாப்பிடுவதற்கு வந்து அமர்ந்தாள். அப்பொழுது அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வீராயி.
“என்னக்கா இப்படி பார்த்துட்டு இருக்க?”
“இல்ல பொன்னுத்தாயி... உன்னோட கல்லுத்தோடு காதுல இல்லாம இருக்கு என்ன ஆச்சு?”
“ஐயோ என்னக்கா சொல்றீங்க?”
“உன்னோட காதுல கல்லுத்தோட காணோடி!”
தன்னுடைய காதை தொட்டுப் பார்த்த பொன்னுத்தாயி காதில் கல்லுத்தோடு இல்லை என்று தெரிந்தவுடன் செய்வதறியாது திகைத்துப் போனாள்.
அழுது ஆர்ப்பரித்தாள். முகம், கை கால்கள் கழுவிய இடத்தில் அழுது கொண்டே தேடிக் கொண்டிருந்தாள்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கல்லுத்தோடை நினைத்து வருத்தமாகவே இருந்தாள். இது தன்னுடைய கணவன் எடுத்துக் கொடுத்த கல்லுத்தோடு என்பதால் அவளுக்கு அவருடைய நினைப்பாகவே இருந்தது. எல்லா பெண்களும் அவளை தேற்றினார்கள். அவர்களும் அந்த கல்லுத்தோடை தேடி பார்த்தார்கள்.