

இதுதான் அதுவோ?!
இது மட்டும்
வந்து விட்டால்
இருப்பே கொள்ளாது!
இருளிலும் பார்வை
இனிதாய் ஒளிர்ந்துவிடும்!
தூக்கத்திலும் பார்ட்னர்முகம்
தூய்மையாய் அருகில்வரும்!
காட்டில் நின்றாலும்
கடுகளவு பயங்கூட
உள்ளத்தில் தங்காது
உடலை வருத்தாது!
எண்ணம் முழுவதிலும்
ஏந்திழையாள்(ன்) இருப்பதனால்
மற்றவற்றை மனது
மறைத்தே விடுகிறதோ!
எதையும் துச்சமென
எதிர்த்துநிற்கும் ஆற்றலையும்
கொடுத்தே மனதை
கொடைவள்ளல் ஆக்கிடுதோ!
உள்ளத்தில் இதுவந்தால்
உடலெங்கும் புதுரத்தம்
பொங்கிப் பாய்கிறதே
பூவுலகே சொர்க்கமாகிறதே!
அவனை(ளை)ப் பார்த்தாலே
ஆனந்தம் பொங்கிவந்து
மனதை நிறைக்கிறதே
மகிழ்வைக் கொடுக்கிறதே!
உண்மை நேர்மையுடன்
உழைப்பால் முன்னேறி
இணைந்தே வாழ்வதற்கு
இதயங்கள் நினைக்கிறதே!
கண்ணாடி முன்னாலே
காத்திருந்து பார்த்துப்பார்த்து
நம்மை நாமே
ரசிக்கும் அனுபவமும்
உள்ளத்தில் உறைக்கிறதே
உதிரத்தில் கலக்கிறதே!
காத்திருக்கும் கால்நொடியும்
யுகமாய்த் தோன்றிடுதே
யூகத்தில் கழிகிறதே!
இணைந்திருக்கும் நேரமது
எவ்வளவுதான் நீண்டாலும்
கணமாய்த் தெரிகிறதே
கழிவிரக்கம் கொள்கிறதே!
கைபிடித்து நடக்கையிலே
கல்நிறைந்த பாதைகூட
மெத்தையாய்ப் பாதங்களை
மெல்லத் தடவிடுதே
மென்மையாய்த் தோன்றிடுதே!
பிறந்த பயனையுமே
பெற்றிட்டதாய் மனது
திருப்தி அடைகிறதே
தித்திப்பில் மிதக்கிறதே!
காதல்வந்த மாந்தரிடம்
தோன்றும் மாயத்தைக்
கவின்தமிழும் முழுமையாகக்
கழன்றிடத் தயங்கிடுமோ!
காதல்தினம் கொண்டாடும்
களிப்பான காதலரே!
வாழ்க்கை நெடுகிலுமே
வதிந்திடுங்கள் துணையுடனே!
சாதிமத பேதங்களைத்
தகர்க்கும் பீரங்கி
காதல் ஒன்றேயென்றால்
கச்சித உண்மையது!
உண்மைக் காதலையே
உலகமென்றும் போற்றிடுமே!
காதலர் தினமின்று!
கவின்காதல் வாழ்ந்திடட்டும்!
கண்ணியம் மிகக் கொண்டே
காதலைப் பேணிடுவீர்!
வளமான வாழ்க்கையிங்கு
வாய்த்திடட்டும் அனைவருக்கும்!