

மனைவியிடம் கருத்து கேட்காமல், தன் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு வந்தான் பிரகாஷ். "அத்தை என்கிட்ட தப்பு கண்டுபிடித்து திட்டினாலும் கண்டுக்காமல், கோபப்பட்டாலும் பொறுமையா சமாளிச்சுக்கிட்டுதானே இருக்கேன்.. முதியோர் இல்லத்துல அவங்களை விட்டதுக்கு நான்தான் காரணம்னு ஊரும், உறவுகளும் என்னைத்தானே தப்பா பேசும்.." என்று கவலைப்பட்டாள் உமா.
"பொறுமைசாலியான குணவதியான என்னோட பாட்டியை எங்க அம்மா எவ்வளவு கொடுமைப்படுத்தினாங்க, நானும் அப்பாவும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், முதியோர் இல்லத்தில கொண்டு போய் விட்டாங்க.. பாட்டி அங்கேயே செத்தும் போயிட்டாங்க. அந்த மன வலியை கொஞ்ச நாளாவது இவங்களும் அனுபவிக்கட்டும்னுதான் இப்படி செஞ்சேன்.." என்று தன் மனைவியிடம் சொல்லி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான் அவன்.