

"அம்மா, மீதி வேலைய நாளைக்கு வந்து செய்யறேன். ரொம்ப நேரம் ஆயிட்டு" என்றாள் பொன்னி.
"சரி நானும் போய் அம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்துடறேன். ரூம் ரெடி பண்ணியாச்சு" என்று சொல்லிக் கொண்டே கிளம்ப எத்தனித்தேன்.
மொபைல் ரிங்கியது. "பவானி மேடம், அம்மா கொஞ்சம் முடியாம இருக்காங்க... உடனே வாங்க ஹாஸ்பிடலுக்கு" பதறியது நர்ஸின் குரல்.
எனக்குள் மளுக்கென்று ஏதோ உடைந்தது. ஸ்பீக்கரில் செய்தியை கேட்ட பொன்னி "நானும் வரேன். ஒண்ணும் ஆவாது பெரியம்மாக்கு. கவலைப்படாதீங்கம்மா," என்றாள் ஆறுதலாக.
"ஏசி ஸ்விட்ச போட்டு வை ரெடியா." என்றேன்.
எங்கள் இருவரையும் அமர்த்திக் கொண்டு ஆட்டோ பறந்தது ஹாஸ்பிடலை நோக்கி.
என்னைப் பார்த்தவுடன் நர்ஸின் தலை தாழ்ந்தது.
அம்மா புன்னகை மாறாத முகத்துடன் படுத்திருந்தாள்.
டாக்டர் கௌரி என் அருகில் வந்து "ஸாரி பவானி" என்றார்.
என் மனப்புயல் அடங்கி சலனமற்று இருந்தது.
ஆம்புலன்ஸில் பொன்னியும் நானும் அம்மாவுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
இரண்டு மணி நேரமாக திரைச்சீலைகள் படுக்கை விரிப்புகள் எல்லாவற்றையும் புதியதாக மாற்றி அம்மாவிற்காக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அறையில் ஃப்ரீசர் பாக்ஸில் நிச்சலனமாக படுத்திருந்தாள் அம்மா.
பொன்னி என் தோளை மெல்லத் தொட்டாள். வராண்டாவில் பிளாஸ்க்கில் அவள் வாங்கிய காப்பி. "ஒரு முழுங்கு சாப்பிடுங்கமா. அப்புறம் உங்க அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லுங்கம்மா."
குபுக்கென்று கண்ணீர் பெருக அவள் கரங்களை பற்றி கொண்டேன்.
அம்மாவின் நினைவுகள் என் மனதில் மேலெழும்பி தாங்க முடியாத ஒரு வலியை என் இதயத்தில் ஏற்படுத்தியது.
"பவானி, ஒரு காபி வாங்கி குடேன்...." நேற்று மதியம் அம்மா என்னுடன் கடைசியாக பேசிய வார்த்தைகள். காப்பியை வாங்கி நர்ஸிடம் கொடுத்துவிட்டு, அம்மாவிற்கான அறையை சுத்தம் செய்வதற்காக வேகமாக வீட்டிற்கு வந்து விட்டேன்.
"இவ்வளவு சிரமப்பட்டு எனக்காக கிளீன் பண்ணினியா?" கண்ணாடி பெட்டிக்குள் இருந்து அம்மாவின் குரல் கேட்டதோ?