

அவருக்கு வயது எண்பதைத் தாண்டியபோது, அவர்களுக்குத் திருமணமாகி அரை நூற்றாண்டைக் கடந்திருந்தார்கள். எல்லோரையும் போலவே ஓர் ஆணையும், பெண்ணையும் பெற்றெடுத்து, அவர்களை உயர் படிப்பெல்லாம் படிக்க வைத்து, நல்ல பணியிலும் அமர வழி செய்து கொடுத்தார்கள்.
வங்கிப் பணியில் உயர் பொறுப்பில் இருந்த அவர், சிறு வயதில் கஷ்டப் பட்டாலும், அவர் கற்ற கல்வி அவரை உயர் நிலைக்கு அழைத்துச் சென்று விட்டது. பொருளாதாரத்திலும், சமூகத்திலும் உயரக் கல்வியும், பணியும் உதவின. நிலை உயர, உயர மனநிலையையும் அவர் விசாலப் படுத்திக் கொண்டதால் ஊரும், உறவும் அவரை உயர்த்திப் பிடித்தன.
அவருக்கும், அம்மையாருக்கும் 10 வயது வித்தியாசம் என்றாலும், அவர்கள் வாழ்க்கையில் அது பெரிதாகத் தெரிந்ததில்லை. அம்மையாரின் குடும்பம் சற்று அதிக வசதி படைத்தது என்றாலும், வங்கிப் பணி காரணமாக அவருக்குப் பெண் கொடுக்க அம்மையாரின் பெற்றோர்கள் முன் வந்தார்கள்.
ஆரம்பத்தில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பல ஊர் மாற வேண்டியிருந்தாலும், அதனை அவர்கள் உற்சாகமாகவே ஏற்றுக் கொண்டார்கள். பல இடங்களைப் பார்த்து, அங்கு வாழும் சந்தர்ப்பங்களை எண்ணி மகிழ்ந்தார்கள்.