

கலாவின் மனம் அன்று அதிகாலை முதலே சமையலறையில் மிகவும் பரபரப்பாக இருந்தது.
கேசரிக்கு நெய்யில் வறுத்த முந்திரியின் மணம் வீடு எங்கும் பரவியது அன்று.
மகன் ஷாமின் பிறந்த நாள். அதனால் அவனுக்கு பிடித்தமான கேசரி, வடை, பூரி என்று மெனு போட்டு வைத்திருந்தாள்.
கலா அவள் வீட்டின் ஒரே செல்ல மகள். அவளை திருமணம் செய்து கொண்ட ரவியும் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளைதான்.
நல்ல வசதியுடன் கூடிய வாழ்க்கை.
ரவியின் அம்மா அன்பானவர், ஆனால் கொஞ்சம் அந்தஸ்து பேதம் பார்ப்பவர்.
எதையும் கொஞ்சம் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்.
அதிலும் குறிப்பாக இந்த வீட்டின் முதல் வாரிசு என்றால் சும்மாவா?
ஒரு மாதமாக பேரனின் பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். மாலை வேளையில் விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மற்றும் இரவு உணவுக்கு மிகவும் பிரபலமான ஹோட்டலில் ஆர்டர் செய்து இருந்தார்.
அந்த வீட்டில் திருமணத்திற்கு பிறகு கலாதான் எல்லாம் என்றாலும், கலா பங்கஜத்தை கலந்து கொள்ளாமல் சிறு துரும்பைக் கூட அசைக்க மாட்டாள்.
அன்று வீட்டில் அனைவரும் வழக்கம்போல் இருந்தாலும், அவள் உள்ளத்தில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி மலர்ந்து கொண்டிருந்தது. அது இந்த வருடம் ஷாமின் பிறந்த நாளை சாதாரணமாக கொண்டாடாமல், ஒரு அர்த்தமுள்ள நாளாக இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்திருந்தாள்.
கணவனிடம் “ரவி, நீ சீக்கிரம் ரெடி ஆகி வா… நம்ம போகணும்,” என்று அவள் மெதுவாக சொன்னாள்.
ரவி சிரித்தான். “எங்கேன்னு இன்னும் சொல்லலையே?” என்று கேட்டான்.