பிரச்சனைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல!

Suicide
Suicide
Updated on

சாதாரண பிரச்சனை என்றாலும் உடனடியாக தற்கொலைக்கு முயல்வது இன்று ஒரு பேஷன் ஆகிவிட்டது. ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், இறந்து போன அவருக்கு வேண்டுமானால் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். ஆனால் மற்றவர்களுக்கு தொடர் பிரச்சினைகள் தொடரத்தான் செய்யும். அதனால் பிரச்சனைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல.

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அடுத்த பாம்பு காரன் வட்டம் பகுதியைச் சேர்ந்த தம்பதி. இதில் அவரது கணவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரின் மனைவி தனது நாலு வயது மகனுடன் சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் கிணற்றில் விழுந்தவர்களை மீட்க முற்பட்டபோது தாய் மட்டும் மீட்கப்பட்டார். குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

குழந்தை உடல் கிடைக்காத நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதாள கொலுசு போட்டு குழந்தையின் உடலை மீட்டனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்தப் பிரச்சினையில் இப்போது தாயும் தகப்பனும் தங்களின் தவறை உணர்ந்து இறந்து போன குழந்தை நினைத்து வருந்தி புலம்புகின்றனர்.

இதை தொடர்ந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ரூபி, சம்பவம் நடந்த ஊருக்குச் சென்று, அங்குள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் கூறுகையில்,

"ஒரு பிரச்சனைக்கு தற்கொலை தீர்வாகாது, அப்படி தற்கொலை தான் தீர்வு என்றால் இங்கு பலர் உயிரோடு இருக்க மாட்டோம். பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அவர்கள் உடனடியாக தங்களுக்கு நன்கு தெரிந்தவர்களிடம் பிரச்சனை குறித்து கூற வேண்டும். இல்லையென்றால் நேரடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் வர வேண்டும். அங்கு அவர்களுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும். இந்த பிரச்சனையில் அந்தப் பெண், நான் இறந்து விட்டால் என் குழந்தை அனாதையாகி விடும் என்று நினைப்பில் அவனையும் தற்கொலைக்கு சேர்த்து முயன்றேன் ஆனால் விதி என்னை காப்பாற்றி என் மகனை பலியாகிவிட்டது என புலம்புகிறார். இப்போது கணவனும் தான் திருந்தி விட்டதாக புலம்புகிறார். ஆனால் போன உயிர் போனது தான். அதனால் இனிமேலாவது எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு தற்கொலை தான் தீர்வு என முடிவு செய்யாதீர்கள்"

என அறிவுரை வழங்கினார்.

இதையும் படியுங்கள்:
அவசர காலங்களில் உங்களுக்கு உதவும் உதவி எண்கள் இதோ!
Suicide

ஆனால், மகளிர் காவல் நிலையம் உட்பட, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செல்லும் பொதுமக்களை போலீசார் மரியாதையாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகாலமாக உள்ளது. அதனால் தான் பலர் போலீஸ் ஸ்டேஷன் செல்வதற்கு அஞ்சுகின்றனர் என்றும் கூறுகின்றனர். இதனால் தான் போலீஸ் ஸ்டேசனுக்கு வெளியே வைத்து பல பிரச்சினைகள் தவறான முறையில் தீர்க்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்களிடம் சற்றே மரியாதையுடன் நடத்தி, கேள்விகளை கேட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com