தனக்கு மிஞ்சிதான் தான, தர்மம் என்ற மொழியை பொய்யாக்கியவர். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ பாடலுக்கு எடுத்துக்காட்டானவர். எப்போதும் எது செய்தாலும் மக்களுக்கு உதவியாயிருந்தவர்.
தன் செயலில் தன்னுடைய இறை அனுபவமும், இறையின் கருணையும் படர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பிய நல்லவர். அதனால்தான் ‘இச்செயலை நானே செய்தேன்’ என்கிற கர்வம் அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. ஆரம்பத்தில் அவரின் இயல்பு என்னவோ அதே மாதிரியே வாழ்நாளின் இறுதிவரை வாழ்ந்த தங்க மனசுக்காரர்.
1984ல் 18 படங்கள், 1985ல் 17 படங்கள் இதுவரை வேறு எந்த ஹீரோவும் செய்யாத மாபெரும் சாதனையாளர். தன் அலுவலகத்திற்கு வந்து செல்கிறவர்களை வெறும் வயிற்றோடு திரும்ப அனுப்பாமல் வயிறு நிரம்ப அன்னமிட்ட மாமனிதர்.
கேப்டன்... கதாநாயகனாக நடித்து நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டன. திரையில் தோன்றியே பல வருடங்கள் ஆகிவிட்டன. பொதுக்கூட்ட மேடைகளில் பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டன். ஆனாலும், மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக இறுதி மரியாதை செலுத்த வந்தார்கள் என்றால்... தங்கள் குடும்பத்தில் மிகவும் பிரியமான ஒருவரை இழந்துவிட்ட கவலை அனைவருக்கும்.. அன்று முழுவதும் அன்ன ஆகாரம் இல்லாமல் தொலைக்காட்சி முன்னாலே உட்கார்ந்திருந்தவர்கள் பலர் (அதில் நானும் ஒருத்தி.)
அப்படி என்ன செய்தார் இந்த மனிதர்?
பொருளாதார ரீதியாக இறைவன் அவரை ஆசீர்வதித்த போது தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை மட்டும் உயர்த்திக்கொள்ளாமல், பிறருக்கு தாராளமாக கொடுத்து தன் தரத்தை உயர்த்திகொண்டார்.
கடவுள் உண்டு என்று உண்மையாக உணர்ந்தவர் கேப்டன். அதனால்தான் எல்லா விஷயங்களிலும் குழந்தையைப் போலவே சூதுவாது தெரியாமல் தந்திரங்கள் தெரியாமல் இருந்துவிட்டார்.
மனித நேயத்தில் கேப்டனை மிஞ்சிய ஒரு ஆள் உலகத்திலேயே இல்லை. தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பவன் கொடையாளி. தன்னிடம் இருப்பதிலேயே மிகச் சிறந்ததை பிறகருக்கு கொடுப்பவன் வள்ளல். கேப்டன் வள்ளல்தான். அதில் சந்தேகமே இல்லை. அதனால்தான் பசியாறிய பல வயிறுகள் மனம் குளிர்ந்து அவரை வாழ்த்தின.
உணவு கொடுத்தவர் எல்லாம் உயிர் கொடுத்தாரே என்கிறது நம் தமிழ் அறம். பல்லாயிரம் பேருக்கு உணவு கொடுத்து உயிர் வளர்த்தவரவல்லவா… இப்படி கேப்டனைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்…
என் சின்ன வயதில் எடப்பாடி சக்தி தியேட்டரில் 'அகல்விளக்கு' திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது. அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் இன்னமும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. முதன்முதலாக அவரைப் பிடிக்க ஆரம்பித்தது அந்த பாடலின் மூலம்தான்.
'ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான்...ஏதோ.." பாடலின் தொடக்கத்தில் வர ஹம்மிங்' ...நீங்காத இள(னி)மையின் நினைவுகளை கொடுக்கவல்லது.
இப்பாடல் தொடங்கி, இன்னும் எத்தனை எத்தனையோ பாடல்களின் மூலம் மனதிற்கு நெருக்கமானார் கேப்டன்.. இது எல்லாம் பள்ளி பருவத்தில்...
(இத்தருணத்தில் ஒன்றை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். நாங்கள் ஆறு தோழிகள் (37வருட நட்பு) அதில் ஒருவர் ஜெயா என்கிற ஜெயலட்சுமி (காவேரிப்பட்டணம்) கேப்டன்தான் அவளுக்கும் உயிர் மூச்சு. அவரைப் பற்றி ஏதாவது யாராவது தவறாகப் பேசினால் சண்டைக்கு போய்விடுவாள். கேப்டனின் மறைவு செய்தி கேட்டு இரண்டு நாட்கள் உயர் ரத்த அழுத்தத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து நலமாகி வந்தாள். .. இந்தப் பதிவை அவளுக்கும் நான் டெடிகேட் செய்கிறேன்.)
அதன் பிறகு என் கல்லூரி காலத்தில் அவரின் அரசியல் சார்ந்த வசனங்கள், நான் பல மேடைகளில் பேச பேருதவியாக இருந்தன.
அதிலும் சில வசனங்களை இன்று வரை என்னால் மறக்க முடியாது. குறிப்பாக:
‘தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு'’
‘நான் கவர்ன்மென்ட் சர்வன்ட்தான். ஆனால் கவர்மெண்ட் என்பது மக்களோட சர்வன்ட்.’
‘உனக்குத் தண்டனை நான் கொடுக்கல. இந்த நாடு கொடுக்கட்டும் இந்த நாட்டு மக்கள் கொடுக்கட்டும்.’
'என் கீழ வேலை பாக்குறவங்களும் நேர்மையாகத்தான் இருக்கணும்.’
இப்படி வசனங்களாலும், பாடல்களாலும் கவர்ந்த அழகிய புன்னகைக்கு சொந்தக்காரரான கேப்டனை அரசியலில் தோல்வியடைந்தவர் என பலர் சொன்னாலும், ஒரு நல்ல மனிதனாக, சொக்கத்தங்கமாக அவர் மக்களின் மனதில் பிடித்திருந்த உயர்ந்த இடத்தை யாராலும் தட்டி பறிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம். இதுதான் அவரின் உண்மையான வெற்றி.
அது மட்டுமா பல ஊடகங்களும் காவல்துறையைக் கிண்டலாக சித்தரித்தபோது... தன்னுடைய படங்கள் மூலமாக மக்கள் மனதில் காவல்துறைக்கு மரியாதை சேர்த்தவர். அதனால்தானோ என்னவோ இன்று காவல்துறையே 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தி, தன் நன்றி கடனை திருப்பிச்செலுத்தியுள்ளது!