"காண்பது இனிமை"

கவிதைகள்
"காண்பது இனிமை"
Updated on

- வி.துரைக்கண்ணன்

மழை நின்றதும்...

தளதளப்பாய் செடியில்

நீர்தெளித்தாடும்

ஊதாநிறப் பூக்கள்

தரையில் பள்ளம்போட்டு

அதிலோடும்

சிறு நீரோட்டங்கள்

சிலிர்ப்பான காற்றில்

பூமியே

ஒரு புது அழகாய்

சிறகடித்து சடசடத்து

கிளைதாவும்

சில வண்ணப்பறவைகள்

ஈரமணலில் சரேலென

சிராய்த்தோடும்

சைக்கிளின் சக்கரங்கள் ...

********

களவு போன சொர்க்கம்

சிவப்பும் பழுப்புமாய் இறங்கி மறையும் சூரியன்

இருள் கவியும் குளிர் நேரம்

கழுத்துமணி ஓசை கிளுங்க

வீடு திரும்பும் கொம்புமாடுகள்

குடிசைகள் எல்லாம் மினுக் விளக்குகள்

சாண வாசலில் இரைக்க ஓடி விளையாடும் சிறுவர்கள்

கண்கசங்கும் புகையூடே

அம்மா சமைக்கும் இரவு சாப்பாடு

சாப்பிட்டபின் முற்றத்தில் கதை பேச

கருப்பு வானில் ஒன்றிரண்டு தாரகையோடு

எங்கள் ஊருக்கு மெல்ல எழுந்து வரும் வெள்ளி நிலா

இதமான வீசு தென்றலுடன்...

logo
Kalki Online
kalkionline.com