

நம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....
டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றாக தாய்ப்பால் குடித்து கொண்டிருந்த குழந்தைகள் திடீரென தாய்ப்பால் குடிக்காமல் இருப்பார்களா?
நிச்சயமாக. சில தாய்மார்கள் இதுபோன்ற பிரச்சனைகளுடன் எங்களை அணுகியுள்ளனர். தாயிடம் நன்றாக தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தை, திடீரென ஒருநாள் தாய்ப்பால் குடிக்காமல் முரண்டு பிடிக்கும்.
குறிப்பாக தாய்ப்பால் குடிக்க தாயின் மார்பகத்தின் அருகில் வரை வரும் குழந்தை பாலை குடிக்காமல் அழத்தொடங்கும். இதற்கு காரணம், ஒருவேளை பாலூட்டும் தாய் தன்னுடைய சோப் மற்றும் சென்ட் பிராண்டுகளை மாற்றி இருக்கலாம்.
குழந்தைக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்த தாயின் வாசனையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இப்படி நிகழலாம்.
மேலும், தீபாவளி போன்ற நேரத்தில் குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென வெடி சத்தம் கேட்பதாலோ அல்லது தாய்ப்பால் ஊட்டிக்கொண்டிருக்கும் தாய் பட்டாசு வெடி சத்தத்தினால் பயந்தாலோ, குழந்தை அடுத்த முறை தாய்ப்பால் குடிக்க செல்லும்போது தாய் பயந்ததை நினைத்துகொண்டு தாய்ப்பால் எடுத்துக்கொள்ள மறுக்கும்.
மேலும், தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தை மார்பகத்தை தெரியாமல் கடித்துவிடும்பட்சத்தில் தாய் அலறிவிட்டாலும் குழந்தை அடுத்த முறை தாய்ப்பால் குடிக்க யோசிக்கும். இதனால் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் மகிழ்ச்சியான மனநிலையில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
தாய்ப்பால் தொடர்பான கேள்விகளும் பதில்களும் தொடரும்...