
நம்முடைய அடுத்த தலைமுறையின் முக்கிய ஆதாரமாக விளங்கும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு Birth Basix: Pregnancy Physiotherapy, Yoga and Lactation Support நிறுவனர் மற்றும் pelvic floor physiotherapist board certified Lactation Consultant டாக்டர் சோனாலி சந்தானம் அவர்கள் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக பகிர்ந்துகொண்ட தகவல்களிலிருந்து தொகுப்பு....
டாக்டர் சோனாலி, அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பிரசவகால சிகிச்சைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும், மகப்பேறு கால பிசியோதெரபி சிகிச்சை முறையில் அமெரிக்கன் போர்டின் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தனை மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கவேண்டும்? நீண்டகாலம் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள நன்மைகள் என்ன?
உலக சுகாதார மையம் குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்க வலிறுத்துகிறது. பச்சிளம் குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுப்பதால், அது, வயிறு சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது. அதுபோல் ஒன்பது மாதங்களுக்கு மேல் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதால், அடோபிக் டெர்மடைடிஸ் (atopic dermatitis) மற்றும் அரிப்பினால் ஏற்படும் தோலழற்சியின் நிகழ்வுகளைத் தவிர்க்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது.
குழந்தைக்கு 2 முதல் 3 வயது வரை தாய்ப்பால் கொடுப்பதால் தாய் கர்பபைவாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார். தாயின் குடும்பத்தில் யாருக்காவது கர்பபைவாய் புற்றுநோய் இருந்தால், இளம் தாய்மார்கள் நீண்டகாலம் தாய்ப்பால் கொடுப்பது அவரின் எதிர்காலத்திற்கு நல்லது.