
பாட்டுக்கொரு புலவன் பாரதி
பால் வடியும் கண்ணனை வர்ணித்து
பக்திப் பரவசத்துடன் பாடினான்
தூயத் தமிழினிலே!
அன்னை பராசக்தியை ஆராதித்து
அன்புடன் வணங்கி அர்ச்சித்தான்
அமுதத் தமிழினிலே!
பெண்மையைப் போற்றி அவர்தம்
பெருமைதனை உலகறியச் செய்தான்
மென்மைத் தமிழினிலே!
வீரத்தை கவிதையில் படைத்து
வீராவேசமுடன் விடுதலை முழுக்கமிட்டான்
வீரத் தமிழினிலே!
பாரத மண்ணிற்குத் தேவையான
பாங்கான பல கருத்துக்களை அன்றே
பாகுபாடின்றி அழகாக எடுத்துக் கூறி
அன்றும், இன்றும், என்றும் நினைவில் வாழும்
பாட்டுக்கொரு புலவன் பாரதி –
நின் புகழ் வாழ்க!
பாரதி பாடல்களிலே விஞ்சி நிற்பது –
மொழியுணர்வே!
விழிப்புணர்வே!
நாட்டுணர்வே!
'பட்டி மன்றம்' ஒன்று
பாரதி விழாவிலே
மும்பை மாநகரிலே!
முத்தலைப்பிலும் முத்தரப்பினரும்
முத்து முத்தாக முத்தினார்கள்!
மொழியுணர்வே என்றனர்
மொழிப்பற்று கொண்ட பலர்!
விழிப்புணர்வே யென்றனர்
விழித்திருந்தோரெல்லாம்!
நாட்டுணர்வென சாடினர்
நாவலிமை படைத்தோர்!
தலைவனின் தீர்ப்பு அறிய
தலைகள் பல எழுந்தன ஆவலுடன்!
தன்னம்பிக்கையுடன் தயங்காமல்
வெளிப்பட்டது தீர்ப்பு தலைவனிடமிருந்து!
மொழியுணர்வு, விழிப்புணர்வு தேவையெனினும்
''பாரத மாதா; பாரத தேசம்; பராசக்தியென
வித்தியாசமில்லாத மதம், இனம் கடந்து
விஞ்சி நிற்கும், 'நாட்டுணர்வே'
அன்றும், இன்றும், என்றும் தேவையென
மகாகவி அன்று கூறியதை, மறுபடியும்
கூறுகின்றேன் இன்று நான்!"