
இரவென்னும்
கறுப்பழகி
வான நெற்றியில்
வைத்துள்ளாள்
நிலவென்னும் பொட்டு!
…………………………………..
தாத்தாவின்
மரணம்;
அனாதையானது
கைத்தடி!
…………………………………..
அப்பா இறந்த பின்
தனியாளாய் நின்று
குடும்பத்தை
நடத்திய அம்மாவை
நினைவூட்டுகிறது;
அந்த தூரத்து
ஒற்றைப் பனை!
…………………………………..
ஆயிரம்
கண்ணுடையாள்
அம்மன் கோயிலில்
ஆயிரத்தி ஒன்றாம்
கண்ணாய்
பொருத்தப்பட்டது
சி.சி.டி.வி. கேமரா!
…………………………………..
மழை
பெய்ததும்
தார் சாலையில்
பூக்கத் துவங்கின
குடைப் பூக்கள்!