அதீத கடன் பிரச்சனையிலிருந்து எப்படி மீளலாம்?

அதீத கடன் பிரச்சனையிலிருந்து எப்படி மீளலாம்?
Published on

-வெங்கட்ராமன் ராமசுப்ரமணியன்

மெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகர் டேவ் ராம்சே (Dave Ramsey) அவர்கள், கடனில் மாட்டிக் கொண்டுள்ளவர்கள், அதிலிருந்து மீள, மானின் தீவிரத்தை (gazzelle intensity) கொண்டிருக்க வேண்டுமென்கிறார்.  தன்னை துரத்தும் சிறுத்தையிடமிருந்து இருந்து தப்பிக்க ஒரு மான் எவ்வாறு அதிகபட்ச வேகத்தில் ஓடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதோ, அவ்வளவு தீவிரமாக கடனில் மாட்டிக் கொண்ட மனிதன் முயன்று தன் கடனிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.

கடனிலிருந்து மீள்வதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, அதிகமாக பணத்தை சம்பாதிக்கப் பார்ப்பது. இரண்டாவது, சம்பாதிக்கும் பணத்தில் சிக்கனமாக வாழ்ந்து, அதிகமாக பணத்தை சேமிக்கப் பார்ப்பது. இவ்வாறு சேமித்தப் பணத்தை, கடனை அடைப்பதில் திருப்புவது.

கடனில் மாட்டிக் கொண்ட பின்னர், அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உதாரணமாக, முருகன் என்ற நபருக்கு பின்வரும் கடன்கள் இருப்பதாகக் கொள்வோம். 

  • நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் – வட்டி விகிதம் 0% – ரூபாய் 10,000
  • கடன் அட்டைக் கடன் – வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000
  • வாகனக் கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000
  • மனைவியின் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து வாங்கிய கடன் – ரூபாய். 30,000
  • வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்

கடன் பனிப்பந்து முறை (Debt snowball approach): கடன்களை அவற்றின் பாக்கியின் (balance) படி வரிசைப்படுத்த வேண்டும். எல்லாக் கடன்களுக்கும் மாதத் தவணைத் தொகை (EMI) செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை, வரிசையில் முதலிலுள்ள, மிகவும் குறைவான பாக்கியுள்ள கடனிற்கு திருப்பி, அதனை அடைக்க வேண்டும். முதல் கடனை அடைத்த பின், வரிசைப் படி, எல்லாக் கடன்களையும் மேற்சொன்னவாறு அடைக்க வேண்டும். மனோதத்துவ வகையில் பார்க்கும்போது, இது சிறந்த முறை. சிறிய கடன்களை அடைக்கும் போது, உற்சாகம் பீறிட்டு, தன்னம்பிக்கை கூடுகிறது. ஆனால், இம்முறையில், வட்டி என்ற வகையில் அதிகப் பணம் வீணாகும்.

இம்முறையில், கடன் வரிசைப்பட்டியல்: 

  1. நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் – வட்டி விகிதம் 0% – ரூபாய் 10,000
  2. மனைவியின் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து வாங்கிய கடன்- வட்டி விகிதம் 8% – ரூபாய். 30,000
  3. வாகனக் கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000
  4. கடன் அட்டைக் கடன் – வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000
  5. வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்

கடன் பனிச்சரிவு முறை (Debt avalanche approach): கடன்களை அவற்றின் அதிக வட்டி விகிதத்தின்படி வரிசைப்படுத்த வேண்டும். எல்லாக் கடன் களுக்கும் , மாதத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை, வரிசையில் முதலிலுள்ள, அதிக வட்டியுள்ள கடனிற்கு திருப்பி, அதனை அடைக்க வேண்டும். முதல் கடனை அடைத்த பின், வரிசைப் படி, எல்லாக் கடன்களையும் மேற்சொன்னவாறு அடைக்க வேண்டும். இம்முறையில் வட்டி என்ற வகையில் பணம் குறைவாக வீணாகும். ஆனால், கடன்களை அடைக்க நேரமானால், மன உறுதியை இழக்க கூடாது.

இம்முறையில், கடன் வரிசைப்பட்டியல்:

  1. கடன் அட்டைக் கடன் – வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000
  2. வாகனக் கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000
  3. வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்
  4. மனைவியின் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து வாங்கிய கடன்- வட்டி விகிதம் 8% – ரூபாய். 30,000
  5. நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் – வட்டி விகிதம் 0% – ரூபாய் 10,000

கடன் பனிப்புயல் முறை (Debt blizzard approach):  இது முன்குறிப்பிட்ட இரண்டு வகைகளும் சேர்ந்த கலவை. கடன்களை வரிசைப்படுத்தும் போது,  முதல் கடன், மிகவும் குறைந்த பாக்கியுள்ள கடன். மீதமுள்ள கடன்கள், அதிக வட்டி விகிதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப் படுகின்றன. எல்லாக் கடன்களுக்கும் , மாதத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை, வரிசையில் முதலிலுள்ள, குறைந்த பாக்கி கடனிற்கு திருப்பி, அதனை அடைக்க வேண்டும். முதல் கடனை அடைத்த பின், வரிசைப் படி, எல்லாக் கடன்களை மேற்சொன்னவாறு அடைக்க வேண்டும். இதில் முதல் கடனுக்குப் பிறகு, கடன்களை அடைக்க நேரமாகும் போது, மன உறுதியை இழக்கக் கூடாது.

இம்முறையில், கடன் வரிசைப்பட்டியல்:

  1. நண்பரிடமிருந்து கைமாற்றாக வாங்கிய கடன் – வட்டி விகிதம் 0% – ரூபாய் 10,000
  2. கடன் அட்டைக் கடன் – வட்டி விகிதம் 15%— ரூபாய் 60,000
  3. வாகனக் கடன் — வட்டி விகிதம் 12% — ரூபாய் 50,000
  4. வீட்டுக் கடன்— வட்டி விகிதம் 10 % — ரூபாய் 15 லட்சம்
  5. மனைவியின் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து வாங்கிய கடன்- வட்டி விகிதம் 8% – ரூபாய். 30,000

மன உளைச்சல் முறை(Stress based approach): கடன்களை அவை அளிக்கும் மன உளைச்சல் அளவின்படி வரிசைப்படுத்த வேண்டும். எல்லாக் கடன்களுக்கும், மாதத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை, வரிசையில் முதலிலுள்ள, அதிக மனஉளைச்சல் உள்ள கடனிற்கு திருப்பி, அதனை அடைக்க வேண்டும். முதல் கடனை அடைத்த பின், வரிசைப் படி, எல்லாக் கடன்களையும் மேற்சொன்னவாறு அடைக்க வேண்டும். இதில், முதல் கடன், பெரியக் கடனாக இருந்தால், மன உறுதியை இழக்காமல், தொடர வேண்டும்.

நண்பர் அதிக மன உளைச்சல் தருவதாக கொள்வோம். கடன் அட்டை நிறுவனம் அதிக மன உளைச்சல் தருவதாக கொள்வோம்.  அந்த இரு கடன்களையும் முதலில் அடைக்க வேண்டும்.

உணர்வுப் பூர்வமான முறை (Sentiment based approach): கடன்களை அவை அளிக்கும் உணர்வுப் பூர்வமான பாதிப்பின் அளவின்படி வரிசைப்படுத்த வேண்டும். எல்லாக் கடன்களுக்கும், மாதத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை, வரிசையில் முதலிலுள்ள, அதிக உணர்வுப் பூர்வமான பாதிப்பு உள்ள கடனிற்கு திருப்பி, அதனை அடைக்க வேண்டும். முதல் கடனை அடைத்த பின், வரிசைப் படி, எல்லாக் கடன்களை மேற்சொன்னவாறு அடைக்க வேண்டும்.இதில், முதல் கடன், பெரியக் கடனாக இருந்தால், மன உறுதியை இழக்காமல், தொடர வேண்டும்.

மனைவிக்கு தங்க சங்கிலி மிகவும் பிடித்ததாக இருக்கலாம். நண்பர் உறவு பாதிக்கக்கூடாது என்ற உணர்வு ரீதியான காரணம் இருக்கலாம். அப்போது அந்த இரு கடன்களையும் முதலில் அடைக்க முயற்சிக்கவேண்டும். இதில் பெரும் மன திருப்தி ஏற்பட வாய்ப்பு உண்டு.

என்னைப் பொறுத்தவரையில், பனிப்பந்து முறை மிகச்சிறந்த, மனோதத்துவ
ரீதியான (psychology) முறையும் கூட.
அதில் கடன்களை அடைக்க அடைக்க உற்சாகம் பிறக்கிறது. அதனை அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகர்
டேவ் ராம்சே பரிந்துரைக்கிறார்கள்.
அதனை நான் பின்பற்றி வெற்றி கண்டுள்ளேன்.
நீங்கள் உங்களுக்கு எந்த முறை ஒத்துவருகிறதோ, அதனைப்
பின்பற்றலாம்.

கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன். 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com