தாகத்தைத் தணிக்க உதவும் உணவுகள்!

தாகத்தைத் தணிக்க உதவும் உணவுகள்!
Published on

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

– ஏ.எஸ்.கோவிந்தராஜன்

ஆப்பிள் : தினமும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்றுதான் ஆப்பிள். ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

ப்ளம்ஸ் : கோடை வெயிலில் ஏற்படும் கடுமையான தாகத்தைப் போக்க ப்ளம்ஸ் பழம் அதிகம் உதவுகிறது. கோடையில் ப்ளம்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

பசலைக்கீரை : உணவில் அடிக்கடி பசலைக்கீரையை சேர்த்துக்கொண்டால் கோடை வெயிலில் தாகம் எடுக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இந்தக் கீரையை பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, மலச்சிக்கல் பிரச்னையில் இருந்தும் விடுபடலாம்.

மாம்பழம் : குளிர்ச்சி தன்மை கொண்டதோடு, தாகத்தையும் தணிக்கும் குணங்களை கொண்டது மாம்பழம். கோடையில் விலைக் குறைவாகக் கிடைக்கும் மாம்பழத்தை சாப்பிடுவதால் அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம்.

கிவி : கிவி பழம் புளிப்பாக இருந்தாலும், தாகத்தை எளிதில் தணிக்கும் என்பதால், உடல் வறட்சி அடையாமல் இருக்க கோடை காலத்தில் கிவி பழத்தைச் சாப்பிடலாம்.

வாழைப்பழம் : விலை மலிவாகக் கிடைக்கும் பழங்களுள் ஒன்று வாழைப்பழம். வாழைப்பழத்தை கோடைக்காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவதையும், தாகம் எடுப்பதையும் குறைக்கலாம்.

இளநீர் : தண்ணீருக்கு அடுத்தபடியாக தாகத்தைத் தணிக்க உதவும் பானங்களில் ஒன்றுதான் இளநீர். இளநீர் உடலில் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடலுக்கு ஆற்றலையும் தந்து, உடல் வெப்பமடைவதைத் தடுக்கிறது.

திராட்சை : கோடைக் காலத்தில் கருப்பு திராட்சையை சாப்பிடுவதால், அதிக தாகம் எடுப்பதைத் தடுக்கிறது. திராட்சை மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பமடைவதைத் தடுத்து, வறட்டு இருமல் வருவதையும் தடுக்கிறது.

வெள்ளரிக்காய் : கோடைக் காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து 90 சதவீதம் உள்ளது. கோடைக் காலத்தில் வெள்ளரிக்காயை ஒருவர் அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை குறைந்து, உடல் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

நலமான வாழ்வுக்கு உதவும் பொடிகள்!

சுண்டவற்றல் பொடி : குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அச்சமயங்களில் இந்த சுண்டவற்றல் பொடியை குழந்தைகளுக்குக் கைப்பிடி சாதத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கை சரி செய்யலாம். சுண்டவற்றலுடன் மாங்கொட்டைப் பருப்பு, மாதுளையின் ஓடு, ஓமம், வெந்தயம், நெல்லிக்காய் வற்றல் ஆகியவற்றைத் தேவையான அளவுக்கு எடுத்து, இவற்றைத் தனித்தனியே வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தேவையானபோது அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அஷ்ட சூரணம் : சாப்பிட்டு முடித்ததும் சிலருக்கு புளித்த ஏப்பம், வயிறு உப்பிப்போகுதல் மற்றும் சாப்பிட்டவுடன் வாயுக்கோளாறு போன்றப பிரச்னைகள் ஏற்படும். அந்த நேரத்தில் அஷ்ட சூரணம் சாப்பிட்டால் மிக விரைவாக குணமடையலாம். அஷ்ட சூரணம் செய்வதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம் இவற்றைச் சம அளவில் எடுத்து வறுத்துப் பொடி செய்துக்கொண்டு, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாயுக்கோளாறு குறையும். மேலும் இது கழுத்து வலியையும் குணப்படுத்தும்.

வெந்தயக் கூட்டுப் பொடி : வெந்தயக் கூட்டுப் பொடி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அந்நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. வெந்தயப் பொடி செய்வதற்கு முதலில் வெந்தயம், ஆவாரம் பூ, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்), நாவல் கொட்டை, கறிவேப்பிலை அனைத்தையும் சம அளவில் எடுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் 1 – 2 டீஸ்பூன் அளவு மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால், வரவிருக்கும் சர்க்கரை நோயைத் தள்ளிப்போடலாம். இந்தப் பொடியில் கறிவேப்பிலையும் வெந்தயமும் கலந்திருப்பதால் கெட்ட கொழுப்பும், திரிபலாவின் துணையால் மலச்சிக்கலும் குறையும்.

மிளகு கற்பப் பொடி : மிளகை உணவில் தினமும் சேர்க்க வேண்டியது அவசியமாகும். 200 கிராம் மிளகை மூன்று நாட்கள் மோரிலும், அடுத்த மூன்று நாட்கள் இஞ்சிச் சாற்றிலும், இப்படி மூன்று மூன்று நாட்களாக வேலிப்பருத்தி, தூதுவளை, கற்பூரவல்லி, ஆடுதொடா இலைச் சாறு ஆகியவற்றில் ஊறவைத்து மிளகை உலர்த்தி எடுத்து, இதனுடன் சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கடுக்காய் போன்ற அனைத்து வகைகளையும் 25 கிராம் அளவுக்குச் சேர்த்து ஒன்றாக வறுத்து, இடித்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியை சளி, இருமல், மூச்சிரைப்பு உள்ள குழந்தைகளுக்குக் காலை உணவு கொடுப்பதற்கு முன்னர், தேனில் மூன்று சிட்டிகை சேர்த்து குழைத்துக் கொடுத்தால் நாளடைவில் சளி வெளியேறி, மூச்சிரைப்பு நிற்கும். சளி மீண்டும் வராத அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்குக் கொடுக்கும். ஆரோக்கியம் காக்கும் இந்தப் பொடிகளைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டியது அவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com