முத்துக்கள் மூன்று! 

முத்துக்கள் மூன்று! 
பத்மினி பட்டாபிராமன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2002 லிருந்து 14 வருடங்கள் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் துறையில் வருகைப் பேராசிரியர் பிரபல எழுத்தாளராக பல பத்திரிகைகளில், நூற்றுக் கணக்கான சிறுகதைகள், பேட்டிகள், மருத்துவக் கட்டுரைகள், குறுநாவல்கள் வெளிவந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளன. அவை புத்தக வடிவிலும் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னை தொலைக்காட்சியில் பகுதி நேர அறிவிப்பாளராக, தொகுப்பாளராக, 15 வருடங்கள் பணி. சென்னை வானொலி பண்பலையில் இரண்டு வருடங்கள் செய்தி வாசிப்பாளர் மற்றும், நாடக ஆசிரியர். சமூக சேவை இலக்கியம் இரண்டிலும் சிறப்பாக பணி செய்துவரும் உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர்.

Updated on
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
உக்ரைனில் மாணவர்களை மீட்ட பெண் விமானி

கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயதான பெண் விமானி மகாஸ்வேதா சக்ரவர்த்தி, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவித்த 800 மாணவர்களை  மீட்டு சாதனை படைத்துள்ளார். இவர் மத்திய அரசின்  "ஆபரேஷன் கங்கா" திட்டத்தின் கீழ், 6 விமானங்களை இயக்கி, முக்கியப் பங்காற்றி, பெண்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் தனியார் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார். உத்தர பிரதேசம், அமேதியில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிறுவனமான 'இந்திரா காந்தி ராஷ்டிரிய உரான்' அகாடமியில் மகாஸ்வேதா பட்டம் பயிற்சி பெற்றவர்.

பிப்ரவரி 27 முதல் மார்ச் 7 வரை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு 6 விமானங்களை இயக்கி மாணவர்களை மீட்க உதவியுள்ளார்.

ஒரு நாளைக்கு 13 – 14 மணிநேரம் ஏர்பஸ் ஏ320 விமானத்தில் பறக்க வேண்டியிருந்ததாகவும், ஆனால் கவலையில் இருந்த மாணவர்களைப் பார்க்கும் போது, தனக்கு எந்த சிரமமும் பொருட்டாக இருக்க வில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்ட மத்திய அரசின் "வந்தே பாரத்" திட்டத்திலும் விமானங்களை இவர் ஓட்டியிருக்கிறார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதிலும்.,தடுப்பூசிகளை புனேவிலிருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு மூலம் கொண்டு சென்றதிலும் ஒரு விமானியாக அயராது பணியாற்றியிருக்கிறார்.

 டாக்டரேட் பெற்று விஞ்ஞானியான நடிகை! 

ஸ்டெம்செல் பையாலஜியில் (Stem cell biology) பி.ஹெச்டி வாங்கியிருக்கிறார் நடிகை வித்யா ப்ரதீப்.

தமிழில் தவம், பசங்க-2 மற்றும் அருண் விஜய் நடித்த தடம், தலைவி, களரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். நாயகி சீரியலிலும், பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளின் ரியாலிடி ஷோக்களில் பங்கேற்றிருக்கிறார்.

சங்கர நேத்ராலயாவில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். ஸ்டெம் செல் பயாலஜி எனப்படும் உடலின் செல் வகைகள், அவற்றின் தன்மைகள் குறித்த ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்று விஞ்ஞானியாகி விட்டார் இந்த அழகிய நடிகை.

பிளாஸ்டிக் வேஸ்ட்டிலிருந்து எரிபொருள் கண்டுபிடித்த பெண்மணி!

பொதுவாக, தாவர, மற்றும் உயிரினங்களின் கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருள் (Bio fuels) எடுக்கும் தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டு வருவது நமக்குத் தெரியும்.  ஆனால், பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மலிவாக எரிபொருள் உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார் ஒரு இளம் பெண்.

அவர், எகிப்தைச் சேர்ந்த அஸ்ஸா அப்தெல் ஹமித் பயாத். என்பவர். பள்ளி மாணவியாக இருந்த போதே, வேஸ்ட் பொருட்களில் இருந்து எரிபொருள் தயாரிப்பதில்  ஆர்வம் கொண்டிருந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட உயிரி எரிபொருள் விலை உயர்ந்ததாக இருந்தது. எனவே அதற்கு மாற்றாகவும், விலை மலிவாகவும் பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டார்.

பின்னர், கெய்ரோவில் உள்ள எகிப்திய பெட்ரோலிய ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, கால்சியம் பெண்டோனைட் எனப்படும் பிளாஸ்டிக்கை உடைக்கப் பயன்படும் புதிய வினையூக்கியை (Catalyst) கண்டுபிடித்தார்.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைந்த வெப்பநிலையில் வைக்கும்போது, அது மீத்தேன், புரொப்பேன் மற்றும் ஈத்தேன் போன்ற வாயுப் பொருட்களாக உருமாறி, அவற்றை எளிதாக உடைத்து எத்தனாலாக (உயிரி எரிபொருள்) மாற்றப்படும். இது ஏற்கனவே உள்ள பிற கண்டுபிடிப்புகளை விட மிகவும் மலிவாக எரிபொருளை உற்பத்தி செய்வதாக கூறப்படுகிறது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com