
தொகுப்பு : மீனு
ஃபைன் ஆர்ட்ஸ் ஸொஸைட்டி செம்பூர் – மங்கையர் மலர் (கல்கி க்ரூப் ஆஃப் ஆன்லைன் பப்ளிகேஷன்ஸ்) இணைந்து நடத்திய 'முதல் ஆன்லைன் தீமேட்டிக் நவராத்திரி கொலு போட்டி 2021' வெற்றிகரமாக நடைபெற்றது.
வயது வித்தியாசமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து மொத்தம்
63 பங்கேற்பாளர்களுடன் ஜொலிஜொலித்தது இப்போட்டி.
கொடுக்கப்பட்ட விதிமுறைகளின்படி தரமான 3 புகைப்படங்கள் மற்றும்
2 நிமிட வீடியோவை பங்கேற்றவர்கள் அனுப்பி வைத்தனர். ஒவ்வொருவருக்கும் கொடுத்த பதிவு எண் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தன.
12.10.21 அன்று 'ஜூம்' வழியாக அனைவருடைய கொலுவும் நேரடியாக காட்டப்பட்டு விவரிக்கப்பட்டன.
பத்மினி பட்டாபிராமன் (சென்னை), மீனலதா (மும்பாய்) இருவரும் நடுவர்களாக இருந்து மிகவும் திறமையாக செயல்பட்டனர்.
16.10.21 அன்று இறுதிப் போட்டி முடிவுகளின் அறிவிப்பு 'ஜூம்' வழியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக
லோகநாயகி ராமச்சந்திரன் செயல்பட்டார். கொலுவின் முக்கியத்துவம்,
ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் கல்கி குழுமம் பற்றி அருமையாக பேசிவிட்டு
பரிசு பெற்றவர்களின் பெயரை அறிவித்தார்.
முதல் ஆன்லைன் 'தீமேட்டிக் கொலு போட்டி 2021'ஐ செவ்வனே நடத்த,
ஃபைன் ஆர்ட்ஸ் ஸொசைடி மானேஜிங் கமிட்டி தலைவர்
திருமதி ராதிகா அனந்தகுமார், கல்கி குழும நிர்வாக அதிகாரி லக்ஷ்மி நடராஜன் இருவரும் எடுத்துக்கொண்ட முயற்சி போற்றத்தக்கதாகும்.
திருமதி ராதிகா நன்றியுரை வழங்க நிகழ்வு இனிதே முடிவடைந்தது.
முதல் பரிசு :
சுஜாதா கிருஷ்ணன்
************
இரண்டாம் பரிசு :
மகாலக்ஷ்மி
************
மூன்றாம் பரிசு :
சாந்தி சேஷாத்ரி
************
ஆறுதல் பரிசு-1 :
சரண்யா வி.ராஜன்
************
ஆறுதல் பரிசு-2 :
உமா ஜெயசங்கர்
************
புதுமையான முயற்சிக்கான பரிசு-1 :
வினு சுந்தர்
வினு சுந்தர் (USA) : 2002ஆம் ஆண்டு முதல் இங்கே வசிக்கும் நாங்கள், ஆரம்பத்தில் இருந்தே பாரம்பரிய முறைப்படி சிறிய அளவில் கொலு வைப்பது வழக்கம். கடந்த ஐந்து வருடங்களாக கொலுவில் புதுமையை ஏற்படுத்த, பலரும் பாராட்டினார்கள்.
'இந்த வருடம் என்ன தீம்? என்ன புதுமை?' எனத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் எல்லோரும் நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே கேட்க ஆரம்பித்துவிட, அன்புக் கணவர் சுந்தரிடம் கலந்தாலோசித்தேன். இருவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை.
சமீபத்தில் எங்கள் வீட்டு பேஸ்மெண்ட் ரெனொவேஷன் செய்யப்பட்டது. ஃபால் சீலிங் எதேச்சையாக நீல நிறத்தில் பெயின்டிங் செய்யப்பட. 'தேவலோகம்' ஐடியா பிறந்தது.
படிகள் தனியாக வைக்கப்படாவிட்டாலும், அனைத்து பொம்மைகளையும் fishing lineல் தொங்கவிட்டு, தனித்தனியே திண்டு மீது மேலும் கீழுமாக அமர வைத்தோம். பேப்பரில் பஞ்சை ஒட்டி, அதன் மேல் மீண்டும் நிறைய பஞ்சை வைத்து, மேகம் மாதிரி செய்து முடித்தோம்.
ஆகாயத்தில் கொலு பொம்மைகள் சஞ்சரிப்பது போல இருந்தாலும், தனித்தனி படிகளின் மீதுதான் வைக்கப்பட்டுள்ளன.
fishing lineல் பொம்மையைத் தொங்க விடும் முன்பு, பலவித முயற்சி செய்து முடிச்சு போடுவது பற்றி ஆராய்ந்து, YouTubeல் பார்த்து கற்றுக்கொண்டு செய்ததில், 'தேவலோகம்' சூப்பராக அமைந்தது தேவியின் அருளே!
************
புதுமையான முயற்சிக்கான பரிசு-2 :
கவிதா பாலாஜி
கவிதா பாலாஜி : கடந்த பதினெட்டு வருடங்களாக பாரம்பரிய முறையில் கொலு வைத்து வரும் நான், கடந்த மூன்று வருடங்களாகப் புதுமையைப் புகுத்தி வருகிறேன்!
ஐந்து படிகளும் ஸ்டீலால் ஆனது. இதை செட் செய்து அழகாக வைப்பது எனது கணவரின் பணி. இவ்வருடம், 'தாமரைப் பூ வடிவமைப்பு' எனத் தீர்மானித்து, அதன் வடிவைக் கொண்டு வர, படிகளின் இரு பக்கங்களிலும் பாக்ஸ் வைத்து, எக்ஸ்ட்ராவாக ஸ்டீல் தட்டைப் பொருத்தினேன்.
டார்க் பிங்க் கலர் சார்ட் பேப்பரை கட் பண்ணி மேல் படியில் வைத்து, மகரந்தத்தை வெளிப்படுத்தும் வண்ணம் மஞ்சள் நிறத் துணி ஒன்றை இடையில் சொருகினேன். பிங்க் கலர் சார்ட் பேப்பரைத் தாமரை இதழ்கள் போல வெட்டி, இரண்டு மற்றும் மூன்றாவது படிகளில் அடுக்கடுக்காக வைத்து குண்டூசியால் இணைக்க, தாமரைப்பூ வடிவம் பெற்றது. இவற்றின் இடையே கொலு பொம்மைகள் அம்சமாக வைக்கப்பட்டன.
நான்கு மற்றும் ஐந்தாவது படிகளில் பேஸ் பச்சை நிறம் வேண்டுமென்பதால், பச்சை நிறப் புடைவை, பச்சை கலர் சார்ட் பேப்பரை உபயோகித்தேன்.
பிங்க் நிற சீரியல் விளக்கு மேற்புறத்திலும், க்ரீன் நிற சீரியல் கீழ்ப்புறத்திலும் போட, தாமரைப்பூ வடிவக் கொலு சூப்பராக ஜொலித்தது.