ஊழலும் ஹைடெக்காகிவிட்டது

ஊழலும் ஹைடெக்காகிவிட்டது
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நீங்கள் கேட்டவை / தராசு பதில்கள்

? இந்த ஹை டெக்னாலஜி யுகத்திலும் ஊழலுக்கு குறைவில்லையே?

நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

! ஊழலும் ஹை டெக்காக ஆகிக்கொன்டிருக்கிறதே.  இந்த இதழ் கவர் ஸ்டோரி பார்த்துவிட்டீர்களா?

?  முதல்வர் ஸ்டாலின் போல பிரதமர் மோடி சைக்கிள் பயணம் மேற்கொள்வதில்லையே?

– கண்ணன், நெல்லை

! உடன் போட்டோகிராஃபரை அழைத்துச்செல்ல முடியாதே.

? தட்சணை, வரதட்சணை என்ன வித்தியாசம்?

– மஹாலட்சுமி, மதுரை

! செய்த பணிக்குப் பெறுவது தட்சணை;  செய்யாத பணிக்கு பெறும் முன்பணம் வரதட்சணை.

? போதை விருந்து கொடுத்ததில் நடிகர் ஷாருக்கான் மகன் கைதாகி உள்ளது பற்றி?

– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

! அவர் வயது, அவரிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படும் போதை மருந்தின் அளவைப் பார்க்கும்போது அவருக்கு ஜாமின் வழங்கியிருக்கலாம். மருந்தை கடத்துவதும்  பயன்படுத்துவதும் சட்டத்தின் கண்களில் வெவ்வேறான குற்றங்கள்.

? பொது இடங்கள், சாலைகள், அரசு நிலங்களில் உள்ள சிலைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதே?

– நாச்சியார், திருமங்கலம்

! முதலில் எது பொது இடம் என்பதை நீதிமன்றம் சொல்லட்டும். அது தெளிவாகாத வரை இந்தத் தீர்ப்பால் பயன் அதிகம் விளையப்போவதில்லை.

? 'பிரதமர் மோடியை சர்வாதிகாரியாக தவறாக சித்தரிக்கிறார்கள்' என்று உள்துறை அமைச்சர் அமின் ஷா சொல்கிறாரே?.

– திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு

! 'உ.பி லக்பூர் கலவரத்தில் கட்சி தொண்டர்கள் செய்தது தவறு' என்று சொன்ன மேனகா, வருண் காந்தியை கட்சிப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கியதன் மூலம் சித்தரிக்கப்படுவது தவறில்லை என்று உணர்த்திவிட்டாரே.

? ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் போகும் போது கூட மனுக்களை பெற்றுகொள்கிறாரே?

– கண்ணகி, திண்டுக்கல்

! அவர்  போகுமிடமெல்லாம் மனுக்கள் பெறுப்படுவதுதான் செய்தியாக வருகிறதே தவிர, அதில் எடுக்கபட்ட முடிவுகளைப் பற்றி செய்தி தாட்கள் பேசுவதில்லை.

? 'தூய்மை இந்தியா' திட்டத்தை போற்றும் வகையில் பா.ஜ.க.              தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை சோழிங்கநல்லூரில் கழிப்பறை ஒன்றை சுத்தம் செய்துள்ளாரே?

– ஆா்.நாகராஜன், செம்பனார் கோவில்

! அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படவேண்டும் எனச் செய்திருக்கலாம்.  ஆனால் அவர் செய்ய வேண்டியது அதற்காக ஒதுக்கப்பட்டு தமிழகத்துக்கு வராமல் இருக்கும் நிதியைப் பெற்று தருவது தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com