சீதையிடம் நால்வர் பெற்ற சாபம்!

சீதையிடம் நால்வர் பெற்ற சாபம்!
Published on

– சியாமளா சுவாமிநாதன்

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகவும் உகந்தது கயா திருத்தலமாகும். அந்தத் தலத்தில்  ஓடும் பல்குனி நதி எப்போதும் வரண்டே காணப்படுகிறது. அதோடு, இந்தத் தலத்தில் துளசிச் செடிகள் முளைப்பதில்லை. இதற்குக் காரணம், சீதா தேவியின் சாபமே என்று கூறப்படுகிறது.

ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம்போல், லட்சுமணர் பிக்ஷை வாங்கி வர அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரம் ஆகியும் தம்பி லட்சுமணன் வராததால், தம்பியைத் தேடி ஸ்ரீராமரும் கிளம்பினார். சிரார்த்த காலம் நெருங்கியது. 'சிரார்த்த காலம் தாண்டிவிட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே' என்று சீதா தேவி வருந்தினள். உடனே, காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்தாள்.

அப்போது, அவள் முன் தேஜோமயமாக ஸ்ரீராமரின் பிதுர்க்கள் தோன்றினர். "சீதே… இப்போது நீ பிண்டத்தை எங்களுக்குச் சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்றார் மாமனார் தசரதர்.

"உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் கொடுக்கலாமா?" என்று சீதை கேட்டாள்.

அதற்கு அவர்கள், "சிரார்த்த காலம் தவறி, அசுர காலம் வந்துவிடும். அதனால் சாட்சி வைத்துக்கொண்டு சிரார்த்தம் கொடு. தப்பில்லை" என்றார் தசரதர். சரியென
ஒப்புக்கொண்ட சீதா தேவி, பல்குனி நதி, பசு, பிராமணன், துளசிச் செடி மற்றும் அங்கிருந்த அக்ஷய வட ஆலமரத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடித்தாள்.

பிதுர்க்களும் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு மறைந்தனர். சிறிது நேரத்தில் ஸ்ரீராமரும், தம்பி லட்சுமணனும் பிக்ஷையோடு அங்கு வந்தனர். "சீதே, இதோ உணவு தானியங்கள். சீக்கிரம் சமையலை முடி" என்றார் ஸ்ரீராமபிரான்.

சீதா தேவி நடந்தைதைக் கூறினாள். அதைக்கேட்ட ஸ்ரீராமர், "முறைப்படி சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள், உனது முன்பு தோன்றி, உன்னிடம் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை" என்றார்.

"ஸ்வாமி, நான் உண்மையைத்தான் சொல்கிறேன். இதற்கு இந்த பல்குனி நதியும், பசுவும், பிராமணனும், துளசி செடியும், அக்ஷய வட ஆலமரமுமே சாட்சி'' என்றாள்.

உடனே ஸ்ரீராமர் அவற்றிடம், "எனது பிதுர்க்கள் இங்கு வந்து பிண்டம் வாங்கிச் சென்றார்களா? அதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கேட்டார்.

அக்ஷய வட ஆலமரத்தைத் தவிர மற்ற அனைத்தும், ஸ்ரீராமரின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோ என்று பயந்து, "நாங்கள் அறியோம்" என்று பொய் உரைத்தன. ஸ்ரீராமரும் கோபத்தை அடக்கிக்கொண்டு, சீதையிடம் உடனடியாக சமையலை முடிக்கும்படி கூறிவிட்டு, நதியில் நீராடச் சென்று விட்டார்.

சீதை மிகவும் துக்கத்தோடு சமையலைச் செய்து முடித்தாள். ஸ்ரீராமரும் லட்சுமணனும் பிதுர்க்களுக்கு சங்கல்பம் செய்து கொண்டு சிரார்த்த பிண்டங்களை ஆவாஹனம் செய்தபோது, வானில் அசரீரி ஒலித்தது. "ராமா… ஏன் இரண்டாம் முறையாக பிண்டம் சமர்ப்பிக்க எங்களை அழைக்கிறாய்? சீதையின் கையால் பிண்டம் வாங்கி, நாங்கள் திருப்தி அடைந்து விட்டோம்" என்று தந்தை தசரதர் சொன்னதும் ஸ்ரீராமர் சமாதானமானார்.

ஆனால், கோபப்பட்டு அறியாத சீதை மனம் கொதித்து, "பல்குனி நதியே, உன்னிடம் எந்தக் காலத்திலும் வெள்ளப்பெருக்கு தோன்றாது. எப்போதும் நீ தண்ணீர் வற்றி, வரண்டே காணப்படுவாய். பசுவே, உன் முகத்தில் வாசம் செய்யும் நான் இனி, உனது பின்பக்கத்துக்குப் போய் விடுகிறேன். துளசியே, இந்த கயா க்ஷேத்ரத்தில் எங்குமே
நீ வளராது போகக் கடவது. பிராமணனே, இத்தலத்தில் எப்போதும் வித்தையை விற்று பிழைப்பு நடத்தும் அவலம் உங்களுக்கு உண்டாகட்டும்" என சபித்தாள்.

பிறகு, அக்ஷய வட ஆலமரம் தனக்கு சாட்சியாக இருந்ததற்காக மகிழ்ந்து, அதை, யுக யுகாந்திரமாக நீடுழி வாழ வாழ்த்தியதுடன், யுக முடிவின்போது, பிரளயத்தில் அந்த அக்ஷய வட ஆலமர இலையில் பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார் என்றும் அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் என்று அருளினாள்.

மேலும், கயாவில் சிரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வட மரத்தடியில் பிண்டங்களை சமர்ப்பித்து அர்ப்பணம் செய்தால்தான் கயாவில் சிரார்த்தம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆசிர்வதித்தாள். இந்த சாபத்தின் விளைவாகத்தான் கயாவில் இன்றும் துளசிச் செடிகள் வளர்வதில்லை. பல்குனி நதி வரண்டு காட்சியளிக்கிறது. அங்கு வாழும் பிராமணர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், திருப்தி அடைவதில்லை. இன்றும் அக்ஷய வட மரத்தடியில்தான் அத்தனை பேரும் பிண்டம் சமர்ப்பித்து சிரார்த்தம் செய்து வருகிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com