பண்டுவர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நூல்

 பண்டுவர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நூல்
Published on

நூல் அறிமுகம்

பிரேமா

மதுரை தேனி மாவட்டம் குறும்பம்பட்டியைச் சேர்ந்த சுளுந்தீ நூலின் ஆசிரியர் இரா. முத்துநாகு பாரம்பரிய வைத்திய குடும்பத்தின் பின்புலத்தைக் கொண்டவர். கண்டமனூர் ஜமீனில் பண்டுவராகப் (வைத்தியராக) பணிபுரிந்த குப்புசாமி பண்டுவரின் பேரனான இவர் எழுதிய முதல் நாவல் இந்நூல்.

நாவிதர்கள் மருத்துவர்களாகப் பணிபுரிந்த வரலாற்றை ஆய்ந் தறிந்து உண்மைச் சம்பவங்களை நாவல் எனும் போர்வையில் நமக்கு அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 வருடங்களாக பண்டுவர்களின் பாரம் பரியத்தைப் பற்றி ஆராய்ந்து சேகரித்த செறிவான தகவல்கள் இந் நூலில் அடங்கியிருக்கின்றன. ஏராளமான சித்த வைத்திய மருந்து தயாரிப்பு முறைகளையும். அவை பயன்படும் வியாதிகளையும் கதை யின் போக்கில் கொடுப்பதுபோல கொடுத்திருக்கிறார்.

கிராமங்களில் தலைமுறைகள் கடந்து வாய்வழியாகவே பயணப் படும் சொலவடைகளைப் பக்கத்திற்குப் பக்கம் பயன்படுத்துமளவிற்கு நிறைய சேகரித்து. அவை பிறந்த கதைகளையும் காரணத்துடன் விளக்கமளித்திருக்கிறார். கிராமங்களில் மட்டுமே தற்போது வாழும் மிக அழகான தமிழ்ச் சொற்களை ஏராளமாகப் பதிய வைத்திருக்கிறார்.
பல நூல்களைக் கற்றறிந்தவர்களிடமிருந்து ஒரு புதிய நூல் பிறக்கும் என்பதற்கு மாறாக இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் அரிதான தகவல்கள் யாவும் களஆய்வின் மூலம் மட்டுமே பெறப்பட்டவையாகத் தெரிகிறது.

தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கே வியப்பைக் கொடுக் கும் வரலாற்று ஆராய்ச்சி நூல் இது என்றால் மிகையாகாது. 480 பக்கங்களில் கிட்டத்தட்ட முந்நூறு பக்கங்கள் வரை வரிக்கு வரி ஆச்சரியமூட்டும் அறியாத தகவல்கள் அடங்கிய செறிவான புத்தகமாக அமைந்து நாவலின் வடிவத்தில் நம்மை சலிப்படையாமல் நகர்த்திச் செல்கிறார். இறுதி இருநூறு பக்கங்களில் உண்மைச் சம்பவங்களைக் கதைகளாக அமைத்து அரிதான தகவல்களை ஆங்காங்கே கொடுத்து நாவலை முடித்திருக்கிறார்.

கன்னிவாடி அரண்மனையை மையமாக வைத்து கதையின் கரு ஆரம்பிக்கிறது. அரண்மனையின் எல்லையான பன்றிமலை என்று அழைக்கப்பட்ட தற்போதைய கொடைக்கானல், தங்க நகைகளில் பதிக்கப் பயன்படுத்தப்படும் விலைமதிப்பற்ற கற்களையும் மூலிகைச் செடிகளையும் அங்கு வாழ்ந்த மக்களுக்குக் கொடையாக அளித்திருந் தது என்பதை அறியும்பொழுது, நமது விலை உயர்ந்த கற்கள் அயல் நாடுகளில் விற்பனையானதால் கவரப்பட்ட அம்மக்கள், தீபகற்ப பூமி யான தென்னிந்தியாவிற்குக் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு படை யெடுத்து வந்ததையும் நினைவுபடுத்துகிறது.

பெரும்பாலானவர்கள் அறிந்திராத அழகான தமிழ்ச் சொல்லான 'சுளுந்தீ' எனும் பெயர்க் காரணத்திற்கு நூலில் மிக அற்புதமாக விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராமாயண காலத்திலிருந்தே சூதினை ஆயுதமாகப் பயன்படுத்தியதும், நெருப்பினை நாயக்கர் கால அரசு கட்டுக்குள் கொண்டுவர கடும் நடவடிக்கை எடுத்தது என்ற தகவல்களும், தற்போது மிக மலிவாகக் கிடைக்கும் உணவுப் பண்டத் தில் சேர்க்கப்படும் உப்பு, ஒரு காலத்தில் தங்கத்திற்கு ஈடாக, எளியவர் களுக்குச் சொற்ப அளவே கிட்டியதையும் நினைவுபடுத்துகிறது.

தீப்பெட்டி வருவதற்கு முன்பு உணவு சமைக்கத் தேவைப்பட்ட நெருப்பு அவ்வளவு சாதாரணமாகக் கிட்டியிருக்கவில்லை. போரில் நெருப்பினைப் பயன்படுத்தக்கூடாது என்ற மரபும் இருந்திருக்கிறது. இவ்வாறு தீயைப் பற்றி அறியாத தகவல்கள் இந்நூலில் நிறைய இடம் பெற்றிருக்கிறது. பழங்காலத்தில் மனிதர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றால் என்னவென்றே தற்போது நகர்ப் புறத்தில் வாழும் மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதியாகக் கூறும் அளவிற்கு விலங்குகளின் நடவடிக்கையை உற்று நோக்கி, அதன் இயல்பினை அறிந்துகொண்டு இயற்கையைப் புரிந்து பாதுகாப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய வைக்கும் அரிதான தகவல்கள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன.

கருத்த நண்ணி எறும்பு படையெடுத்து வீட்டிற்குள் வந்தாலும், சுரக்காய், புடலங்காய், மாங்காய் போன்றவை நிறைய காய்த்தாலும் மழை குறைவு என்பதும், கோழி வெயிலில் படுத்து உயிரை விட்டால் மழை வராது என்பது போன்ற இயல்புகள் மனிதர்களுக்கு அக் காலங் களில் எட்டும் அறிவாக இருந்திருக்கின்றன. அதே சமயத்தில் மக்களின் பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யுக்தியை நிகழ்த்த அரண்மனை எவ்வாறெல்லாம் அவர்களுக்குச் சாதகமாகத் தோன்றும்படியான நம்பிக்கைகளை விதைத்து, மக்களை மூடர்களாக வைத்திருந்ததையும் விளக்கமான காரணங்களை அளித்து நிறைய முடிச்சுகளையும் இந்த நூலில் ஆசிரியர் அவிழ்த்திருக்கிறார்.

பூர்வீகக் குடிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு அரண் மனைக்கு எதிராகச் சிந்திக்காமல் இருக்க எடுத்த ராஜதந்திர நடவடிக்கையே குலவிளக்குச் சட்டம் என்பதும், பூம்பூம் மாட்டுக் காரர்கள் உருவானதற்கான காரணங்களைக் கொடுப்பது போன்ற பல ரகசியங்களுக்கு விளக்கம் கொடுத்து, பகுத்தறிந்து விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்.

உடலைச் சவரம் செய்வதிலும், பண்டுவர்களாக இருந்து மருத்துவம் பார்ப்பதிலும், பங்கெடுத்த நாவிதர்கள் ஒருவரது உடலுறுப்புகளை முற்றிலுமாக அறிந்திருந்தவர்களாக இருந்ததால் கள ஆய்வில் அவர்களிடமிருந்து பெற்ற மருத்துவக் குறிப்போடு, அந்தரங்க மான தகவல்களையும் நிர்வாணமாக்கி இருக்கிறார். நாவிதர்களுக்கும் அரண்மனைக்கும் இருந்த நெருக்கமான தொடர்பும், அவர்கள் சித்தர் களிடமிருந்து வைத்திய முறைகளைக் கற்று மருத்துவர்களாக விளங்கியதும் இந்த நூலில் பதிவாகி இருக்கிறது.

ஒருவர் இறந்த பிறகு உடலைக் குளிப்பாட்டும் சடங்குகளில் நாவிதர்கள் பங்கு பெற்று கொடுத்திருந்த மருத்துவம் அளித்த பாதிப்பு களை இறந்த உடலிலிருந்து அறிந்துகொண்டு மாற்று மருத்துவத்தைக் கொடுப்பதற்கான வழியை அறியும் ஆய்வாளர்களாகவுமிருந்து மருத்து வத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளெல்லாம் எதற்கு என்பதற்கான விளக்கம் நிறைய இருக் கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை நாவிதர்களின் பங்கு முக்கிய மானதாக இருந்திருக்கிறது.

வீரன் மரணமடைந்த பிறகு நடப்படும் நடுகல் பற்றி அறிந்திருக் கிறோம். அதனை நடுபவர்களே நாவிதர்கள்தான் என்பது நாம் அறியா தது. இது மட்டுமல்லாமல் அக்காலங்களில் ஒருவர் ஆயுதங்களை வைத்துக்கொள்வதிலும் கட்டுப்பாடுகள் இருந்தது என்பதையும், வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நாவிதர்களின் சவரக்கத்தி யால் அரசாட்சி அழிந்ததையும், அரண்மனையால் நாவிதர்கள் அழிந்ததும் வரலாறாக இந்நூலில் அறியமுடிகிறது.

பல விருதுகளைப் பெற்ற இந்த நூலுக்குக் கிடைக்கவேண்டிய விருதுகள் இன்னும் பல இருந்தாலும் வரலாற்று ஆய்வு மாணவர் களுக்குத் தேர்வில் எழுப்பிய கேள்வியாக இடம்பெற்ற, 'சுளுந்தீ நூலின் ஆசிரியர் யார்?' என்பதைவிட பெரிய விருது வேறென்ன இருந்துவிட முடியும்?

நூல் : சுளுந்தீ, ஆசிரியர் : இரா. முத்துநாகு, வெளியீடு : ஆதி பதிப்பகம், பக்கங்கள் : 480,  விலை : ரூ. 450.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com