
டியர் அனு...
நாம் சில விஷயங்களை வெற்றிகரமா நடத்தித் தரும்படி சாமியிடம் கேட்கிறோம். அது நடந்துவிட்டால், “உனக்குப் பொங்கலிடுகிறேன். அபிஷேகம் பண்றேன்”னு வேண்டிக்கிறோம். என் கேள்வி என்னன்னா, ஒருவர் தனது நண்பனின் கஷ்டம் தீர இறைவனிடம் வேண்டுகிறார்; அது தீர்ந்ததும் நண்பனை மொட்டைப் போட்டுக்கச் சொல்றேன் என்றும் கூறுகிறார். இது நியாயம்தானா? இவை எதுவும் நண்பனுக்குத் தெரியாது... நண்பன் இதற்குக் கட்டுப்பட்டவன் ஆகிறானா?
-ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்
கட்டுப்பட்டவனோ இல்லையோ. கஷ்டம் தீர்ந்தது இல்லையா? அதனால மழுக்க மழுக்க பளபள மொட்டை போட்டு, அந்தச் செலவை அப்படியே நண்பனின் தலையில கட்டி, அவர் பர்ஸை ‘மொட்டை’ அடிக்க வேண்டியதுதானே!
ஒரு வேளை அவர் முடி இறக்க மறுத்தால்... இந்தக் கவிதையை வைரமுத்து பாணியில் வாசித்துக் காட்டவும். (அவர் ‘காதலித்துப் பார்’ என்று எழுதியிருப்பார்.)
‘மொட்டை அடித்துப் பார்...
மழையின் வேகம் தெரியும்...
காக்கை எச்சலின் நாற்றம் புரியும்...
உச்சி வெயிலின் சூடு தெரியும்...
தொப்பியின் தேவை புரியும்!
மொட்டை அடித்துப் பார்!
ஷாம்பூ, வெண்ணெய் மிச்சமாகும்!
சீப்பின் தேவை இருக்காது.
தலைக்கனம் சற்று குறையும்!
முகத்தின் பரப்பளவு அதிகரிக்கும்...
மொட்டை அடித்துப் பார்!
சலூன்காரர் முறைப்பார்.
நாய்கள் குரைக்கும்!
பெண்கள் பார்வைகள் விலகும்!
நண்பர்கள் ஃபன்க்’ வளர்ப்பார்கள்!
மொட்டை அடித்துப் பார்! (எப்படி கவிதை?)
******************************************
ஆளுநர் தமிழிசை அவர்களின் அரசியல் வாழ்வின் நிலைப்பாடு மாறும் சங்கேதம் தெரிகிறதா?
- நா. புவனா நாகராஜன், செம்பனார்கோவில்
அவரது ஹேர்ஸ்டைல்தான் மாறியிருக்கிறது. மற்றபடி, ‘தாமரை மலர்ந்ந்ந்தே தீரும்!’ என்ற சங்கீதம் மாறவில்லையே! பாசிச... ஸாரி பாசம் மிக்க பா.ஜ.க.வுல கண்ணுக்கு எட்டியவரை வேற தலைவரே தெரியலையே... ஐ மின் மீம்ஸ் க்ரியேட்டர்களுக்கு! எங்களுக்கும் பொழுது போக வேணாமா மேடம்?
******************************************
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக் ஆவதைப் பற்றி?
-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி
ஆகட்டும்! சந்தோஷம்! கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் துணை அதிபராக ஆனபோதும், இந்தியாவும், மீடியாவும் இதே போல கொண்டாடித் தீர்த்தது.
இப்போது ரிஷி சுனக்! (அமெரிக்க உச்சரிப்பில் அவரது பெயர் ரிட்ச்சி!)
இவரும் கட்சிக்காக, தனது நாட்டு மக்களுக்காக உழைப்பாரே தவிர, எந்த விதத்திலும் இந்தியாவின் மேன்மைக்காக ஏதேனும் செய்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கவும் கூடாது; அது தேவையற்றதும் கூட! அவர் பிரதமர் ஆனதில் உண்மையாகவே மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தது சுதா – நாராயண்மூர்த்தி தம்பதி மட்டுமே!
“மாப்பிள்ளை ஸார்... மாப்பிள்ளை ஸார்... கங்கிராஜுலேஷன்ஸ்!” (‘மணல் கயிறு’ – விசுவின் பாடல் நினைவுக்கு வருகிறது!)
சுமார்150 ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களை நம்ப ஆள் ஒருத்தன் ஆளப் போறான்னு பெருமை கொள்ளலாமேன்னு பார்த்தா, ரிஷி... இந்தியாவுக்கு மாப்பிள்ளை. ஆனால் இந்தியன் கிடையாது! ஆஃப்ரிகாவுக்கு மகன் – ஆனால் ஆஃப்ரிகன் இல்லை! அவர் ஒரு பஞ்சாபி – ஆனால் சீக்கியர் அல்ல! பாகிஸ்தானின் பூர்விகக்குடி... ஆனால் பாகிஸ்தானி அல்ல! அவர் ஒரு பிரிட்டிஷ் – ஆனால், தான் ஒரு சானதன இந்து என்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு க்ளோபல் சிட்டிஸன்! வாங்கய்யா... உங்க படிப்புக்கும் பணத்துக்கும் உசரத்துக்கும் எதுன்னா நல்லது செஞ்சுட்டுப் போங்கய்யா!
******************************************
சமீபத்தில் அனுஷா வியந்த நபர் யார்?
-மஞ்சுவாசுதேவன், பெங்களூரு
யூ- ட்யூபர் ஜி.பி.முத்து! வட்டார மொழியில் எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டியே பிரபலமானவர்! வருமானம் லட்சக்கணக்கில்! தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சியை ‘பிக்பாஸ்’ என்று கூட உச்சரிக்கத் தெரியாமல், ‘பிக் பாக்ஸ்’ என்று சொன்னவர். அவர் திடீரென்று மகனின் உடல் நிலையைக் காரணம் காட்டி விலகிவிட்டார்.
கடைசியில் கமல்ஹாசனே, ‘வெகுமானம், வருமானம்’ என்றெல்லாம் ஆசை காட்டி தன்மானம் விட்டு கெஞ்ச வேண்டியதாயிற்று! கமலே இந்த ட்விஸ்ட்டை எதிர்ப்பார்க்கலை போலும்!
இப்போது ஜி.பி.முத்து அண்ணாச்சிக்கு பார்வையாளர்கள், ரசிகர்கள் எண்ணிக்கை கூடிவிட்டது! ‘வந்த ஜோலி முடிச்சோம்ல’னு அவரும் கிளம்பிவிட்டார்!
என்ன ஒரு ஸ்ட்ராடஜி! சினிமாவிலும் அரசியலிலும் வியூகம் அமைத்தே பழகிவிட்ட சாதுர்யமான உலக நாயகனிடமே கண் கலங்கி நடிப்பு யுக்தியைக் காட்டியவர் ஜி.பி.முத்து!
இனிமே அவரை யாராவது வெள்ளந்தி மனுஷன்னு சொல்வீங்க?