
சிறுகதை : மாதவி
ஓவியங்கள் : பிரபுராம்
கேசவனுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது.
'மாமியார் மெச்சற மருமகளா ஆயிட்டாளே என் மனைவி மாலா! எப்படி? கல்யாணம் பண்ணி வந்த நாள் முதல், ரெண்டு பேருக்கும் அண்டை மாநில அரசுகள் போல எதையெடுத்தாலும் பிரச்னையாயிற்றே! திடீர்னு அம்மா கீதாவை புகழறாள்னா, அப்படி என்ன சாதனை செஞ்சா அவ?'
"என்ன… திடீர்னு நீயும் அம்மாவும் ராசியாயிட்டீங்க போலிருக்கு!"
"யாரு? நான் உங்கம்மாவோடவா? நெவர்!" என்று கெளரவம் சிவாஜி போல கர்ஜித்தாள்.
"பின்னே… அம்மா உன் புகழ் பாடறா? நீதான் வழிகாட்டியாம்… குருவாம்… பூட்டிக்கிடந்த அம்மாவின் திறமையை கீ போட்டு திறப்பு விழா நடத்தின அதிர்ஷ்ட லெஷ்மியாம்? ஓவரா புகழறா அம்மா" உண்மையைச் சொன்னான்.
"கிழவி ஏதோ பெரிசா ப்ளான் போடுது! உஷாரா இருக்கணும். தள்ளுங்க… நான் பேஸ்ட் வாங்கப் போகணும்!" என்றாள் கீதா.
"என்ன பேஸ்ட்? வழக்கமா வாங்கற மகி பேஸ்ட்தானே! சீப் அன்ட் பெஸ்ட்?"
"இல்லைங்க… டிவியில சொன்னா நடிகை லலிதா. குரு பேஸ்ட் பல்லுக்கும் ஈறுகளுக்கும் ரொம்ப நல்லதாம்!"
"ஐயோ! டிவியில் போட்டா வாங்கிடுவியா?"
"ஆமாம்… அதான் நல்லது. பொய்யாவா போடுவான்? அப்படியே மான் மார்க் புளி, ரவி மைதா, குடை மார்க் சோப்…"
"எல்லாம் டிவியில் வந்த விளம்பரம்தானே!"
"ஆமாம்… ஆபீஸில் சொன்னா பெருமையாயிருக்கும்!"
"ஏய்… சரியான முட்டாள் நீ! சோப்பை மாத்தாதே!"
"போங்க… நடிகை கலாபால் சொல்லிட்டா. அவ அழகுக்குக் குடை சோப்தான் காரணமாம். ஆபீஸில் கூட என்னை கலாபால் சாயலில் இருக்கறதா சொல்றாங்க" பிகுவாய் பேசினாள்.
"அடி டிவி பைத்தியம்!"
"போங்க… உங்களுக்கு ஒண்ணும் தெரியாது!" கடைக்குப் போனாள் கலா.
கேசவனின் அம்மா பிஸியாய் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தாள். மேஜையில் ரெண்டு மூன்று செக் வேற!
"ஏதும்மா… இவ்வளவு பணம் உனக்கு?"
"எல்லாம் என் குரு, வழிகாட்டி, அதிர்ஷ்ட லெஷ்மி கீதாவாலே வந்தது."
"புரியலை…"
"நீ ஒரு மண்டு…"
"இதைத்தானே மாமியாரும் மருமகளும் ஒத்துமையா பேசறீங்க."
"டேய், எனக்கும் கீதாவுக்கும் என்ன சண்டை? வயல் தகராறா இல்லை… வாய்க்கா தகறாரா? அவ டிவியில் விளம்பரம் செஞ்சா, அதை உடனே வாங்கிடுவா. நான் திட்டுவேன்… சண்டை பிடிப்பேன்!"
"ஆமாம்… இப்ப கூட அதுக்குத்தான் போயிருக்கா."
"போகட்டும்… எல்லாப் பெண்களும் அப்படித்தான்."
"என்னம்மா சொல்றே? உங்களுக்குள்ளே அதானே தகராறு!"
"அது எவ்வளவு பெரிய தப்புனு இப்பதான் உணர்ந்தேன்."
"சுத்தமா புரியலை."
"உனக்கு எதுதான் புரிஞ்சது? இது புரிய…? இப்ப எல்லா சிறிசுகளும் டிவியில் போடறதைத்தான் வாங்கறா! ஸோ, ஏதாவது சக்ஸஸ் பண்ணணும்னா டிவியில் அது வரணும்!"
"கரெக்ட்."
"இதைத்தான் ஃபாலோ பண்ணினேன். சம்பாதிச்சேன்" வெற்றிப்புன்னகைப் பூத்தாள் அம்மா."
"செத்த விபரமா சொல்லுங்கம்மா…"
"அதாவது, ஒரு லோக்கல் டிவி சானலைப் பிடிச்சேன். பிரண்டை துவையல் செய்யறது எப்படி? வெங்காயப் பொடி எதுக்கு நல்லது? எப்படிச் செய்வது? விளக்கெண்ணையை சுகாதாரமா வீட்டிலே காய்ச்சி, குழந்தைகளுக்கு எப்படி கொடுக்கணும்னு மார்க்கெட் போன, போயிட்டிருக்கற நடிகைகளை விட்டு பேசச் சொன்னேன்! குறிப்புகளெல்லாம் என்னோடது… ஆக்ஷனும், குரலும் நடிகைகளோடது. இப்படி நாம மறந்து போன பழைய உணவு வகைகளை ஒவ்வொன்னா 75 வாரம் புரொகிராம் பண்ண என்னை புக் பண்ணியிருக்கா! அதான் இவ்வளவு பணம்! இப்பப் புரிஞ்சுதா? என் மருமக என் குரு, வழிகாட்டி, அதிர்ஷ்ட லெஷ்மினு ஏன் புகழ்ந்தேன்னு?" மகிழ்ச்சியாய் பேசினாள் அம்மா!''
"ஆக, இப்பக்கூட மருமகளை வஞ்சப்புகழ்ச்சியாத்தான் பாராட்டறே!"
"ஆமான்டா மக்கு!" என்று செல்லமாய் தலையில் குட்டினாள் அம்மா!