கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
Published on
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

கிறிஸ்துமஸ் என்ற பெயர் எப்படி வந்தது?
கிரேக்க மொழியில், 'கிறிஸ்டோஸ்' என்றால் காப்பாற்ற அவதரித்தவர் (MESSIAH) என்று அர்த்தம். இப்போது வழக்கத்தில் இல்லாமல் இருப்பினும், ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் 'மாஸ்' (MAS) என்ற வார்த்தைக்குப் பண்டிகை அல்லது கொண்டாடுதல் என்று பொருளிருந்து வந்தது. 'கிறிஸ்து' என்ற வார்த்தையைச் சுருக்கமாக கிரேக்க மொழியில் 'X' என்ற எழுத்தாலும் குறிப்பிட்டார்கள். ஆகவேதான், கிறிஸ்துமஸ் என்பதை ஆங்கிலத்தில், 'XMAS' என்றும் எழுதுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.

கிறிஸ்து எப்படி வந்தது?
கிறிஸ்தவர்களின் கடவுள், 'க்றைஸ்ட்' (கிறிஸ்து). அவருக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? 'க்றைஸிட்' என்பது கிரேக்க மொழிச் சொல். இதற்கு அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். மக்களைப் பாவங்களினின்று கரையேற்றுவதற்காக கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டு இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட கடவுளின் குமாரனானவருக்கு, 'கிறிஸ்து' (Christs) என்று பெயர் வைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் வளையம்


கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் திருவருகைக் காலத்தின் அடையாளமே கிறிஸ்துமஸ் வளையம். இது திருவருகைக் காலத்தில் ஒவ்வொரு ஆலயங்களிலும் வைக்கப்பட்டிருக்கும். இவ்வளையமானது பச்சை நிறத்தில் விருப்பமான டிசைன்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வளையத்தின் நடுவில் நான்கு மெழுகுவர்த்திகள் தனித்தனி வண்ணங்களில் எதிர் எதிர் திசைகளில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு திரியும் ஒவ்வொரு ஞாயிறைக் குறிப்பிடுகின்றன. நான்கு வாரமும் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியின் போதும் ஒவ்வொரு திரியாக ஏற்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஞாயிறு திரியும், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. வளையமானது கடவுள் ஒருவரே, தொடக்கமும் முடிவும் அவரே என்பதைக் குறிக்கிறது.

இயேசுவின் தாய்மொழி
இயேசு கிறிஸ்துவின் தாய்மொழி எது தெரியுமா? அரேபிக். இம்மொழி தற்போது நலிவடைந்து உள்ளது. சிரியா நாட்டில் தமங்கு பட்டணம் அருகிலுள்ள மல்லோலா என்ற ஒரு சிற்றூரில் ஏறக்குறைய ஆயிரம் மக்களால் பேசப்படுகின்றது. இது, அரேபி எபிரேய மொழி இனத்தைச் சார்ந்தது. இம்மொழிக்கென்று தனி எழுத்துக்கள் கிடையாது. எபிரேய எழுத்துகளால் வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது.

முதல் படம்


யேசுவின் காலத்திலேயே அவரது முதல் படம் வரையப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித லூக்காஸ் ஓர் ஓவியர். அவர் இப்படத்தை வரைந்தார். இயேசுவின் 30வது வயதில் வரையப்பட்ட அந்தப் படம் இன்றும் இத்தாலியில் புனித பாதலோமோ ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இயேசுநாதரின் பெருமைகளை கேள்விப்பட்ட எபீசா நாட்டு அரசர் இயேசுவை தனது நாட்டுக்கு வரும்படி அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத இயேசு கிறிஸ்து தனது படம் ஒன்றை லூக்காஸ் மூலம் வரையச் செய்து அரசருக்கு அனுப்பி வைத்தாராம்.

  • பார் போற்றும் பண்டிகை!
    த்தாலி நாட்டில், 1223ம் ஆண்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும் நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இயேசு பிறந்த மாட்டுக்குடில், இயேசுவின் பெற்றோர்கள், இறையேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக்குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசுபாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார்.
  • பெத்லகேமில் ஏராளமான தேவாலயங்கள் இருப்பினும், மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று 'சர்ச் ஆஃப் நேட்டிவிட்டி' ஆலயம். இது இயேசு பிறந்த தொழுவத்தின் மேல் கட்டப்பட்டதாகும்.
  • பெத்லஹேம் நகரின் எல்லா வீட்டுக் கதவுகளிலும் சிலுவை வரையப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இயேசு பிறந்த இடமான தொழுவத்தின் வடிவமைப்பு வைக்கப்பட்டிருக்கும்.
  • அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிகப்பெரிய கிறிஸ்துஸ் மரத்தில் அலங்கரிக்கப்பட்ட வண்ண மின்விளக்குகளை அதிபர் வந்து பட்டனை அழுத்தி ஏற்றி வைப்பது காலங்காலமாகப் பின்பற்றும் வழக்கம்.
  • போலிஷ் அமெரிக்கர்களின் வீடுகளில் உள்ள டைனிங் டேபிளில் கிறிஸ்துமஸ் அன்று இரண்டு இடங்களைக் கூடுதலாக ஏற்படுத்தியிருப்பார்கள். அவர்கள் வீட்டுக் கதவை அன்னை மேரியும், குழந்தை இயேசுவும் தட்டி புகலிடம் கேட்பார்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கை. அப்படிப் புகலிடம் கேட்டு வருபவர்களுக்கு விருந்தளிக்கவே கூடுதலாக டைனிங் டேபிளில் போடப்பட்டிருக்கும் இரண்டு இருக்கை.
  • ஜெர்மனியில் ஜிஞ்சர் பிரட் மென் (இஞ்சிச் சாறு சேர்ந்த ரொட்டிகள்) மற்றும் பல்வேறு பொருட்களைப் போன்ற, 'குக்கீஸ்' என்ற ரொட்டிகளை கிறிஸ்துமஸ் விருந்துக்குத் தயாரிப்பார்கள். இதற்கு, 'பெர்னஸி' என்று பெயர். பாதாம் மாவிலே சர்க்கரை சேர்த்துக் குழைத்துக் காய்கறிகள், பழ வகைகள், பல்வேறு விநோத உருவங்களைப் போல் செய்து உண்பதற்கு ஏற்றபடி பக்குவம் செய்து வைப்பார்கள். இதற்கு, 'மார்ஸிபான்' என்று பெயர்.
  • ஸெர்பியர்களின் கிறிஸ்துமஸ் கேக்குக்கு, 'செஸிட் நிட்லா' என்று பெயர். இந்தக் கேக்குகளைத் தயாரிக்கும்போது அதில் ஒரு வெள்ளிக்காசை ஏதாவது ஒரு கேக்கினுள் புதைத்து விடுவார்கள். இந்த வெள்ளிக்காசு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களுக்கு அந்த ஆண்டு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
  • நார்வே நாட்டுக்காரர்கள் யூல் டின்னருக்கு விசேஷமாக அரிசியினாலான புட்டுப் போன்ற ஒருவகைப் பணியாரம் (புட்டிங்) தயாரிக்கிறார்கள். இதனுள் பாதாம் பருப்பு ஒன்றைப் புதைத்து விடுகிறார்கள். பணியாரத்தை வெட்டிப் பங்கிடும்போது இந்த பாதாம் பருப்பு யாருக்குக் கிடைக்கிறதோ, அவர்களுக்கு உடனே திருமணமாகி விடும் என்பது ஒரு நம்பிக்கை.
  • ஸ்வீடன் தேசத்துக் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை டிசம்பர் 13ந் தேதியிலிருந்தே ஆரம்பித்து விடுகிறார்கள். அது, ஸெயிண்ட் லூசியா நாளாகும். அன்று அதிகாலையில் குடும்பத்தில் உள்ள மூத்த பெண் (அவளுக்கு லூசியா மணமகள் என்று பெயர்) வெள்ளை ஆடை உடுத்தி, தலையில் இலை, கொடிகளினாலான மகுடம் சூட்டியிருப்பாள். அதில் மெழுகுவர்த்திகளை இணைத்து எரிய விட்டிருப்பார்கள். தன் சகோதர, சகோதரிகள் புடை சூழ லூசியா மணப்பெண் பெற்றோர்களைப் போய் எழுப்புவாள். காலை ஆகாரத்துக்கு வரும்படி அவள் கையில் உள்ள தட்டிலே காவி வண்ணம் பூண்ட லூசியா பன்களும் காப்பியும் தயாராக இருக்கும். இது லூசியா தினக் கொண்டாட்டத்தின் கோலாகலம். ஸ்வீடனில் யூல் விருந்துக்கென்றே அந்த ஆண்டின் மிகச் சிறந்த மீனை பிரத்தியேகமாக ஒதுக்கி வைத்து வளர்ப்பார்கள். அதை விசேஷமான முறையில் பக்குவம் செய்யும் முறை ஸ்வீடன் நாட்டு இல்லத்தரசிகளான ஸ்வீடினிகளுக்கு மட்டுமே தெரிந்ததொரு கலை. கிறிஸ்துமஸ் விருந்தின்போது பிரதான பதார்த்தமாக இந்த மீன் உணவை, 'லட் ஃபிஷ்' என்ற பெயரில் பரிமாறுவார்கள்.
  •  ஸ்காண்டிநேவிய நாடுகள் எல்லாவற்றிலுமே கிறிஸ்துமஸ் விருந்துகளில் மீன் முக்கிய இடம் பெறுகிறது. இத்தாலியர்கள் விலாங்கு மீன்களையும், ஸ்பானியர்கள் பீரம் எனப்படும் சுத்த நீரில் வாழும் ஒரு வகைச் சிறிய மீன்களையும் கொண்டு விருந்து தயாரிப்பதை மிகப் பழைமையானதாகக் கருதிக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
  • பின்லாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே வீட்டுத் தலைவி ஓட் தானியத்தைக் குத்திப் புடைத்து அரைத்து வைப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். அங்கு புனித ஸ்டீபன் நாள்தான் கிறிஸ்துமஸ் தினம். அன்று ஓட் கஞ்சி விசேஷ விருந்துப் பொருள். இதற்கு, 'ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் டே போரிட்ஜ்' என்று பெயர். பண்டைய மரபு மாறாமல் இன்றும் இதைத் தயாரிக்கிறார்கள்.
  • மெக்சிகோ நாட்டில் கிறிஸ்துமஸ் முதல் நாள் மாலையில் ஸாலட் பட்சணம் விசேஷமாகத் தயாரிப்பார்கள். இதற்கு, 'என்ஸாலமாமா லா நோசே பூயூனா' என்று பெயர். ஏராளமான பலவகைப் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதில், வண்ண வண்ண மிட்டாய்களைக் கொண்டு அலங்கரித்திருப்பார்கள்.
  • ருமேனியாவில் டர்டே என்பது ஒரு விசேஷமான கேக், பல மடிப்புகளோடு கூடியதாக இருக்கும். குழந்தை இயேசுவை எப்படிப் பல மடிப்புகளுடைய துணிக்குள் அன்னை மேரி வைத்து அரவணைத்தாளோ, அதை இந்த வகை கேக் நினைவுறுத்துவதாக ஐதீகம்.கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com