மைசூர் மன்னர் பரம்பரையில் முக்கியச் சின்னமாகக் கருதப்படுவது தங்க அம்பாரி. சுமார் 400 கிலோ எடைகொண்ட தங்கச் சிம்மாசனத்தைத் தயாரிக்க தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம், வைடூரியம், மாணிக்கம் மற்றும் சந்தனக்கட்டை, யானை தந்தங்கள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மன்னர்கள், நவராத்திரி விழா நாட்களில் இந்தத் தங்க அம்பாரியில் அமர்ந்து தர்பார் நடத்துவதோடு, அரசாட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களுக்குத் தானம், தர்மம் செய்வது வழக்கம்.
தவிர, விஜயதசமி நாளில் தங்க அம்பாரியை யானை மீது பொருத்தி அதன் மீது மன்னரை அமரவைத்து வீதி உலா அழைத்து வரப்படுவார்.
இந்திய நாடு சுதந்திரம் பெற்றபின், மன்னராட்சி மறைந்து, மக்களாட்சி மலர்ந்த பிறகு, விஜயதசமி ஊர்வல நாளில் தங்க அம்பாரி மீது சாமுண்டீஸ்வரி தேவியை அமரவைப்பது வழக்கமானது. இதனைக் காணவே லட்சக்கணக்கான மக்கள் மைசூர் தசரா விழா நாளில் கூடுகின்றனர்.
தங்க அம்பாரி குறித்து கூறும் வரலாறு:
மன்னர் குடும்பச் சின்னமான இந்த அம்பாரி, மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. யது வம்சத்தைச் சேர்ந்த
22 மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர். மூன்று பகுதிகள் கொண்ட இந்த சிம்மாசனத்தைக் கட்டமைக்க ஒரு மணி நேரம் ஆகும்.
வரலாற்றுப்படி அஸ்தினாபுரத்தை ஆண்ட தர்மராயா மன்னர் முதலில் பயன்படுத்தியுள்ளார். பின்னர் மைசூர் மகாராஜா இதைக் கைப்பற்ற, மைசூரு மன்னர்கள் உபயோகப்படுத்தி வந்தனர்.
மூன்று முக்கிய பாகங்களைக் கொண்ட அம்பாரியை இணைத்தபின்பு, மாவிலை, வாழை இலை கொண்டு அலங்கரிக்கப்படும். இதில் சிவன், பிரம்மா, விஷ்ணு உருவங்களும், சந்தனத்தால் ஆன சிங்க முகங்களும் இடம் பெற்றிருக்கும். சிம்மாசனத்தில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தங்கக் குடை மீது சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருக்கும்.
விஜயதசமி (5.9.22) அன்று நடைபெற விருக்கும் யானை ஊர்வலத்தில் 700 ஆண்டுகால வரலாற்றினைக் கொண்ட தங்க அம்பாரியைக் காணவும், சாமுண்டீஸ்வரி தேவியை வணங்கவும் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து திரளாகக் கூடுவார்கள்.