கார்காலத்தில் வறண்ட சருமத்தை எப்படி பராமரிக்கலாம்? இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்!
பொதுவாகவே கார்காலம் எனப்படும் மழைக்காலம் வந்து விட்டாலே நமது சருமம் பாதிப்புக்கு உள்ளாவது இயற்கையான விஷயம். காற்றில் கலந்திருக்கும் பனி நமது தோலின் ஈரத் தன்மையை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும்.
மழைக்காலத்தில் வெகு சீக்கிரம் சருமம் உலர்ந்து போவதிலும் முக்கியமாக சருமத்தில் வெடிப்புகள் வருவதும் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான். இந்தப் பிரச்சனைகளை அழகு நிலையம் செல்லாமல் நமது வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே நீக்கினால் நல்லது என்பதே பலரின் எண்ணம்.
இதோ உங்களுக்காகவே சரும பராமரிப்புக்கு உதவியாக இருக்கும் கெமிக்கல் அற்ற இயற்கை வழிமுறைகளை குறிப்பாக வீட்டிலிருந்து செய்யக்கூடிய எளிய வழிகளை வழங்குகிறார் அழகு கலை நிபுணர் புவனா.
வறட்சியை போக்கும் பாதாம் எண்ணெய்
பனியினால் முதலில் பாதிக்கப்படுவது நமது உதடுகளே. உதடுகளில் உள்ள வெடிப்புகளுக்கு பலர் லிப் பாம்களை தடவிக் கொள்வார்கள். ஆனால் கெமிக்கல் கலந்திருக்கும் லிப் பாம்களை விட பாதாம் ஆயில் உதடுகளை ஈரத்த்தன்மையுடன் வைத்திருப்பதில் சிறந்ததாக இருக்கும் இதில் பக்க விளைவுகளும் கிடையாது.
தேங்காய் எண்ணெய் மசாஜ்
உடல் வறட்சியை போக்க மாய்ஸ்சுரைஸ் கிரீம்களை உடல் முழுவதும் தடவுவதற்கு பதில் தேங்காய் எண்ணெயை உடல் எங்கும் பூசி நன்கு மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்துக் குளிப்பது உடலின் வறட்சியைப் போக்கி ஈரத் தன்மையை பாதுகாக்கும்.
ஆவாரம் பூ பேஸ் பேக்
எளிதாக கிடைக்கும் ஆவாரம் பூக்களை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி அதனை முகத்தில் பேஸ் பேக்காக வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினால் முகப்பொலிவாக இருக்கும்.
செம்பருத்தி பூ பேக்
செம்பருத்தி பூக்களுடன் பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து அதனை பேஸ் பேக்காக போடும்போது நல்ல ரிசல்ட் கிடைக்கும் .முக்கியமாக ஸ்கின் அலர்ஜி வராது.
ரோஸ் வாட்டர் பேக்
கடலை மாவு, சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் இவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேக்காக போடலாம். தொடர்ந்து வாரம் 3 முறை போட்டு வந்தால் சருமம் பட்டுப் போல ஆகும்.
கற்றாழை ஜெல் பேக்
கற்றாழை ஜெல் நமது சருமத்தின் ஈரத்தன்மையை காக்கும் ஒரு சிறந்த மருந்தாகிறது. கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து நமது சருமத்தின் மீது தடவி குளிக்கும்போது சருமம் அழகாகவும் மிருதுவாகவும் மாறும்.