இப்படிச் செய்தால் பறவைகளிடமிருந்து பயிரைப் பாதுகாக்கலாம்!
கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயிகள் முற்றிலும் வித்தியாசமான முறையில் பறவைகள் மற்றும் குரங்குகளிடமிருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்கின்றனர். இன்றளவும் இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயமே இருந்து வருகிறது. பல இடங்களில் கணிசமான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே இருக்கின்றனர். பல விவசாயிகள் தங்கள் பாரம்பரிய விவசாய முறைகளையே பின்பற்றுகின்றனர். சிலரால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், பாரம்பரிய விவசாயத்தையே செய்து வருகின்றனர். ஆனால், பாரம்பரிய முறைகளில் போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை. இதில் மற்றொரு பிரச்னையாக விலங்குகளும், பறவைகளும் பயிர்களை சேதப்படுத்திவிடுகின்றன.
நாம் ஒவ்வொரு விதமான பயிர்களை விவசாயம் செய்யும் போதும், அதற்கு விதவிதமான பாதுகாப்பு அம்சங்கள் தேவைப்படுகிறது. பெரும்பாலும் குரங்குகள் மற்றும் பறவைகள்தான் பயிர்களை சேதப்படுத்துவது அதிகமாக இருக்கும். அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்து அறுவடை செய்வதே விவசாயிகளுக்கு பெரும் சவாலானது. இவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கவே விவசாயிகள் கணிசமான தொகையை செலவு செய்கின்றனர். ஆனால், கர்நாடக விவசாயிகள் இந்தப் பிரச்னையை மிகவும் சுமூகமாகக் கையாள்கிறார்கள்.
விவசாய நிலத்தில் விளைபொருட்களை பறவைகளும், விலங்குகளும் நாசம் செய்யக்கூடாது என வைக்கோல் பொம்மை வைப்பது பல காலமாக இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, காவலுக்காகவும் ஆள் வைப்பார்கள். பின்னர் மின்சார வேலி, முள்வேலி போன்றவற்றை போட்டு பாதுகாப்பு செய்தால்தான் கொஞ்சமாவது லாபம் பார்க்க முடியும். ஆனால், இது எதுவுமே இல்லாமல் கர்நாடக விவசாயிகள் பயிர்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அதாவது, தங்களின் விவசாய நிலங்களைப் பாதுகாக்க பட்டாசு வெடிக்கின்றனர். இதனால் குரங்குகளும், பறவைகளும் வயல்வெளி அருகில் வருவதில்லை. இதுவும் ஒரு பழங்கால முறைதான் என்றாலும், இந்தப் பட்டாசை ஒரு வளைந்த குழாயில் வைத்து அவர்கள் வெடிக்கின்றனர். அப்போது எந்த திசையில் பறவைகள் இருக்கிறதோ அந்தத் திசையை நோக்கி பட்டாசு சத்தம் அதிகமாகக் கேட்டு அவை சிதறி ஓடுகின்றன. இதனால் குரங்குகளும் நொடிப்பொழுதில் மறைந்துவிடுகின்றன என்கின்றனர் விவசாயிகள். இதனால் பலனடைந்த விவசாயிகள் மற்ற விவசாயிகளுக்கும் இந்த முறையை பரிந்துரை செய்கின்றனர்.