காகிதப் பைகளின் பயன்பாட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காகித பைகளை பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காகித பைகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதன் பங்குடன், நம் பங்கு என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்!
குறைந்த ஆற்றல்:
பிளாஸ்டிக் பைகளுடன் ஒப்பிடும்போது காகிதப் பைகள் தயாரிப்பதற்கு குறைவான ஆற்றலே தேவைப்படும். அதாவது காகிதப்பை உற்பத்தியானது பெட்ரோ கெமிக்கல்களை சுத்திகரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற குறைவான ஆற்றல் படிநிலைகளை உள்ளடக்கியது. இது குறைவான கார்பன் உமிழ்வுக்கு வழிவகுக்கும் .காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் உதவும். ஆனால் பிளாஸ்டிக் தயாரிப்புக்கு அதிக ஆற்றல் மூலம் தேவைப்படும். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்திவிடும்.
மட்கும் தன்மை:
பிளாஸ்டிக் பைகளை ஒப்பிடும்போது காகித பைகள் எளிதில் மட்கும் தன்மை கொண்டவை .குப்பைகளில் குவிந்து கிடந்தாலும் கூட இயற்கையாக சிதைந்து விடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் விளைவிக்காது. மழை பெய்தாலும் ஓட்டைகளில் அடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் பிளாஸ்டிக் பைகள் மழை பெய்யும் போது வாய்க்கால்களில், ரோட்டோரங்களில் இருக்கும் சிறு சிறு துவாரங்களில் அடைப்புகளை ஏற்படுத்தி தண்ணீரை வடிய விடாமல் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். மேலும் பிளாஸ்டிக்கில் தேங்கி இருக்கும் நீர் கொசு வளர்ச்சியை ஏற்படுத்தும்.
புதுப்பிக்கத்தக்க வளங்கள்:
ஒரு பொருளை தொடர்ச்சியாக பயன்படுத்தினாலும் கூட குறிப்பிட்ட காலத்திற்குள் அவை தங்களை தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவை. இவை, புதுப்பிக்கத்தக்க வளங்களாக கருதப்படுகின்றன. சூரியன், காற்று, நீர் போன்றவை அதற்கு சிறந்த உதாரணங்கள். காகிதப்பை தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்கள் நடப்பட்டு பின்பு அந்த மரங்களில் இருந்து காகிதப்பை தயாரிப்பதற்கு வலியுறுத்தப்படுகிறது. இந்த வாழ்வியல் நடைமுறை மரங்கள் சீராக வெட்டப்படுவதை உறுதி செய்கிறது. காகித உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் தொடர்ச்சியாக கிடைப்பதற்கும் வழி வகுக்கிறது.
காலநிலை மாற்றம்:
காகிதப் பைகள் தயாரிப்பதற்கு பயன்படும் மரங்கள் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகின்றன. புவி வெப்பமடைவதற்கு காரணமான கிரீன் ஹவுஸ் வாய்வுகளில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடை கட்டுப்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கும் உதவுகிறது.
நம் பங்கு:
நாம் எவ்வளவு காகித பைகளை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு மரங்கள் நடுவதும் முக்கியமானது. நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியதும் அதுதான். வீட்டில் இடவசதி இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு மரம் என்றாவது நட்டு வளர்க்கலாம். அது இல்லாதவர்கள் பொது இடத்தில் நட்டு வளர்க்கலாமே! அப்படியும் இல்லை என்றால் குறைந்தபட்சம் வீட்டில் குழந்தை பிறந்தால், திருமணம் ஆனால், முதியவர்கள் இயற்கையை எய்தும்போது என்று நிகழ்வுகளின் போதாவது இதை செய்தால், சிறு துளி பெருவெள்ளமாய் பெருகுமே.
மரம் வளர்ப்போம்
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!