
விவசாயிகளுக்கான கடன் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை சுலபமாக்கும் பொருட்டு இணைய மூலமாகக் கிடைக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் முதுகெலும்பாக வேளாண் துறை விளங்குகிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் விவசாயத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் விளைநிலப் பரப்பும் மிகப் பெரியது. மேலும், இந்தியப் பொருளாதாரத்தில் விவசாய மற்றும் விவசாயம் சார்ந்த வர்த்தக நடவடிக்கையும் மிக முக்கியமான பங்காற்றுகிறது. இதனால் மத்திய அரசு இந்தியாவின் வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு தொடர் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய வேளாண் துறையின் சார்பில் விவசாயிகளுக்கான கடன் மற்றும் காப்பீட்டு நடைமுறைகளை இணைய வழியாக எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் அம்சங்களும் விவசாயிகளுக்கு எளிதாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தை டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வேளாண்மை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்திய விவசாயிகளுக்கான கடன் மற்றும் காப்பீட்டை மிக எளிதாகப் பெறுவதற்காகவும் கடந்த கால நடைமுறைகளை மாற்றி, அதை மிக எளிமையாக்கும் வகையிலும், ‘கிசான் ரிங்’ இணைய தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக வங்கிகளை தொடர்பு கொண்டு விவசாயிகள் கடன் பெற முடியும். மேலும், இதற்கான நடைமுறைகள் சுலபமாக்கப்பட்டு இருப்பதால் விரைவாக விவசாயிகள் பயனடைய முடியும். காலதாமதம் தடுக்கப்படும். வரவு, கடன் விவரம், வட்டி, மானியம், கோரிக்கை, முன்னேற்றம் போன்ற அனைத்து விவரங்களையும் இதன் மூலம் முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.
அடுத்தபடியாக, இல்லம்தோறும் கேசிசி கடன் அட்டை, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு விவசாயிகளுக்கும் கடன் மற்றும் காப்பீட்டை சுலபமாகக் கொண்டு செல்ல பிரச்சாரமாகவும், விழிப்புணர்வாகவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக நபார்ட் வங்கியுடன் முதன்மை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
விண்ட்ஸ் கையேடு வெளியீட்டின் மூலம் விவசாயிகள் தெளிவான காலநிலை, சூழல்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் சூழலை பார்த்துப் பயிடுவதற்கு வசதி ஏற்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.